ஞாயிறு, 17 மார்ச், 2013

ஆலிவ் ஆயில்





அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். உள்ளத்தில் நல்ல எண்ணம் இருந்தால் அது நம் முகத்தை பொலிவுறச் செய்யும் என்பது பொருள். நமது உள்ளழகு, வெளியழகு இரண்டுக்கும் ஆலிவ் ஆயில் மிகச் சிறந்தது. ஆலிவ் ஆயிலை சமையலுக்குப் பயன்படுத்துவதால் நமது உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்; அழகு சாதனமாக பயன் படுத்துவதால் வெளி உறுப்புக்களும் பொலிவடையும். ஆக, அகத்தின் அழகு, முகத்தின் அழகு இரண்டுக்கும் ஆலிவ் ஆயில் ஏற்றது என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், மருந்து தயாரிப்பிலும், சோப் செய்யவும் இந்த ஆயில் பயன்படுத்தப்படுகிறது. பழங் காலங்களில் விளக்கு ஏற்றவும் இந்த எண்ணையை உபயோகித்தனர்.

ஆலிவ் ஆயிலின் பூர்விகம்:

உலகம் முழுவதும் இந்த ஆயில் பயன்படுத்தப்பட்டாலும், மத்திய தரைக் கடல் நாடுகளிலேயே அதிகம் உபயோகப்படுத்தப் படுகிறது.  அங்கு  அதிகமாகக் காணப்படும் ஆலிவ் மரத்திலிருந்து ஆலிவ் ஆயில் தயாரிக்கப்படுகிறது. கிரேக்க கவி ஹோமர் இந்த எண்ணையை “திரவத் தங்கம்” என்று குறிப்பிடுகிறார். வெறும் சமையல் பொருளாக மட்டுமில்லாமல், இந்த எண்ணெய் மருத்துவ குணமுடையதாகவும் மாய மந்திர சக்தி உடையதாகவும் நம்பப் படுகிறது. விளையாட்டு வீரர்கள் தங்கள் உடம்பில் இந்த எண்ணையை தடவிக் கொள்ளுகிறார்கள்; இந்த எண்ணெய் சக்தியையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் உற்சாக ஊற்றாக கருதப்படுகிறது.

ஆலிவ் மரம்:

பல நூறு ஆண்டுகள் வாழும் இம்மரங்களின் வேர்கள் ஆழமாகவும் பரந்து விரிந்து இருப்பதால் தண்ணீர் குறைந்த இடங்களிலும், கடற் பகுதிகளிலும் (நிலத்தடி நீர் மிகுந்த உப்பு நிறைந்ததாக இருந்தபோதிலும்) செழித்து வளருகின்றன. குளிர் காலத்தில் இலைகளை கத்தரித்து விடுகிறார்கள். இதைத் தவிர வேறு எந்த பராமரிப்பும் இந்த ஆலிவ் மரங்களுக்கு தேவை இல்லை. இலையுதிர் காலத்தில் ஆலிவ் பழங்கள் அறுவடைக்குத் தயாராகின்றன. பழங்களை சேகரிப்பதும், அவற்றிலிருந்து எண்ணெய் எடுப்பதும் மிக எளிய முறையில் செய்யப்படுகிறது.
உலகத்தின் 75 சதவிகித ஆலிவ் ஆயில் தயாரிப்பில் முதல் இடத்தை ஸ்பெயின் நாடும், இரண்டாவது இடத்தை இத்தாலி நாடும், மூன்றாவது இடத்தை கிரீஸ் நாடும் பிடித்திருக்கின்றன. இப்போது ஆஸ்திரேலியாவும் கணிசமான அளவு இந்த ஆயிலை தயாரித்து வருகிறது.

ஆலிவ் ஆயில்:

அதிகக் கொழுப்பு, அதிக கலோரி  இருந்தாலும், இந்த எண்ணெய் உடல் ஆரோக்யத்திற்கு மிக நல்லது. இதை பாதுகாப்பதும் எளிது. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கக் கூடியது.
ஆலிவ் ஆயிலின் MUFA (mono unsaturated fatty acid) கெட்ட கொழுப்புகளையும், டிரைகிளிசரைட்ஸ் (triglycerides) ஆகிய வகைகளையும் குறைக்கவல்லது . உயர் இரத்த அழுத்தம், இதய நோய் முதலியவற்றைக் கட்டுப்படுத்த இந்த ஆயில் உதவுகிறது.

1. ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கும், கேசத்திற்கும்  போஷாக்குஅளிக்கிறது.
2. ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த அளவில் போலிக் ஆசிட் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப்  புற்றுநோய்
இருப்பவர்களுக்கு மருந்தாகவும்  உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
3. ஆலிவ் ஆயிலில் இருக்கும் திறன் வாய்ந்த  வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டேன் மேலும் சில ஆன்டி ஆக்சிடேன்ஸ் கேன்சர் வரமல் தடுக்க உதவுகிறது.
4. சர்க்கரை நோயைக் கட்டுப்பத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும் கட்டுப்பத்துகிறது.

ஆலிவ் ஆயிலின் வகைகள்:

எக்ஸ்ட்ரா விர்ஜின்: (extra virgin): அதிகப் பக்குவப்படுத்தப் படாத, (சூடாக்காமல், அமிலங்கள் கலக்காமல்) முதல் தடவை பிழிந்தவுடன் கிடைக்கும்  எண்ணெய். சுத்தமான, இயற்கையான ஆலிவ் வாசனையுடன் இருக்கும் எண்ணெய்.

விர்ஜின்: இரண்டாம் முறை பிழியும்போது கிடைக்கும் எண்ணெய்.

ப்யூர்:  வடிகட்டுதல் மற்றும் சில சுத்திகரிப்புக்கு உட்பட்டது.

எக்ஸ்ட்ரா லைட்: மறுபடி மறுபடி சுத்திகரிக்கப்பட்டும், சிறிது விர்ஜின் ஆயில் சேர்க்கப்பட்டதும் ஆன எண்ணெய் இது. மிக சிறிதளவே ஆலிவ்வின் வாசனை இதில் இருக்கும்.

ஆலிவ் ஆயிலை பாதுகாக்கும் முறைகள்:

அதிக உஷ்ணம், அதிக வெளிச்சம் இரண்டும் இந்த எண்ணைக்கு எதிரிகள். மிக அழகான புட்டிகளில் கிடைப்பதால் மிக கவனத்துடன் பாதுகாப்பது அவசியம். புட்டிகளை அழுத்தி மூடி, அதிக உஷ்ணம், அதிக வெளிச்சம் படாத இடத்தில் வைக்கவும். மற்ற எண்ணெய்களைப் போலவே அதிக சூடு, காற்று இவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆலிவ் ஆயிலும் இந்திய சமையல் முறைகளும்:

ஆலிவ் ஆயில் நம் சமையலுக்கு ஏற்றதா? இல்லை என்று சொல்லுபவர்கள் கூறும் காரணங்கள்:
ஆலிவ் ஆயிலின் வாசனை நமக்குப் பிடிக்காத ஒன்று.
நாம் சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் முதலில் அதை சூடாக்கிவிட்டுத்தான் பயன்படுத்துவோம். சில சமயங்களில் பச்சை எண்ணையை (இட்லிக்கு மிளகாய் பொடியும், நல்லெண்ணையும்) உபயோகிக்கிறோம். எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை பச்சையாக பயன்படுத்துவது சிறிது கஷ்டம்.

இந்த எண்ணையில் சமைத்த பொருட்களை சாப்பிட்டவுடன் வயிறு பாரமாக இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

இத்தகைய எண்ணங்கள் காரணமாக போமஸ் (pomace) என்ற வகை ஆலிவ் ஆயிலை இந்தியச் சந்தையில் விற்கிறார்கள். இது சுத்தமான ஆலிவ் ஆயில் அல்ல. எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை எடுத்தபின் இருக்கும் கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையை சுத்தம் செய்து சாப்பிடும் தரத்தில் தயாரித்து போமஸ் என்று விற்கிறார்கள். இந்த எண்ணையை நாம் இப்போது பயன்படுத்தும் மற்ற எண்ணெய்களைப் போலவே உபயோகிக்கலாம். 

ஆலிவ் ஆயிலை காய் கறிக் கலவை (vegetable salad) மற்றும் உணவு சமைத்தபின் அதை பரிமாறுவதற்கு முன் அதன் மேல் dressing செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதால் இந்திய சமையல் முறையே மிக ஆரோக்கியமானதாகிவிட்டது என்றும் சொல்லலாம்.

‘Eat locally, think globally’ என்ற கொள்கை உடையவர்கள் நம்மூர் சூரிய காந்தி எண்ணையையே உபயோகிக்க விரும்புகிறார்கள்.



புதன், 13 மார்ச், 2013

கடவுளுடன் ஒரு உரையாடல்


கடவுள்: ஹலோ! என்னை கூப்பிட்டாயா?

மனிதன்: கூப்பிட்டேனா? உன்னையா? இல்லையே? யார் நீ?

கடவுள்: நான்தான் கடவுள். உன் பிரார்த்தனை காதில் விழுந்தது; பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.

மனிதன்: நீ சொல்லுவது சரி. நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். அது என் மனதுக்கு பிடித்திருக்கிறது; இப்போது எனக்கு பேச அவகாசமில்லை; வேலையில் மும்முரமாக இருக்கிறேன்.

கடவுள்: எறும்பு கூடத்தான் வேலையில் மும்முரமாக இருக்கிறது.

மனிதன்: எறும்பு ஈயைப் பற்றி எனக்குத் தெரியாது; எனக்கு இப்போது உன்னுடன் பேச அவகாசம் இல்லை; வாழ்க்கை மிகவும் அவசரமானதாகி விட்டது; எப்போதுமே அவசரம் தான்; எப்போதும் நெருக்கடி தான்.

கடவுள்: உண்மைதான். ஏதாவது செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கை மும்முரம் தான். செயல்பாடு உன்னை மேலும் மேலும் உழைக்கச் செய்கிறது; உழைப்பினால் கிடைக்கும் பலன் உனக்கு நல்ல முடிவுகளைக் கொடுக்கிறது. உழைக்கும்போது நேரத்திற்கு அடிமையாகும் நீ, பலனை அனுபவிக்கும் போது அந்த அடிமைத்தனத்தில் இருந்து  விடுபடுகிறாய்.

மனிதன்: நீ சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனாலும் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று சரிவர புரிவதில்லை. அது இருக்கட்டும்; இணையதள உடனடி தகவல் chat-ல் நீ என்னைக் கூப்பிடுவாய் என்று எதிர்பார்க்கவில்லை.

கடவுள்: என்ன செய்வது? நீ நேரத்துடன் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து உதவலாம் என்று வந்தேன். சில விஷயங்களை தெளிவுபடுத்த ஆசைப் பட்டேன். இது இணையதளத்தால் செய்யப்பட உலகம் ஆகிவிட்டது. இணையதளத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும் உன்னை இணையதளம் மூலமாக சந்திக்க வந்தேன்.

மனிதன்: சரி, என் கேள்விகளுக்கு பதில் சொல்லு. ஏன் வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது?

கடவுள்: முதலில் வாழ்க்கையை அலசி அலசிப் பார்ப்பதை நிறுத்து. வாழ்க்கையை வாழ கற்றுக் கொள். ரொம்பவும் அலசுவதால் தான் வாழ்க்கை சிக்கலாகிறது.

மனிதன்: நாங்கள் ஏன் எப்போதுமே வருத்தத்தில் இருக்கிறோம்? சந்தோஷம் என்பதே இல்லையா?

கடவுள்: நேற்று நீ கவலைப் பட்ட நாளை என்பது தான் இன்று - இந்த நாள். இந்த நாளை வாழாமல் நாளையைப் பற்றிக் கவலைப் படுவதே உன் வழக்கமாகிவிட்டது. அதனால் வருத்தமே வாழ்க்கை ஆகிவிட்டது.

மனிதன்: ஆனால் வாழ்க்கை என்பதே நிச்சயமில்லாத போது வருத்தப் படாமல் என்ன செய்வது?
கடவுள்: நிச்சயமின்மை என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் வருத்தப் படுவது நீ தெரிவு செய்வது.

மனிதன்: நிச்சயமின்மையால் வாழ்வில் எத்தனை வலிகள்......

கடவுள்: வலிகள் தவிர்க்கமுடியாதவை; அதனால் ஏற்படும் துன்பம் தவிர்க்கப்பட வேண்டும்.

மனிதன்: துன்பம் தவிர்க்கப் படவேண்டுமானால்  மக்கள் ஏன் துன்ப படுகிறார்கள்?

கடவுள்: வைரத்தை உரசாமல் மின்ன வைக்க முடியாது; தங்கத்தை நெருப்பில் புடம் போடாமல் சுத்தப் படுத்த முடியாது. நல்லவர்கள் வாழ்க்கையில் சோதனைக்கு ஆட்படுவார்கள். ஆனால் துன்ப பட மாட்டார்கள். சோதனைகள் அவர்கள் வாழ்க்கையை  வளமாகும். நலிவடையச் செய்யாது.

மனிதன்: இந்த வருத்தப் பட வைக்கும் அனுபவங்கள் எங்களுக்குத் தேவையா?

கடவுள்: ஆமாம். அனுபவம் ஒரு தேர்ந்த ஆசிரியை. முதலில் பரீட்சை வைப்பாள். பிறகு பாடம் கற்றுத் தருவாள்.

மனிதன்: ஆனால் நாங்கள் ஏன் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு ஆளாக  வேண்டும். கவலைகளில் இருந்து விடுதலை அடைய முடியாதா?

கடவுள்: வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் உனக்கு பயன் தரக் கூடியவை. பாடம் புகட்டக் கூடியவை. அவை உன்னைப் புடம் போட்டு உன்னை எல்லா வகையிலும் மேம்படச் செய்கின்றன. மனவலிமை படைத்தவனாக ஆக்குகின்றன. மன வலிமை போராட்டங்களிலிருந்தும், சகிப்புத் தன்மையிலிருந்தும் வருகிறது. உனக்கு பிரச்சினைகள் இல்லாத போது இவை உனக்குக் கிடைப்பதில்லை.

மனிதன்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் நாங்கள் எங்கே போகிறோம் என்பதே புரியவில்லை.

கடவுள்: நீ உனக்கு வெளியில் பார்த்தால், நீ எங்கே போகிறாய் என்று தெரியாது. உனக்கு உள்ளே பார். வெளியில் பார்ப்பது கனவு காண்பது போல. உள்ளே பார்ப்பது உனக்குள் ஒரு விழிப்பை ஏற்படுத்தும். கண்கள் பார்வையைக் கொடுக்கும். மனம் விழிப்புணர்வை உண்டாக்கும்.

மனிதன்: சில சமயங்களில் சரியான பாதையில் போகிறோமா என்பதை விட, சீக்கிரம் வெற்றி பெறவில்லையே என்பது மிகவும் வலிக்கிறது.

கடவுள்: வெற்றி என்பது பிறர் உன்னைப் பற்றி அறிய உதவும்  ஒரு அளவுகோல். திருப்தி என்பது உன்னால் தீர்மானிக்கப் படுகிறது. நீ போகும் பாதையைத் தெரிந்து கொள்ளுவது உனக்கு அதிகத் திருப்தியைக் கொடுக்கும். நீ திசை காட்டியை வைத்துக் கொண்டு வேலை செய். மற்றவர்கள் கடியாரத்தை வைத்துக் கொண்டு வேலை செய்யட்டும்.

மனிதன்: கடினமான நேரத்திலும் நான் எப்படி உற்சாகம் குறையாமல்  இருப்பது?

கடவுள்: எப்போதும் நீ எத்தனை தூரம் பயணித்து இருக்கிறாய் என்று பார். இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்று யோசிக்காதே. உனக்குக் கிடைத்த நல்லவற்றை எண்ணிப் பார். எதையெல்லாம் இழந்தாய் என்று எண்ணாதே.

மனிதன்: நான் எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேனோ அதையே சொல்லுகிறாய். மனிதனின் எந்த குணம் உனக்கு வியப்பூட்டுகிறது?

கடவுள்: கஷ்டங்கள் வரும்போது எனக்கு ஏன் என்று சொல்லுபவர்கள் சுகப் படும் போது எனக்கு ஏன் என்று கேட்பதே இல்லை. ஒவ்வொருவரும் தன் பக்கத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களே தவிர உண்மையின் பக்கத்தில் அவர்கள் இருக்க ஆசைப் படுவதில்லை.

மனிதன்: வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை எப்படி அடைவது?

கடவுள்: நடந்து போனவைகளைப் பற்றி வருந்தாதே. இன்றைய நாளை தைரியமாக எதிர் கொள்; இன்றைய நாள் நல்ல நாள் என்ற நம்பிக்கை இருக்கட்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல் வரப் போகும் வாழ்க்கைக்கு உன்னை தயார் செய்து கொள்.

மனிதன்: கடைசியாக ஒரு கேள்வி: சிலசமயங்களில் ஏன் பிரார்த்தனைகளுக்குப் பதில் கிடைப்பது இல்லையே, ஏன்?

கடவுள்: பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை. சில சமயங்களில் பதில் ‘இல்லை’ என்றும் இருக்கலாம்;

மனிதன்: உனக்கு பல கோடி வந்தனங்கள். உன்னுடன் பேசிக் கொண்டே ஒரு புது நாளைத் தொடங்குகிறேன். ஒரு புதிய உற்சாகம் பிறந்திருக்கிறது.

கடவுள்: நல்லது. நம்பிக்கையை வளர்த்துக் கொள். பயத்தை விட்டுவிடு. உன்னுடைய சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கைகளை சந்தேகப் படாதே.வாழ்க்கை என்பது புதிர் அல்ல; விடுவிப்பதற்கு. பிரச்சினையும் அல்ல, விடை  கண்டுபிடிக்க. என்னை நம்பு. வாழ்க்கை என்பது மிக அழகானது அதை வாழத் தெரிந்தவர்களுக்கு!


oorooo.com பதிவு 

ஞாயிறு, 10 மார்ச், 2013

பெண்களுக்கு இதய நோய்


பல ஆண்டுகளாக பெண்களுக்கு இதய நோய் வர வாய்ப்பில்லை என்றே நம்பிக்கொண்டிருந்தோம். இதில் சிறிதளவு உண்மையும் இருக்கிறது. பெண்களுக்கு இயற்கையாகவே சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன், மெனோபாஸ் என்கிற இறுதி மாதவிடாய் வரும் வரை பெண்களை இதய நோயிலிருந்து காப்பாற்றுகிறது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களும் இறுதி மாதவிடாயை நெருங்கி கொண்டிருக்கும் பெண்களும் இந்த ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இதய நோய்க்கு ஆளாவது தற்சமயம் தெரியவந்துள்ளது. இந்த இதய நோயின் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்று நோய் ஆகியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதாக பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
அறிகுறிகள்:
இந்த நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரணமானவையாய் இருப்பதால் பலர் அவற்றை புறக்கணிக்கிறார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறு வேறு விதமான அறிகுறிகள் தோன்றுகின்றன. பல சமயங்களில் பெண்களுக்கு மார்பு வலி ஏற்படுவதில்லை. ஆனால் அதீத களைப்பு, தடைப்பட்ட தூக்கம், சாதரணமாக நிற்கும் போதோ, நடக்கும் போதோஏற்படும் மூச்சு திணறல்,அஜீரண கோளாறு, மனச்சோர்வு, நெஞ்செரிச்சல், கழுத்து, மேல் முதுகு, மற்றும் தோள்பட்டை பகுதியில்  ஏற்படும் ஒருவித அசௌகரியம், அதீத வியர்வை, மயக்கம், குமட்டல், வாந்தி  ஆகியவை கூட இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றுடாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
இது பரம்பரை நோய் என்றாலும், உயர் இரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு, சர்க்கரை நோய், புகை பிடித்தல்  ஆகியவையும் இந்த நோய் ஏற்பட காரணங்களாக கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு (cholesterol)  உள்ளவர்கள் மாதம் ஒருமுறை மருத்துவரிடம் சென்று பரிசோதனை  செய்து கொள்ளுவது மிகவும் முக்கியம்.சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளுவது மிக மிக முக்கியம்.
மாரடைப்பு நோய் என்பது என்ன?
இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் குழாயில் ஏற்படும் அடைப்பால் இதயத்திற்கு வரும் இரத்தம் குறைந்து அதனால் இதய தசைகள் பலவீனப்பட்டு விடுகின்றன. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. அல்லது இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, திடீரென்று தோன்றும் இரத்தக்கட்டி இவற்றாலும் மாரடைப்பு உண்டாகிறது.
இதய நோய் என்பது  நாம் நடத்தும் வாழ்க்கை முறையை ஒட்டி வரக்கூடிய   நோய் (lifestyle disease) என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தற்சமயம் ஆண்களும், பெண்களும் உடல் உழைப்பு என்பதே இல்லாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்தநிலையில் வேலை செய்வது சகஜமாகிவிட்டது. சரியான உடற்பயிற்சி, சரியான நேரத்தில் சாப்பாடு, சரியான தூக்கம் என்பது பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. இவையெல்லாம் கூட இதய நோய் சிறிய வயதிலேயே வர காரணங்கள்.
இதைத் தவிர மனஅழுத்தம் நமது ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கிறது. யோகா அல்லது ப்ராணாயாமம் எனப்படும் சுவாசப் பயிற்சி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. சரியான பயிற்சியாளரிடம் முறையான பயிற்சி பெற்று இவற்றை வீட்டில் அமைதியான சூழ்நிலையில் தொடர்ந்து செய்துவருவது அவசியம்.
உங்கள் வீட்டில்உங்கள் அப்பாவிற்கோ, அம்மாவிற்கோ இதய நோய் இருந்து, நீங்களும் 30 வயதுக்கு மேற்பட்டவரானால்  உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். உடற் பயிற்சி தினமும் அவசியம்.உங்களது வாழ்க்கை முறையை சின்ன சின்ன அளவில் மாற்றிக் கொள்ளுங்கள். என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுவது மிக அவசியம். சிறிய மாற்றங்கள் கூட இதய நோயை தவிர்க்க உதவும்.
தினமும் காலையில்நடை பயிற்சி செய்யுங்கள். இளைய தலைமுறை ஆண்களும் பெண்களும் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு என்று நேரம் ஒதுக்குவது மிக அவசியம்.
புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்த முயற்சி செய்யலாம். புகை பிடிப்பதை நிறுத்துவதனால் காசும் மிச்சம்; உடல் ஆரோக்கியமும் காப்பாற்றப்படும்.
துரித உணவு வகைகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு போஷாக்கு நிறைந்த உணவுவகைகளை உட்கொள்ளுதல் நலம். பச்சை காய்கறிகளும் பழங்களும் நிறைந்த உணவு மிகுந்த நன்மையை உண்டாக்கும்.
அலுவலக வேலையை, அலுவலக கவலைகளை  வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தை இனிமையாக கழிப்பது மனதிற்கு சாந்தியைக் கொடுக்கும். வாரக் கடைசி நாட்களை குடும்பத்துடன் வெளியில் சென்றோ அல்லது நிம்மதியாக ஓய்வு எடுத்தோ செலவிடுங்கள்.
நமது வாழ்வில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இதய நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளமுடியும். பல நவீன மருந்துகள், மருத்துவ முறைகள் நம் வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன. இதய நோய் பற்றியஅறிவு, விழிப்புணர்வு இரண்டும் மிக முக்கியம்.
வருமுன் காப்பது என்பது எப்போதுமே நல்லது. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். அதைப் போல வாழ்க்கை ஆனந்தமாக இருக்க நல்ல ஆரோக்கியம் என்பது அத்யாவச்யமான ஒன்று. உடல் நலம் பேணுவது நம் எல்லோருடைய முதற் கண் கடமை ஆகும்.
பெண்கள் ஒரு குடும்பத்தின் அச்சாணி போன்றவர்கள். குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களின் ஆரோக்கியத்தை பேணும் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுவது அவசியம்.

வெள்ளி, 1 மார்ச், 2013

உப்பில்லாத பண்டம் குப்பையிலே



சிறு வயதில் படித்த பழமொழி. தற்சமயம் எல்லோருடைய வீட்டிலும் அதிக இரத்த அழுத்தம் நோய்  யாரேனும் ஒருவருக்காவது இருக்கிறது. அதனால் உப்பைக் குறைத்துகொள்ளும்படி மருத்துவர் கூறுகிறார். அதிக இரத்த அழுத்தத்தால் ஒருவர் படும் அவதி, அந்த வீட்டில் இருக்கும் எல்லோரையுமே பாதி உப்பு சாப்பிடும்படி செய்துவிடுகிறது. யாருக்கு என்ன ஆனாலும் சரி "என்னால் உப்பைக் குறைக்க முடியாதப்பா" என்று சொல்லுபவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் குறைக்கவேண்டும் என்றால், சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை உப்பு தேவை?

உப்பில் அதிகப்படி இருப்பது சோடியம் குளோரைடு. உணவிற்கு ருசி கூட்டுவதுடன் நம் உடலுக்குத் தேவையான சோடியத்தையும் கொடுக்கிறது. உப்பு அதிகம் எடுத்துக் கொள்ளுவதால் அதிக இரத்த அழுத்தம், பக்க வாதம், உடம்பில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், சுண்ணாம்பு சத்துக் குறைவு முதலிய உபத்திரவங்கள் உண்டாகும்.

பல சமயம் உப்பு மற்றும் சோடியம் இரண்டும் மாறி மாறி ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. இது தவறு. உப்பு என்பது வேறு; சோடியம் என்பது வேறு.  உப்பில் 40% சோடியம் 60% குளோரைடும் இருக்கிறது. உடம்பில் உள்ள நீரின் அளவு சமமாக இருக்கவும், தசைகள் சுருங்கி விரியவும் சோடியம் தேவை.

நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஆறு கிராம் உப்பு போதுமானது. அதாவது ஒரு டீஸ்பூன். இதற்கு குறைவாக உபயோகித்தாலும் நல்லதுதான். இதற்கு அதிகமான உப்பு எடுத்துக் கொள்ளுவது நாட்பட்ட நோய்களை உண்டாக்கும்.

நம்மூரில் சராசரியாக ஒருவர் 10 முதல் 12 கிராம் உப்பு ஒரு நாளைக்கு பயன்படுத்துகிறார். இது மிக மிக அதிகம் ஆகும். மெது மெதுவே உப்பைக் குறைப்பது நல்லது. ரொம்பக் கொஞ்சமாக உப்பு சாப்பிடுவதும் தவறு. உப்பு குறைந்தால் தசைப் பிடிப்பு ஏற்படும். மற்றும் electrolytes எனப்படும் மின் அயனிகளின் ஏற்றத் தாழ்வுக்கும் குறைவான உப்பு காரணமாகும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது மிகுந்த கவனம் தேவை. இவற்றில் பொட்டாஷியம் குறைவாகவும் சோடியம் அதிகமாகவும் இருக்கும். இதனால் இந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டால் அதிக இரத்த அழுத்த நோய் வர வாய்ப்பு இருக்கிறது. ஊறுகாய், உப்பு பிஸ்கட், வறுத்த உப்பு சேர்த்த முந்திரி, வெண்ணை, சீஸ், சாஸ், உருளைக் கிழங்கு சிப்ஸ் முதலியவற்றை மிதமாக உண்ணுங்கள். முடிந்தால் அறவே தவிர்த்து விடுவது நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மேல் உள்ள அட்டவணையில், எந்த அளவு உப்பு இருக்கிறது என்று பார்த்து பிறகு இவைகளை வாங்குங்கள்.  உணவிற்கு ருசி கூட்ட வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றை அதிகம் பயன்படுத்தி உப்பைக் குறைக்க முயற்சிக்கலாம். திடீரென்று உப்பைக் குறைப்பது கடினம்தான். ஆனால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று வரும்போது, முயற்சி செய்வதில் தவறில்லையே?

உப்பு எப்படி நம் எடையை பாதிக்கிறது என்று பார்க்கலாமா?
உப்பு ஒரு கலோரி இல்லாத ஒரு பண்டம். "நாங்கள் சொல்லும் உணவை சாப்பிட்டால் ஒரே மாதத்தில் கொடி இடையைப் பெறலாம்" என்று விளம்பரம் செய்கிறார்களே, இவர்கள் உப்பு குறைவான அல்லாத உப்பே இல்லாத உணவையே சாப்பிடச்சொல்லுகிறார்கள்உப்பு குறைத்துச் சாப்பிடுவதால் உடம்பில் இருக்கும் நீர் குறைகிறது எடையும் குறைகிறது. மறுபடியும் நீங்கள் உப்பு சேர்த்த உணவை சாப்பிடும்போது எடையும் கூடுகிறது. இது போன்ற 'diet' வேண்டவே வேண்டாம்.

நாமே தினசரி உப்பைக் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம்:
  • ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவில் அதிகப்படி உப்பு சேர்க்க வேண்டாம்.
  • சிலர் தயிர் சாதத்திற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுவார்கள். சில வீடுகளில் சாதம் சமைக்கும்போது அதில் உப்பு சேர்க்கும் பழக்கம் இருக்கிறது. இவற்றைத்  தவிர்க்கலாம்.
  • தினமும் சப்பாத்தி சாப்பிடுபவரா நீங்கள்? சப்பாத்தி மாவில் உப்பு சேர்க்க வேண்டாம். அதற்கு தொட்டுக் கொள்ள செய்யப்படும் பொரியல், கூட்டு இவற்றில் இருக்கும் உப்பு போதுமானது.
  • உப்பை குறைக்க மருத்துவர்கள் சொல்லும் வழி: சமைக்கும்போது சாம்பார், பொரியல் இவற்றில் உப்பு சேர்க்க வேண்டாம். ஒரு டீஸ்பூன் தலை தட்டி உப்பு எடுத்து வைத்துக் கொண்டு நீங்களாகவே சாம்பார், பொரியல் இவற்றை உங்கள் தட்டில் போட்டுக் கொண்டு அவற்றிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த அளவு உப்புதான் ஒரு நாள் முழுவதற்கும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளவும்!
கடைசியாக ஒன்று:
மாதத்திற்கு ஒரு நாள் உப்பில்லாமல் சாப்பிடலாம். கும்பகோணம் அருகில் ஒப்பிலியப்பன் என்கிற பெருமாள் கோவில் இருக்கிறது. அந்த சந்நிதியில் பெருமாளுக்கு தினமுமே உப்பு இல்லாமல் தான் தளிகை செய்கிறார்கள். பிரசாதம் எதிலும் உப்பு கிடையாது. நாச்சியாரை பெருமாள் திருக்கல்யாணம் செய்துகொண்ட போது நாச்சியார் மிகச் சிறிய வயதுடைய பெண்ணாக இருந்ததால் அவளது தந்தையார் "என் பெண்ணுக்கு உப்புப் போட்டு தளிகை செய்யத்தெரியாது" என்று பெருமாளிடம் சொல்ல, நாச்சியாருக்காக பெருமாள் "உப்பில்லாமல் சாப்பிடுகிறேன்" என்று சொன்னதாக வேடிக்கையாக ஒரு கதை வழக்கில் இருக்கிறது. அதனால் பெருமாளுக்கு "உப்பிலியப்பன்" என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது. பெருமாளே தினமும் உப்பு இல்லாமல் சாப்பிடும் போது நாம் அவரை நினைத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று உப்பில்லாமல் சாப்பிடலாம்.