செவ்வாய், 6 நவம்பர், 2012

சத்தமில்லாமல் ஒரு தீபாவளி!




இந்த ஊருக்கு வந்த வருடம். சென்னையில் தீபாவளி கொண்டாட வா என்று அழைத்தும் போகாமல் இங்கேயே கொண்டாட முடிவு செய்தோம்.
புது ஊர்ல கொண்டாடலாம் என்று துணிமணிகள் எல்லாம் வாங்கியாகி விட்டது.
தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பு பட்டாசு வாங்கலாம் என்று கிளம்பினோம். கடைகடையாக ஏறி இறங்கியது தான் மிச்சம். பட்டாக்கி வரவே இல்லை என்றார்கள்.
‘ச்சே! ஒழுங்கா சென்னையிலேயே இருந்திருக்கலாம்…..’ குழந்தைகள் இருவரும் வெறுத்துப் போயினர்.
நம்மூரில் பொட்டிக் கடையில் கூட பட்டாசு கிடைக்கும். இங்கு என்ன இப்படி? யோசனையுடன் தோழியைக் கேட்டேன்.
பல வருடங்களுக்கு முன் மிகப் பெரிய தீ விபத்து பட்டாசுக் கடையில் ஏற்பட்டதினால் தீபாவளிக்கு ஒரு வாரம் முன் வரை எங்கேயும் பட்டாசு விற்பனை கிடையாது. விற்பனை காலி திடல்களில் தான் நடக்கும்; கடைகளில் பட்டாசு கிடைக்காது என்ற விவரம் தெரிந்தது.
என்ன செய்வது? காத்திருக்க வேண்டியதுதான்.
ஒரு வழியாக ஊருக்கு வெகு தொலைவில் கடைகள் போடப்பட்டு பட்டாசுகள் வாங்கியும் ஆச்சு.
நம்மூர் வழக்கப்படி நான்கு மணிக்கே குழந்தைகளை எழுப்பி நலங்கு இட்டு, தலையில் எண்ணெய் வைத்து கங்கா ஸ்நானம் ஆயிற்று. எல்லோரும் புதுசு உடுத்திக் கொண்டு தீபாவளி மருந்து சாப்பிட்டு, பட்டாசு பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினால்……………..
ஊரே தூங்கிக் கொண்டிருக்கிறது. வீதியில் ஈ காக்கா இல்லை. அவையெல்லாம் விடிந்துதானே வரும்! பெயருக்குக் கூட ஒருவரும் இல்லை. நிசப்தம்!
‘நாம வெடி வெச்சு எல்லாரையும் எழுப்பலாம்மா!’
மகன் சொன்னான்.
‘அதெல்லாம் தப்பு!’ என் கணவர் சொல்லிவிட்டு திரும்ப மாடிக்குப் போய் விட்டார்.
‘இதுக்குதான் சென்னையிலேயே இருந்திருக்கலாம்….. இங்க வந்ததுதானால கன்னட வேற படிக்கணும்…!’ குழந்தை முணுமுணுத்துத்தான்.
அவரவர்கள் வருத்தம் அவரவர்களுக்கு!
எல்லோரும் வீட்டுக்குள் போய் உட்கார்ந்தோம். சரி விடிந்தவுடன் பட்டாசு வெடிக்கலாம் என்று குழந்தைகளை சமாதானப்படுத்தினேன்.
விடிந்தும் நிலைமையில் முன்னேற்றம் இல்லை. அன்று முழுதும் பட்டாசு சத்தம் மட்டுமல்ல; பண்டிகைக்கு உண்டான அறிகுறியே இல்லை.
பெங்களூர் காரர்கள் கொஞ்சம் நிதானம் தான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஊரே ‘வயசாளிகளின் சுவர்க்கம்’ என்றுதானே அழைக்கப்படுகிறது! ஆனாலும் இப்படியா?
மறுபடி தோழியை கேட்டேன்.
‘அதுவா? இன்னிக்கு அமாவாசை. அமாவாசையன்று ஒன்றுமே பண்ணமாட்டோம்! நாளைக்கு பலி பாட்யா (பிரதமை) தான் கொண்டாடுவோம். நேற்று சதுர்த்தசி – நீர் நிறைக்கும் பண்டிகை. நீர் பிடித்து வைக்கும் பாத்திரங்களை நன்றாக கழுவி நீர் நிறைத்து வைப்போம்….’
‘பட்டாசு எப்போ வெடிப்பீங்க?’
‘நாளைக்குத் தான் பட்டாக்கி வெடிப்போம்!’
சரி நாமும் நாளைக்கு வெடிக்கலாம் என்று குழந்தைகளை சமாதானப்படுத்தி விட்டு அன்றைய பொழுதைக் கழித்தோம்.
அடுத்த நாளும் சத்தமே இல்லை.
‘இந்த ஊருல சத்தமில்லாத பட்டாக்கி இருக்குமோ?’
பகல் பொழுது போயிற்று. என் பிள்ளைக்கு 6 வயது. பட்டாசை எடுப்பதும் என் கணவரின் முகத்தை பார்ப்பதுமாக……
சாயங்காலம் சிறிது சத்தம் கேட்டது தூரத்தில். குழந்தைகள் இருவரும் துள்ளிக்குதித்து கொண்டு கீழே இறங்கினர். கூடவே நாங்களும் போய் பட்டாசு வெடித்தோம்.
தீபாவளிக்கு அடுத்த நாள் பட்டாசு வெடித்தவர்கள் நாங்களாகத்தான் இருப்போம்.
இப்போது இதெல்லாம் பழகி விட்டது. தீபாவளியன்று நாங்களும் மெதுவாக எழுந்து…..நிதானமாக குளித்து…….அதைவிட நிதானமாக பட்டாசு வெடித்து………!
பெங்களூர் வாசிகளாகி விட்டோம்!
இந்த ஊரின் தலைமை செயலகத்துக்கு என்ன பெயர் தெரியுமோ?
விதான சௌதா என்றால் உங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண். ஆனால் அதன் செல்லப் பெயர் : நிதான சௌதா!
எல்லாமே நிதானம் தான்! கோன் எப்படியோ அப்படித்தானே குடிகளும்?

4 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் அம்மா...

    உங்கள் தளம் 'நண்பர்கள் பின்பற்றுதல்' (Followers Widget) சோதனை முயற்சியில் உள்ளதால் பிறகு அதனை சேர்கிறேன்...

    நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
  2. //விதான சௌதா என்றால் உங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண். ஆனால் அதன் செல்லப் பெயர் : நிதான சௌதா!//

    ஆஹா! இதே ’விதான் செளதா’வுக்குள் [சட்டமன்றம் கூடுமிடம்] நானும் ஒருசில நண்பர்களும் நிதானமாக உள்ளே புகுந்து பார்த்து ரஸித்து வந்தோம். அது சட்டசபை கூடாததோர் நாளாகும்.

    சுமார் 35 வருடங்களுக்கு முன்பு - அதாவது 30.12.1975 அன்று என ஞாபகம்.

    துபாய் போன்ற வெளிநாடுகளிலும், வீட்டிலோ தெருவிலோ பட்டாஸுகள் வெடிக்கத் தடை செய்துள்ளார்கள். அதற்கு என ஒரு குறிப்பிட்ட மைதானம், குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம். எல்லோரும் அவரவர் கார்களில் சென்று கூடி கொளுத்தி மகிழ்வார்களாம். அத்தோடு சரி.

    நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள். அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  3. இப்போதெல்லாம் விதான சௌதாவிற்குள் யாருமே போக முடியாது. ஒரு காலத்தில் அங்கு போய் அதன் அகலமான படிகளில் உட்கார்ந்து கொண்டு காலத்தைக் கழிப்போம். இப்போது அதன் அருகில் கூட யாரும் போக முடியாது.

    உங்கள் கருத்துரை வந்தால்தான் பதிவுக்கே ஒரு அழகு வருகிறது.

    நன்றி வைகோ ஸார்!

    பதிலளிநீக்கு