வெள்ளி, 20 டிசம்பர், 2013

மெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்









‘என் கணவர் சுயமாக மருந்து சாப்பிடும் பழக்கமுள்ளவர். ஒரு சின்ன தலைவலி என்றால் கூட உடனே மருந்து போட்டுக்கொள்ளுவார். இதைப் பற்றி எங்கள் மருத்துவரிடம் ஒருமுறை சொல்லி, அவருக்கு அறிவுரை கூறும்படி கேட்டுக்கொண்டேன். மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா? படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லோருமே இதைப்போல செய்கிறார்கள். நான் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். தாங்களாகவே தங்களுக்குத் தெரிந்த கொஞ்சநஞ்ச மருத்துவ அறிவை (!!) வைத்துக் கொண்டு மருந்துக் கடைக்குப் போய் வாங்கி வருவார்கள். ஏதாவது ஏடாகூடம் ஆனால் ஓடி வருவார்கள். சரியானவுடன் மறுபடி ஆரம்பிப்பார்கள்.  இவர்களைக் கடவுளே வந்தால்கூடத் திருத்த முடியாது!’

என் தோழி ஒருவர் கூறிய தகவல் இது. 



இப்படி மருந்துக் கடைகளில் போய் வாங்குபார்களின் கதி என்ன என்று எனக்கு வந்த ஒரு forwarded செய்தியை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:
தகவல், நன்றி : திரு அனந்தநாராயணன்



காய்ச்சல், தலைவலி, பல்வலி, உடல் வலி என எந்த சிறு உபாதையாக இருந்தாலும் நாம் முதலில் செய்யும் காரியம்... மெடிக்கல் ஷாப்களுக்கு சென்று நமக்கு ஏற்பட்டுள்ள உபாதைகளை கூறி மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடுவதுதான். அதிலும் குணமாகாவிட்டால்தான் டாக்டர்களை நாடி செல்கிறோம். அந்த வகையில், நாம் மெடிக்கல் ஷாப்கள் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளோம்.



அப்படிப்பட்ட மெடிக்கல் ஷாப்களில் நமக்கு சரியான மருந்து, மாத்திரை தான் தருகிறார்களா என்பதை பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. அதைப்பற்றி எண்ணிப்பார்ப்பது கூட கிடையாது. மாத்திரையின் பேரே தெரியாமல் சாப்பிடுகிறோம். அந்தளவுக்கு மெடிக்கல் ஷாப்களை கண்மூடித்தனமாக நம்புகிறோம்.



ஆனால், உண்மை என்னவென்று பார்த்தால், பெரும்பாலான மெடிக்கல் ஷாப்களில் சரியான மருந்தை தேர்வு செய்து தரக்கூடிய பார்மாசிஸ்ட்டுகளே இருப்பதில்லை என்பதுதான். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அதிரடி சோதனை முடிவுகளும் இந்த உண்மையை நிரூபித்து பீதியை கிளப்பி உள்ளது.



தற்போது சென்னையில் தெருவுக்கு தெரு மெடிக்கல் ஷாப்கள் முளைத்து விட்டன. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பல மெடிக்கல் ஷாப்களும் உண்டு. சாதாரண கடையை போல மெடிக்கல் ஷாப்களை அவ்வளவு எளிதில் யாரும் வைத்து விட முடியாது.



டிப்ளமோ இன் பார்மாசிஸ்ட் படித்த ஒருவரது மேற்பார்வையின் கீழ்தான் மெடிக்கல் ஷாப்கள் இயங்க வேண்டும். அந்த துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் ஷாப் வைக்க அனுமதி வழங்கப்படும்.ஆனால், வெறும் லாப நோக்கத்தை மட்டுமே குறியாக கொண்ட சில மெடிக்கல் ஷாப்கள், டி.பார்ம் படித்த உறவினர்களின் சான்றிதழை வைத்து கடையை திறந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட கடைகளில் பார்மாசிஸ்ட்டுகளே இருப்பதில்லை. மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்த அனுபவத்தின் அடிப்படையில் மருந்துகளை தருகின்றனர். அதையும் மக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.



இதனால், தவறான மருந்துகளை தர வாய்ப்புள்ளது, அப்படி தவறான மருந்தை நாம் சாப்பிடுவதால் பயங்கர எதிர்விளைவுகளை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்கின்றனர்.



இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ‘தமிழகத்தில் பார்மாசிஸ்ட்டுகளே இல்லாமல் இயங்கக் கூடிய மெடிக்கல் ஷாப்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய கடைகளில் வேலை பார்ப்பவர்கள், டாக்டர் சீட்டில் என்ன மருந்து எழுதியிருக்கிறார் என்பதே தெரியாமல் வேறு மருந்து மாத்திரைகளை தர வாய்ப்புள்ளது. படித்த சிலர் மட்டுமே இந்த விஷயத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். சாதாரண பாமர மக்களோ, மெடிக்கல் ஷாப்பில் தரும் மாத்திரையை அப்படியே வாங்கி செல்கிறார்கள். இதை தடுக்க நாங்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தி வருகிறோம்.



கடந்த 2009&10ம் ஆண்டில் 215 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 52 கடைகளில் பார்மாசிஸ்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. 2010, 11ம் ஆண்டில் 300 கடைகளில் சோதனை நடத்தி, 85 கடைகள் சிக்கின. 2011&12ல் 202 கடைகளில் சோதனை நடத்தி 86 கடைகளும், 2012&13ல் 228 கடைகளில் சோதனை நடத்தி 106 கடைகளும் பிடிபட்டுள்ளன. இந்தாண்டு நவம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட சோதனையில் 132 கடைகளில் 61ல் பார்மாசிஸ்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பார்மாசிஸ்ட் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கிறோம். அவர்களின் லைசன்சை ரத்து செய்வதற்கு கூட சட்டத்தில் இடமுண்டு. தமிழகம் முழுவதும் 38 சதவீத மெடிக்கல் ஷாப்களில் பார்மாசிஸ்ட்கள் இல்லை என்பது சோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அதனால், மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழகத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்களின் எண்ணிக்கைக்கு நாங்கள் நடத்தியிருக்கும் சோதனை மிக குறைவுதான்.



ஆனாலும், எங்கள் துறையில் போதிய அளவுக்கு மருந்து இன்ஸ்பெக்டர்கள் இல்லாததால் பெரிய அளவில் சோதனை நடத்த முடியவில்லை. இருந்த போதிலும், தொடர் சோதனையால் பெரும்பாலான கடைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, சென்னையின் பல முக்கிய இடங்களில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் காலாவதியான மருந்து, மாத்திரை விற்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’



பார்மாசிஸ்ட் எதற்கு தேவை?

ஒவ்வொரு மெடிக்கல் ஷாப்பிலும் பார்மாசிஸ்ட்  எதற்கு தேவை என்றால், அவர் வெறும் மருந்து, மாத்திரை எடுத்து தருவதற்கு மட்டுமல்ல, டாக்டர் தரும் மருந்து சீட்டையும் கவனிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. டாக்டர் தவறுதலாக தவறான மருந்தை எழுதி கொடுத்திருக்கிறாரா என பார்மாசிஸ்ட் பரிசோதிக்க வேண்டும்.



பெரிய நோய்களுக்கு மருந்து எழுதி கொடுத்த டாக்டர் அதற்கான ஸ்பெஷலிஸ்டா என்பதை பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்து வாங்குபவரிடம் விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.ஏஜென்சிகளிடமிருந்து மருந்தை வாங்கும் போது, அந்த கம்பெனி, மருந்துகளின் காலாவதி தேதி ஆகியவற்றையும் கவனித்து பார்க்க வேண்டும்.



மக்கள் கவனத்துக்கு...

·         மிகக்குறைந்த விலைக்கு மருந்து தருபவர்களிடம் வாங்க வேண்டாம்.

·         மருந்து, மாத்திரை வாங்கினால் அவற் றின் பெயரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

·         காலாவதி தேதியை பார்க்க வேண்டும்.

·         டாக்டர் மருந்து சீட்டுடன்தான் மருந்து வாங்க வேண்டும்.

·         அனுமதி பெற்ற மெடிக்கல் ஷாப்களில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்.

·         நடைபாதை கடைகளில் அழகு சாதன பொருட்களை வாங்கக்கூடாது.




உங்கள் ஏரியா மெடிக்கல் ஷாப்கள் தவறான மருந்தை தந்ததாலோ அல்லது அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டாலோ 044-24335201, 24335068 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தரலாம்.