செவ்வாய், 12 ஏப்ரல், 2016

நானும் எனது பட்டுப்பாவாடைகளும்!



எமக்குத் தொழில் அசைபோடுதல் 17



          

நன்றி: விக்கிபீடியா



இலவச மதிய உணவு திட்டம் போலவே இலவச சீருடையும் பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் நான் படித்த அரசு நடுநிலைப்பள்ளியில் நாங்கள் எல்லோருமே கலர் யுனிபார்ம் தான் (அதாவது கலர் டிரஸ்) போட்டுக்கொண்டுதான் வருவோம். அதுவும் நான் எப்பவும் பட்டுப்பாவாடை தான்! என் அக்கா அப்போது திருவல்லிக்கேணி NKT பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். அங்கு சீருடை. அதனால் அவளது பாவாடைகளையும் நான் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போவேன்.

என் பெரியம்மாவின் பெண்கள் (இரண்டு பேர்) போட்டு கொஞ்சம் பழையதான பாவாடைகளும் எனக்கு வந்துவிடும். என் அம்மாவின் கூறைப்புடவை, பெரியம்மாவின் கூறைப்புடவை எல்லாம் பாவாடைகளாக மாறி என்னால் அணியப்பட்டிருக்கின்றன. என் அம்மாவின் கருப்புக்கலர் கெட்டி ஜரிகை தலைப்பு மஜந்தா கலர் புடவை  இரண்டு பாவடைகளாயிற்று. மஜந்தா கலர் பாவாடை ஒன்று. அதனுடைய கருப்புக்கலர் கெட்டி ஜரிகை தலைப்பு இன்னொரு பாவாடை! அதேபோல பாவாடைகள் ஆக மாறிய என் பெரியம்மாவின் புடவைகள் என்று நிறைய பாவாடைகள் அதுவும் பட்டுப்பாவாடைகள்!  

பட்டுப்பாவாடையை விட்டால் சீட்டி என்று ஒருவகைத் துணி வரும். அதிலும் பலபல வண்ணங்களில் பாவாடைகள் போட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வகைத் துணிகளிலும் தனியாக பார்டர் போட்டு வரும். குறிப்பாக முயல்குட்டி பார்டர் போட்டு வரும் பாவாடை என் தோழிகள் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்துவிட்டு நானும் என் அப்பாவிடம் கேட்டேன். வாங்கிக்கொடுத்தார். ஆனால் அம்மா அது என் அக்காவிற்கு என்று சொல்லியவுடன் ரொம்பவும் நொந்துவிட்டேன். என் அப்பாவிடம் கேட்டபோது ‘எப்படியும் அது உனக்குத்தானே வரப்போறது, இப்போ போகட்டும் விடு!’ என்று சொல்லிவிட்டார். என்ன இருந்தாலும் புதுசு போல வருமா?

எப்போதுமே பாவாடைதான். ஃப்ராக் போட்டதே கிடையாது. நான் படித்த பள்ளிகளிலும் யாரும் அந்தக்காலத்தில் கவுன் என்று அழைக்கப்பட்ட ஃப்ராக் போட்டது கிடையாது. ஒருவேளை அந்த நாகரீகம் எல்லாம் அப்போது வரவில்லையோ என்னவோ. பாவாடைகளை என் அம்மாவே தைத்துவிடுவாள். அப்போது மேட்சிங் ஆக போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அறிவெல்லாம் வந்திருக்கவில்லை. என் அம்மாவின் மொழியில் சொல்லவேண்டும் என்றால் ‘கருப்பு ரவிக்கை ஒன்று, வெள்ளை ரவிக்கை ஒன்று இருந்தால் போதும், எல்லாக்கலர் பாவாடைகளுக்கும் இவை மேட்ச் ஆகும்’ என்றும் சொல்லலாம்.

அம்மாவே எங்களுக்கு ஃபாஷன் டிசைனர் ஆக இருந்ததால் இத்தனை பட்டுப்பாவாடைகள் சாத்தியம் ஆயிற்று என்று தோன்றுகிறது. அம்மாவிடம் ஒரு கை தையல் இயந்திரம் இருந்தது. அம்மா அதை ரொம்ப ரொம்ப பத்திரமாகப் பார்த்துக் கொள்வாள். வலது கையால் சக்கரம் போல இருப்பதை சுற்றிக்கொண்டு இடது கையால் துணியைக் கொடுக்க வேண்டும். கால் தையல் இயந்திரத்தில் இருக்கும் பெரிய சக்கரம் இங்கே சின்னதாக வலது பக்கம் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு கைப்பிடியுடன்.

தையல் இயந்திரம் ஒரு சின்ன மணை மீது இருக்கும். அம்மா தரையில் உட்கார்ந்து கொண்டு தைப்பாள். இன்னும் இருக்கிறது அந்த தையல் இயந்திரம் அக்கா வீட்டுப் பரண் மேல். அம்மா அதை ரொம்ப ரொம்ப பத்திரமாகப் பார்த்துக் கொள்வாள். நாங்கள் யாரும் அதன் அருகில் கூட போகக்கூடாது. அம்மா நல்ல மூடில் இருந்தால் சக்கரத்தை சுற்ற எங்களுக்கு அனுமதி கிடைக்கும். அப்போது அம்மா இரண்டு கைகளாலும் துணியை இயந்திரத்தில் கொடுப்பாள். சுற்றுவதும் அம்மாவின் வேகத்திற்கு சரியாக, அம்மா நிறுத்து என்றவுடன் நிறுத்தி மிக மிக ஜாக்கிரதையாக விழிப்புடன் இருக்க வேண்டும். என் அம்மாவிற்கு கோபம் அதிகம். தவறு செய்துவிட்டால் அடிதான்!

அந்தக்காலத்திலேயே அந்த இயந்திரம் அவுட் ஆப் பாஷன் தான். கிட்டத்தட்ட எல்லோர் வீடுகளிலும் கால் தையல் இயந்திரம் எனப்படும் பெடல் இயந்திரம் வந்துவிட்டது. அம்மா தைக்கும் சமயத்தில் யாராவது வீட்டிற்கு வந்தால் உடனடியாக கால் மிஷின் வாங்கிக்கொள்வது தானே என்ற இலவச அறிவுரை கிடைக்கும். ‘எனக்கு இதிலேயே பழகிவிட்டது. இதுவும் நன்றாகவே தைக்கிறது’ என்று அம்மா பதில் சொல்வாள்.

எனக்கு அந்த இயந்திரத்தில் பிடித்த விஷயம் பாபினில் நூல் போடுவதுதான். வலது பக்கம் இருக்கும் பெரிய சக்கரத்தின் அடியில், அதற்கென்று சின்னதாக ஒரு சக்கரம் இருக்கும். அதனுடன் பாபினை பிடித்துக்கொள்ள ஒரு சின்ன பிடிப்பான் இருக்கும். பாபின் உள்ளே இருக்கும் நூல் தண்டில் சிறிது நூலைச் சுற்றி பிடிப்பானின் இடையில் வைக்கவேண்டும். அந்த நூலை ஒரு கையால் பிடித்துக் கொள்ளவேண்டும். தையல் இயந்திரம் ஓடாதவாறு அந்தச் சக்கரத்தில் இருக்கும் ஒரு திருகியை இறுக்கிவிட வேண்டும். இப்போது பெரிய சக்கரமும் அதனுடன் இணைந்த சின்ன சக்கரமும் சுற்றும். நூல் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் போய்விட்டு வரும். நூல் தண்டில் நூல் அழகாக சுற்றப்படும்.

தையல் இயந்திரத்தின் இடது பக்கத்தில்தான் ஊசி இருக்கும். சக்கரம் சுற்றச்சுற்ற இந்த ஊசி மேலும் கீழும் போய் தையல் போடும் அழகே அழகு. கீழே போகும்போது அடியில் இருக்கும் பாபினிலிருந்து நூலை இழுத்துக் கொண்டு வரும். அந்தக்காலத்தில் எனக்கு இது ஒரு மிக அதிசயமான விஷயமாக இருந்திருக்கிறது. பாபினில் அம்மா நூல் சுற்றுவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அம்மா தைக்கும்போது அதை வேடிக்கைப் பார்ப்பதும் எனக்குப் பிடித்த ஒன்று. சிலசமயங்களில் நூல் சரியாக வராமல் மேலே மேலே தையல் விழும். அம்மாவே தனக்குத் தெரிந்த ரிப்பேர் வேலையெல்லாம் பார்த்தும் சரியாகாது. அப்போது சரியாக விழாத தையலை நான் பொறுமையாகப் பிரித்துக் கொடுப்பேன். அது அம்மாவிற்கு பெரிய உதவியாக இருக்கும்.

இப்படியெல்லாம் அம்மாவை சந்தோஷப்படுத்தி எனக்குள் இருந்த ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தேன். அது என்ன?

அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்.....


 அதீதம் இணைய இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடர்








திங்கள், 11 ஏப்ரல், 2016

இலவசக் கல்வியும் மதிய உணவுத் திட்டமும்



எமக்குத் தொழில் அசைபோடுதல் 16



பேனாவிற்கு இப்படியாக மசி கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்பதும் வெகு வேகமாக பள்ளிக்கூடம் முழுவதும் பரவியது. அப்போதுதான் இன்னொரு தோழி மீரா வந்து சொன்னாள்: பக்கத்து செட்டியார் கடையில் மசி கிடைக்கிறது என்று. ஆனால் கையில் பைசா வேண்டுமே அவர் கடையில் மசி வாங்கவேண்டும் என்றால். அது தான் எங்கள் எல்லோருடைய பிரச்னையுமே. பாக்கெட் மணி என்பதெல்லாம் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத காலம் அது. செட்டியார் கடையில் ஒரு பேனா நிறைய மசி வேண்டுமென்றால் அந்தக் காலத்தில் ஓரணா அல்லது இரண்டணா கேட்பாரோ என்னவோ, இப்போது நினைவு இல்லை. ஆனால் எல்லோருக்கும் ஒருமுறையாவது காசு கொடுத்து மசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி காசு வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன் ஒருநாள். எப்படா மதிய இடைவெளி வரும், ஓடிப்போய் செட்டியார் கடையில் பேனாவைக் கொடுத்து மசி போட்டுக்கொள்ளலாம் என்று ஒரு துடிதுடிப்புடன் இருந்தேன். ஏதோ ஒரு பெரிய சாகசம் செய்யப்போவதுபோல மனமெல்லாம் பரபரப்பு.

என்னாவாயிற்று என்று சொல்வதற்கு முன் செட்டியார் கடையைப் பற்றி சொல்லிவிடுகிறேன். கடையின் முன்பக்கம் இருப்பது வேறு பக்கத்தில். எங்கள் அரசு நடுநிலைப்பள்ளி அருகே இருக்கும் பாண்டுரங்கன் சந்நிதி அருகில் செட்டியார் கடையின் ஜன்னல் இருக்கும். நாங்கள் ஜன்னல் வழியாகவே மசி வியாபாரத்தை முடித்துவிடுவோம்.

மாணவிகள் பேனாக்களை ஜன்னல் வழியாக செட்டியாரிடம் கொடுப்பார்கள். அவர் கடையின் மேசை மீதிருக்கும் மசி புட்டியில் மசி நிரப்பானை விட்டு மேலே அழுத்துவார். மசி நிரப்பான் முழுக்க நிரம்பும். அதை அப்படியே எடுத்து பேனாக்களில் விடுவார். பெரிய பேனாக்கள் என்றால் ஒரே தடவையில் நிரம்பிவிடும். சின்னப் பேனாக்கள் என்றால் பாதி மசியை மசி புட்டியில் திரும்ப கொட்டிவிடுவார் செட்டியார். ஆனால் எல்லாவற்றிற்கும் காசு ஒரே கணக்குத் தான்.

மதிய சாப்பாடு இடைவெளி மணி அடித்தது. ‘அப்புறமா சாப்பிடலாம், இப்போ வா, செட்டியார் கடைக்குப் போய் மசி போட்டுக்கொண்டு வரலாம்’ என்று செங்கமலத்தை இழுத்துக் கொண்டு ஓடினேன். செட்டியார் கடையின் ஜன்னல் மூடியிருந்தது. என்னுடைய உற்சாகம் எல்லாம் வடிந்து போயிற்று. ‘ச்சே! அதிர்ஷ்டமே இல்லையடி, எனக்கு...!’ என்று கண்களில் நீர் தளும்ப பள்ளிக்குத் திரும்பினேன். செட்டியார் கடையின் மசி போட்டுக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் வீட்டில் மசி போட்டுக்கொண்டு வரவில்லை. மறுபடி செங்கமலத்திடம் மூன்று சொட்டு கடன் வாங்கிக் கொண்டு அன்றைய நாளை ஒப்பேற்றினேன்.

மேலே தொடர்வதற்கு முன், மிக முக்கியமான சரித்திர நிகழ்வுகள் சிலவற்றை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.


தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் சரித்திரத்தில் அந்த வருடங்களில் தான் சத்தம் போடாமல் ஒரு பெரிய புரட்சி நடந்து கொண்டிருந்தது. தமிழக முதல்வராக திரு காமராஜர் பதவியேற்றார். மதிய உணவு மற்றும் இலவசக் கல்வி, இலவச சீருடை ஆகியவற்றை அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சி செய்தார் பெருந்தலைவர் காமராஜர். அந்த வயதில் இவற்றைப் பற்றி எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதனால் இந்நிகழ்ச்சிகள் பற்றி இணையத்தில் நான் தேடி எடுத்தவைகளை இங்கே கொடுக்கிறேன்:

எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் திரு காமராஜர் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது. (நன்றி தமிழ் ஹிந்து பத்திரிகை)

தினமணி பத்திரிக்கையிலிருந்து எடுத்தது:
காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒருமுறை அவர் காரில் கிராமப்புறத்தில் பயணம் செய்தார். ஒரு இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு கார் நிறுத்தப்பட்டதால் காரிலிருந்து இறங்கி வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மக்களைச் சந்திக்க நேரிட்டது. காமராஜரை கண்ட ஆண்களும் பெண்களும் அவரை நோக்கி ஓடி வந்தனர். அவர்களின் நலம் விசாரித்த முதல்வர் அவர்களுடன் பல சிறுவர்களும் சிறுமியரும் நின்று கொண்டிருந்ததைக் கவனித்தார்.

""இவர்களெல்லோரும் பள்ளிக்கூடம் செல்லவில்லையா?'' என கேட்டார். ""ஐயா, எங்களிடம் வசதி இல்லை'' என்ற பதில் வந்தது.

பள்ளிக் கல்வி இலவசம் என்ற நிலைமையில், அவர்கள் வசதியில்லை எனக் குறிப்பிட்டது மதியம் குழந்தைகளுக்காகும் உணவுச் செலவு என்பதை அவர்கள் மூலம் தெரிந்துகொண்ட காமராஜர், சென்னை திரும்பியதும் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அது 1956-ஆம் ஆண்டு. அன்றைய நிலைமையில் வறுமையில் வாடிய சுமார் 20 லட்சம் குழந்தைகள், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தொடக்கக் கல்வி நிலையங்களில் ஆண்டுக்கு 200 நாள்கள் இந்த இலவச மதிய உணவை உண்டு பலனடைந்தனர். (நன்றி: தினமணி)


கீற்று இணையதளத்திலிருந்து:
ஓலைக்குடிசைகளையே உறைவிடமாகக் கொண்டிருந்த ஏழை மாணவர்களுக்கு, உணவு தந்து கல்வி கற்க வகை செய்த காமராஜர், அவர்களுக்கு உடையும் கொடுக்க முடிவு செய்தார். 1960-ம் ஆண்டு பள்ளிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டது. அது மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வைப் போக்கியது.

காமராஜர் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை ஒரு கடமையாக மட்டும் கருதாமல் அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைத்தார். “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற மகாகவியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டுவதற்கான காமராஜரின் சீரிய முயற்சிகளுக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றிணைந்து ஆதரவளித்தனர். மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதிலும், சீருடைகள் வழங்குவதிலும் மக்களும் துணை நின்றனர். இயன்றவர்கள் பலரும் பணமாகவும், பொருளாகவும் வழங்கினர். (நன்றி கீற்று இணையதளம்)

தொடர்ந்து அசை போடலாம்.....


அதீதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைத் தொடர்