ஞாயிறு, 12 ஜனவரி, 2014

மீண்டும் வசீகர வசுந்தரா!

மீண்டும் வசீகர வசுந்தரா!





ஜனவரி 2014 இதழ் ஆழம் பத்திரிகையில் வந்த கட்டுரை 



ராஜஸ்தானின் முதலமைச்சராக இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட வந்திருக்கும் வசுந்தரா ராஜே சிந்தியாவின் வெற்றிக்கு  பக்கபலமாக நின்றது அவர் சார்ந்திருக்கும் பாரதிய ஜனதா காட்சி மட்டுமல்ல; அவரது வசீகரமான ஆளுமையும், ராஜ பரம்பரையும் கூடத்தான். பாலைவன மாநிலத்தில் ஒரு சோலை போல பெண்களையும், இளம் வயதினரையும் தன் வசீகரத்தால் கவர்ந்திழுக்கிறார் வசுந்தரா. ராஜஸ்தானில் 162 இடங்களை வென்று சரித்திரம் படைத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த வெற்றிக்குக் காரணமாக நரேந்திர மோடியை சொல்லுகிறார் வசுந்தரா. ‘குஜராத் மாநிலத்தின் முன்னேற்றமே இந்த வெற்றிக்குக் காரணம். வரும் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு இது ஒரு முன்னோட்டம்’ என்கிறார் வசுந்தரா.



இளமைக்காலம்

மார்ச் 8, 1953 இல்  ராஜமாதா விஜயராஜே சிந்தியாவிற்கும் குவாலியர் மஹாராஜா ஜிவாஜி ராவ் சிந்தியாவிற்கும் நான்காவது குழந்தையாக பிறந்தவர் வசுந்தரா. ஆரம்பக்கல்வியை கொடைக்கானலில் உள்ள  பிரசண்டேஷன் கான்வென்ட்டிலும், கல்லூரிப் படிப்பை மும்பை சோபியா கல்லூரியிலும் படித்தவர். பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர் வசுந்தரா.  டோல்பூரின் முன்னாள் அரசராக இருந்த ஹேமந்த் சிங்கை நவம்பர் 17, 1972 இல் மணந்த வசுந்தராவிற்கு துஷ்யந்த் சிங் என்று ஒரு பிள்ளை இருக்கிறார். ஒரு வருடத்திற்குப் பின் இந்த திருமணம் முறிந்தாலும் தனது தேர்தல் பிரசாரங்களில் தன்னுடைய ஜாட் அரச உறவை குறிப்பிட மறப்பதில்லை இவர். 



அரசியல் நுழைவு

1984 இல் அவரது தாயார் விஜயராஜே சிந்தியாவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட வசுந்தரா அந்த வருடமே பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரானார். அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கட்சியிலேயே இருக்கிறார் வசுந்தரா. 1984 லிருந்து 86 வரை இரண்டு வருடங்கள் பா.ஜ.க. வின் இளைஞர் அணியின் மாநில உபதலைவராக இருந்தார். தேர்தல்களத்தில் இறங்கி, வெற்றி பெற்று 1985-89 ஆம் வருடங்களில் ராஜஸ்தான் மாநில சட்டசபையில் டோல்பூர் பகுதியின்  உறுப்பினர் ஆக இருந்தார். பின்னர் முதல்முறையாக ராஜஸ்தானில் உள்ள ஜலவரா பகுதியின் மக்களவை பிரதிநிதியாக 1989 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நான்கு முறை மக்களவை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2002 இல் ராஜஸ்தான் பாஜகவின் தலைவர் பொறுப்பேற்றார். இந்த சமயத்தில் பரிவர்தன் யாத்ராசெய்து மாநிலம் முழுமையும் சுற்றிப்பார்த்தார். இந்த யாத்ரா அவருக்கு மாநிலத்தைப்பற்றி அணுக்கமாக அறிய உதவியதுடன் மக்களுடன் நெருங்கிப் பழகவும், அவரை பிரபலப்படுத்தவும் செய்தது.



தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் முதலில் வெளியுறவுத்துறையின் சார்அமைச்சராகவும், பின்பு சிறுதொழில்கள், ஊழியர்கள் மற்றும் பயிற்சி துறையின் (தனி பொறுப்பு) சார்அமைச்சராகவும் பணியாற்றினார். மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்துறையை தேர்ந்தெடுக்காமல், சிறுதொழில் துறையை தேர்ந்தெடுத்து, தன் வழி தனி வழி என்று நிரூபித்தார் வசுந்தரா.


2003 ஆம் ஆண்டு முதன்முறையாக ராஜஸ்தானின் முதலமைச்சராக பதவி ஏற்ற வசுந்தரா 2008 இல் தோற்கடிக்கப்பட்டு பதவி இழந்தாலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பிரபலமான அரசியல் பிரமுகராகவே இன்றுவரை இருந்து வருகிறார்.


‘எங்கள் மாநிலம் அவரை நேசிக்கிறது. அவர் உடை உடுத்தும் பாணியை நவநாகரீக வாக்குமூலம் என்று சொல்லலாம். ராஜஸ்தானிய பெண்களுக்கு அவர் ஒரு மிகச்சிறந்த முன்னோடி; நாகரீகத்தின் சின்னம்’ என்கிறார் ஒரு கல்லூரி யுவதி. 


விமரிசனங்கள்:

இவரைப்பற்றிய ஒரு முக்கிய விமரிசனம் என்றால் அது இவர் பணியாற்றும் விதம் பற்றியது. இவரது சக கட்சியாளர்கள் இவரது இந்தப் பாணியை விரும்புவதில்லை என்பதுடன்  இவரை ஏகாதிபதி என்று வெளிப்படையாக விமரிசனமும் செய்கிறார்கள். பெயர் சொல்ல விரும்பாத பாஜக  பிரமுகர் சொல்லுகிறார்: ‘இன்னும் தாம் ஒரு மகாராணி என்றே நினைக்கிறார். மற்றவர்களை கொத்தடிமை போலவும் இவர் நடத்துகிறார்’. ‘தலைவர் என்பவர் அணுகுவதற்கு எளிமையானவராக இருக்கவேண்டும். சென்றமுறை இவர் முதலமைச்சராக இருந்தபோது இவரை அணுகுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. உள்ளூர் அரசியல் பிரமுகர்களை ஆட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களாக நினைத்தார். இந்தமுறை இவர் சற்று மாறியிருப்பார் என்று நம்புகிறோம்’ என்கிறார் இன்னொரு கட்சிப் பிரமுகர்.


‘மொத்தத்தில், மோடியைப் போன்ற ஆளுமை இல்லாதிருந்தும், அவரைப்போல அதிகாரம் செலுத்த வேண்டுமென்று எண்ணுபவர்’ என்று கட்சி உறுப்பினர்களின் பயங்களை எல்லாம் ஒருசேர கூறுகிறார் ஆர். எஸ். எஸ். இயக்கத்தை சேர்ந்த ஒரு பிரமுகர்.




மாநில முன்னேற்றம்

பாஜக விற்கு மக்கள் அளித்திருக்கும் இந்த மாபெரும் தீர்ப்பு, மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத்தான். தொழில்துறையினருக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து, அவர்களது வளர்ச்சிக்கான சூழலை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முன்னேறிய மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் இருக்க வேண்டுமானால் தொழில்துறை முன்னேற்றங்கள் மிகவும் அவசியம்என்கிறார் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன இயக்குனர் கியான் பிரகாஷ்.



வசுந்தரா ராஜேயின் தலைமையிலான அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதுடன் அவர்களைக் கவரும் விதத்தில் வியாபார சூழலை மேம்படுத்த வேண்டும் என்று தொழிலதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள். சென்றமுறை அவர் உருவாக்கிய  மீண்டெழு ராஜஸ்தான் திட்டம் இந்த முறை மறுபடி புத்துயிர் பெறும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த மேம்பாட்டு திட்டம்  ராஜஸ்தானை தொழில்துறைக்கான போட்டிக்களமாக காட்டினாலும், எதிர்பார்த்த அளவு முதலீடுகள் கிடைக்காததால் விமரிசனத்திற்கு ஆளானார் வசுந்தரா.



குஜராத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டாகக் கொள்வதில் ஆர்வமாக  இருக்கும் வசுந்தராவிற்கு மோடியின் துடிப்பான குஜராத்திட்டம் சில புரிதல்களை ஏற்படுத்தி அதன் மூலம் மீண்டெழு ராஜஸ்தானைமேலும் பயனுள்ளதாகச் செய்ய உதவும்  என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.


ராஜஸ்தானில் சுற்றுலா, சூரிய சக்தி, காற்றாலை, தானியங்கி வாகனங்கள் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இவர்கள் சலுகைகளை கேட்கவில்லை. மாறாக, அவர்களது  திட்டங்களுக்கு உடனடி அங்கீகாரம் கிடைக்கும் வகையில் முடிவுகளை சீக்கிரம் எடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும். மாநிலத்தின் திறனுக்கேற்ப  சாத்தியமான தொழில்களை நிறுவ முதலீட்டாளர்களை முதல்வர் அழைக்க வேண்டும்என்கிறார் பழமை வாய்ந்த வியாபார அமைப்பை சார்ந்த விக்ரம் கோல்ச்சா.



தூரக்கிழக்கு நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இங்கிருந்து விமானப் போக்குவரத்து இருப்பது போல, மாநிலத்தின் உள்ளேயும் விமானப் போக்குவரத்து வேண்டும். தில்லியிலிருந்து உதய்பூருக்கு விமானப் போக்குவரத்து இருந்தாலும், ஜெய்பூரிலிருந்து உதய்பூருக்கோ, உதய்பூரிலிருந்து ஜோத்பூருக்கோ விமான போக்குவரத்து இல்லை. இந்தமாதிரியான கட்டமைப்புகள், ஒரு மாநிலத்தின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறதுஎன்று மேலும் சொல்லுகிறார் கோல்ச்சா.


தில்லி-மும்பை தொழில்துறை வளாகம் வரும் வருடங்களில் ஒரு உறுதியான வடிவம் பெறும் அளவில் இருப்பதால் பொருள் உற்பத்திக்கான வாய்ப்புகள் என்றுமில்லாத அளவில் இப்போது பெருகி இருக்கின்றன. அதுவுமின்றி, இந்த அதிவேக சரக்குப் போக்குவரத்து ஏற்றுமதியாளர்களுக்கு பல புதிய வழிகளை திறந்துவிடும். இதன் காரணமாக இப்போது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் புதிய அரசினால் ராஜஸ்தானை ஒரு பரபரப்பான உற்பத்தி ஸ்தானமாக மாற்றமுடியும்.



தான் விரும்பிப்படிக்கும் புத்தகம் ரஷ்ய அரச பரம்பரையைச் சேர்ந்த கேதரின் தி கிரேட் எழுதிய சுயசரிதை என்று ஒரு வருடம் முன்பு கூறியிருந்தார் வசுந்தரா. தன்னந்தனியாக ரஷ்யாவின் பொற்காலத்தை கட்டியம் கூறி வரவேற்ற வீரப்பெண்மணி கேதரின் போல வசுந்தராவும் எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவார் என்று நம்புவோம்.




புதன், 1 ஜனவரி, 2014

காலண்டரின் கதை






புதுவருடம் பிறந்துவிட்டது. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


காலண்டர் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். ஓசியில் காலண்டர்கள் வாங்குவது ஒரு பிடித்தமான பொழுதுபோக்காக சிலருக்கு இருக்கும். வீட்டில் மாட்டுகிறார்களோ இல்லையோ வங்கி, துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் என்று பல இடங்களிலும் காலண்டர் கேட்டு (அவர்களாகவே கொடுக்காத பட்சத்தில்!) வாங்குவது பெரிய இன்பமாக இருக்கும் இவர்களுக்கு.



காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம்!


கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் கலண்டேஎனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று.



இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு.45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே. இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர்.


பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆனைப்படி, அலோயிஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். ஏசு கிருஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாக கொண்ட இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைப்பட்டது.



ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ்லிதுவேனியன் காமன்வெல்த்,  இத்தாலியின் பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் காலண்டரை முதன்முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆண்டிற்கு பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15 ல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸே இந்தப் பட்டியலின் கடைசி நாடு.



மாதங்களின் பெயர் வரலாறு:

ஜனவரி:

ரோமன் இதிகாசத்தில் துவக்கங்களின் கடவுளாககாணப்பட்ட ஜானஸ்லானுயாரியஸ் கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்பட்டது.

பிப்ரவரி:

ஜூலியன் மற்றும் கிரிகோரியன் காலண்டரின் இரண்டாவது மாதம் பிப்ரவரியே சுத்தப்படுத்தல்எனும் பொருள் தரும் ஃபெப்ரம் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததே பிப்ரவரி. புராதன ரோமர்கள் பிப்ரவரி மாதம் 15 ம் தேதி ஃபெப்ரா எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காக சூட்டப்பட்டதே இந்த பிப்ரவரி.

மார்ச்:

ரோமர்களின் போர்க்கடவுளான மார்ஸி: என்பதிலிருந்து உருவானதே மார்ச் கி.மு 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் விலஸ் மன்னர் ஜனவரியையும், பிப்ரவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே ரோமக் காலண்டரின் முதல் மாதம்.

ஏப்ரல்:

ஏபரல் மாதப் பெயர் பிறந்தது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. திறக்குகஎனும் பொருள் தரும் அபேரிரேஎனும் இலத்தீன் சொல்லிலிருந்துதான் ஏப்ரல் மாதத்திற்கு அப்பெயர் கிடைத்தது என்பது ஒரு கருத்து. ரோம ஐதீகப்படி எல்லா மாதங்களின் பெயர்களும் கடவுள் பெயரிலிருந்தே துவங்குகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் வீனஸ் தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது கிரேக்கர்கள் வீனஸை அஃப்ரோடைட் என்றே அழைக்கினறனர் அதன்படி வீனஸ் தேவதையின் மாதம் எனும் பொருள் தரும் அப்லோரிஸ்என்னும் சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மே:

கிரேக்கக் கடவுளான மாயியாவின் பெயரே மே மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

ஜூன்:

ஜூபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமர்கள் கருதிய ஜூனோஎன்பதிலிருந்தே ஜூன் மாதம் பிறந்தது

ஜூலை:

ரோமக் காலண்டரின் மாதமாக கருதப்பட்ட, இலத்தீன் மொழியின் கவிண்டிலஸ்என அழைக்கப்பட்ட இம்மாதத்தில்தான் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத்தே இம்மாதத்திற்கு ஜூலை எனப் புதுப்பெயர் சூட்டப்பட்டது

ஆகஸ்ட்:

ஆகஸ்ட் மாதம் புராதன ரோமக் காலண்டரில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது எனப் பொருள்படும் ஸெக்டிலஸ்எனும் இலத்தீன் சொல்லே துவக்ககால ரோமக் காலண்டரில் இம்மாதத்தின் பெயராக ப் ப்யன்படுத்தப்பட்டிருந்தது. பிற்பாடு கி.மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்:

இலத்தீன் மொழியில் ஏழு எனப்பொருள் வரும் செப்டம்என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது.

அக்டோபர்:

இலத்தீன் மொழியில் எட்டுஎனப் பொருள் தரும் அக்டோஎன்ற சொல்லிலிருந்து வந்ததே அப்பெயர்.

நவம்பர்:

ஒன்பது எனும் பொருள் தரும் நோவம்எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே நவம்பர்.

டிசம்பர்:

இலத்தீன் மொழியில் பத்துஎனும் பொருள் தரும் டிசம்பர்ரோமக் காலண்டரில் பத்தாவது மாதமாக இருந்தது.


இந்திய தேசியக் காலண்டர்

கி.பி. 78 இல் துவங்கும் சக காலண்டரே இந்தியாவின் தேசியக் காலண்டராக கருதப்படுகிறது. சாலிவாஹன மன்னரான சாலிவாஹன் உஜ்ஜைனி மன்னர் விக்ரமாதித்தனை போரில் வென்றதையடுத்து சக வருடம் துவங்கியது . இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக வருடக் காலண்டரும் அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

1957 இன் காலண்டர் மறு சீரமைப்பு கமிட்டியே சக காலண்டரை அதிகாரப் பூர்வ காலண்டராக அங்கீகரிக்கப் பரிந்துரை வழங்கியது. கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 22 ஆம் தேதியில்தான் சக வருடத்தின் முதல் மாதமான சைத்ரம் 1 , 1879 இல் அதிகாரப் பூர்வமாகத் துவங்கியது.

தமிழ்க் காலண்டர்:

சூரியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.  கிரிகோரியனைப் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள் இதிலும் உண்டு

இஸ்லாமியக் காலண்டர்:

முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலிருந்துதான் இஸ்லாமிக் காலண்டரின் வருடம் துவங்குகிறது. கி.பி. 622 இல் நிகழ்ந்தது நபியின் பயணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது

ஜூலியன் காலண்டர்

கி.மு.45 இல் பிரபல வானியல் நிபுணராக இருந்த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவுரைப் படி இக்காலண்டரை நடைமுறைப் படுத்தியவர் ஜூலியஸ் சீசரே.

தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் கிரிகோரியன் காலண்டரின் முன்னோடி இது. ஜூலியன் காலண்டரின்படி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். லீப் வருடம்  என்பது ஜூலியன் தந்த கொடையே.