வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி





நம் எல்லாருக்கும் பல வருடங்களாக வெள்ளை அரிசிதான் தெரியும். அதுதான் சமைக்க சுலபம். வெள்ளை வெளேரென்று மெத்தென்று பார்க்கவே அழகாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும். ஆனால் சத்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிலிருந்து நமக்குக் கிடைப்பது மிக மிகக் கொஞ்சம். தற்போது சிவப்பு அரிசியின் நன்மைகளை அறிந்துக்கொண்டு பல நாடுகளிலும் மக்கள் சிவப்பு அரிசியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

சிவப்பு அரிசியை தீட்டப்படாத அரிசி (unpolished) என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும் சொல்லுகிறார்கள். அதன் நிறம் பிரவுன் அல்லது சிவப்பாக இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் (உமி) எனப்படுகிறது. இதற்கு அடுத்த மேல்தோல் மெல்லியதாக பிரவுன் நிறத்தில் இருக்கும் இந்த மேல்தோல் தவிடு எனப்படுகிறது. நாம் சாப்பிடும் வெள்ளை அரிசி மறுபடி மறுபடி தீட்டப்பட்டு அத்தனை சத்துக்களும் இழந்த பின் கிடைப்பது.

 இந்த சிவப்பு அரிசி ஓர் முழு தான்யமாக இருப்பதை தவிர, நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நார்சத்து நிறைந்து இருப்பதுடன், சுலபமாக செரிக்கக்கூடிய மாவுச்சத்தும் இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது.

இந்த நார்சத்து புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக் கொள்ளுவதால், கோலோன் புற்றுநோய் தடுக்கப் படுகிறது.

மேலும் மலக்கட்டு ஏற்படாமல், மலம் சுலபமாக வெளியேறவும் உதவுகிறது.

இதில் இருக்கும் கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

 ஒரு கிண்ணம் சிவப்பு அரிசியில் நமக்கு தினப்படி வேண்டிய 8% மாங்கநீசும் (magnesium) 14% நார்சத்தும் கிடைக்கிறது.

புளிக்க வைக்கப்பட்ட சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப் புற்று நோய்கள் வராமல் காக்கக்கூடிய தன்மைகள் இருக்கின்றன.

சமைக்கும் முறை:

வெள்ளை அரிசியைவிட சமைப்பதற்கு அதிக நேரம் ஆவதால் சாதம் செய்வதற்கு முன் 30-40 நிமிடங்கள் ஊறவைப்பது நல்லது. சாதம் செய்யும் போது ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு நீர் ஊற்றலாம்.

வெள்ளை அரிசியில் செய்வது போலவே இதிலும் பயத்தம்பருப்பு சேர்த்து பொங்கல் செய்யலாம். செய்முறை அதே போலத்தான்.

சிவப்பு அரிசியில் செய்யும் தோசையும் மிக ருசியாக இருக்கும். 2½ கிண்ணம் அரிசிக்கு ½ கிண்ணம் உளுத்தம்பருப்பு என்ற அளவில் சிறிது வெந்தயமும் சேர்த்து அரைத்து இரவு புளிக்க வைத்து மறுநாள் செய்யலாம்.

கடைசியாக ஒரு குறிப்பு:

இந்த அரிசியிலிருந்து எண்ணெய் எடுக்கப் படாததால் சீக்கிரமே கெட்டுப் போய்விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். வாங்கும்போது காலாவதியாகும் தேதி பார்த்து வாங்கவும்.




திங்கள், 1 ஏப்ரல், 2013

அட! இது நம்ம தினம்!



இன்று நம்  எல்லோருக்கும் மிகப் பிடித்தமான தினம்; நம்மை நாமே கொண்டாடிக் கொள்ளும் தினம். முட்டாள்கள், முட்டாள்களை முட்டாள்கள் ஆக்கி மகிழும் தினம். இப்போது புரிந்திருக்குமே? ‘All Fools Day’ என்று அழைக்கப்படும் ஏப்ரல் 1 ஆம் தேதியைப் பற்றித்தான் சொல்ல வருகிறேன். 

எல்லோருமே ஜாலியாக சிரித்துக் கொண்டு ஒருவரையொருவர் சீண்டிகொண்டு நாம் முட்டாள்கள் தான் என்பதை ஒப்புக் கொள்ளவே இந்த தினம். இதை யாருமே தவறாக புரிந்து கொள்ளுவதோ  அல்லது அடுத்தவர் நம்மை முட்டாளாக்கியவுடன்  ‘விட்டேனா பார்’ என்று ஆத்திரமடைவதோ கூடாது.

அதேபோல முட்டாள் ஆக்க விரும்புவோர் அடுத்தவரது மனம் புண்படாமல் அதே சமயம் ‘ஓ! இந்தச் சின்ன விஷயத்தில் ஏமாந்து விட்டோமே என்று அவர் வாய்விட்டு சிரிக்கும்படியாக விளையாட வேண்டும். விளையாட்டு மட்டும்தான் குறிக்கோளாக இருக்கவேண்டும். எல்லை மீறாமல் இருந்தால் தொல்லைகள் இல்லை, அல்லவா?

சரி இந்த முட்டாள்கள் தினம் எப்படி வழக்கத்தில் வந்தது?

ஐரோப்பியர்கள் பல நூற்றாண்டுகளாக ஜூலியன் நாட்காட்டியைத்தான் பயன்படுத்தி வந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் நடுவில் கிரிகோரியன் நாட்காட்டி புழக்கத்தில் வந்தது. பழைய நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதத்தில்தான் புது வருடம்  ஆரம்பம். ஆனால் புதிய நாட்காட்டியில் ஜனவரியிலிருந்து புது வருடம் கணக்கிடப்பட்டது. இந்த மாற்றம் பல குழப்பங்களை உண்டு பண்ணியது. யாரெல்லாம் பழைய பஞ்சாங்கமாக இருந்தார்களோ அவர்கள் ‘முட்டாள்கள்’ என்று முத்திரை குத்தப் பட்டார்கள். காலப்போக்கில் இந்த தினம் மற்றவர்களை விளையாட்டாக, வேடிக்கையாக முட்டாள் ஆக்கும் தினமாக மாறி இன்றுவரை நிலைத்துவிட்டது.

இன்னொரு கதையும் வழக்கில் இருக்கிறது. ரோமானிய அரசன் கான்ஸ்டன்டைன் என்பவனது ஆட்சி பலத்த சர்ச்சைக்கு உள்ளானபோது, அவன் தனது அரசவை கோமாளி கூகல் என்பவனையும், தனது பழங்குடியினரையும் ஒரு நாள் நாட்டை ஆளச் சொன்னானாம். கோமாளிகள் உண்மையில் மிகுந்த புத்திசாலிகள்; வாக்கு சாமர்த்தியத்துடன் கூடிய வேடிக்கை பேச்சுக்கள் பேசுவதில் சமர்த்தர்கள். ஆனாலும் அவர்களை அந்தக் காலத்தில் முட்டாள்கள் என்று அழைப்பது வழக்கமாக இருந்தது. கோமாளிகள் ஆட்சி செய்த அந்த ஒருநாள் தான் All Fools Day. அப்போதிலிருந்து இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி ‘முட்டாள்கள்’ தினமாக உலகெங்கிலும் மிகப் பெரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.



இந்த  ‘முட்டாள்கள்’ தினத்தில் நாம் முட்டாள்கள் ஆனாலும் சரி, பிறரை முட்டாள்கள் ஆக்கினாலும் சரி, மனம் புண்படாமல் பண்பாக விளையாடுவோம்.

முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!




published in ooooor.com 31.3.12