வெள்ளி, 20 டிசம்பர், 2013

மெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்









‘என் கணவர் சுயமாக மருந்து சாப்பிடும் பழக்கமுள்ளவர். ஒரு சின்ன தலைவலி என்றால் கூட உடனே மருந்து போட்டுக்கொள்ளுவார். இதைப் பற்றி எங்கள் மருத்துவரிடம் ஒருமுறை சொல்லி, அவருக்கு அறிவுரை கூறும்படி கேட்டுக்கொண்டேன். மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா? படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லோருமே இதைப்போல செய்கிறார்கள். நான் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். தாங்களாகவே தங்களுக்குத் தெரிந்த கொஞ்சநஞ்ச மருத்துவ அறிவை (!!) வைத்துக் கொண்டு மருந்துக் கடைக்குப் போய் வாங்கி வருவார்கள். ஏதாவது ஏடாகூடம் ஆனால் ஓடி வருவார்கள். சரியானவுடன் மறுபடி ஆரம்பிப்பார்கள்.  இவர்களைக் கடவுளே வந்தால்கூடத் திருத்த முடியாது!’

என் தோழி ஒருவர் கூறிய தகவல் இது. 



இப்படி மருந்துக் கடைகளில் போய் வாங்குபார்களின் கதி என்ன என்று எனக்கு வந்த ஒரு forwarded செய்தியை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:
தகவல், நன்றி : திரு அனந்தநாராயணன்



காய்ச்சல், தலைவலி, பல்வலி, உடல் வலி என எந்த சிறு உபாதையாக இருந்தாலும் நாம் முதலில் செய்யும் காரியம்... மெடிக்கல் ஷாப்களுக்கு சென்று நமக்கு ஏற்பட்டுள்ள உபாதைகளை கூறி மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடுவதுதான். அதிலும் குணமாகாவிட்டால்தான் டாக்டர்களை நாடி செல்கிறோம். அந்த வகையில், நாம் மெடிக்கல் ஷாப்கள் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளோம்.



அப்படிப்பட்ட மெடிக்கல் ஷாப்களில் நமக்கு சரியான மருந்து, மாத்திரை தான் தருகிறார்களா என்பதை பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. அதைப்பற்றி எண்ணிப்பார்ப்பது கூட கிடையாது. மாத்திரையின் பேரே தெரியாமல் சாப்பிடுகிறோம். அந்தளவுக்கு மெடிக்கல் ஷாப்களை கண்மூடித்தனமாக நம்புகிறோம்.



ஆனால், உண்மை என்னவென்று பார்த்தால், பெரும்பாலான மெடிக்கல் ஷாப்களில் சரியான மருந்தை தேர்வு செய்து தரக்கூடிய பார்மாசிஸ்ட்டுகளே இருப்பதில்லை என்பதுதான். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அதிரடி சோதனை முடிவுகளும் இந்த உண்மையை நிரூபித்து பீதியை கிளப்பி உள்ளது.



தற்போது சென்னையில் தெருவுக்கு தெரு மெடிக்கல் ஷாப்கள் முளைத்து விட்டன. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பல மெடிக்கல் ஷாப்களும் உண்டு. சாதாரண கடையை போல மெடிக்கல் ஷாப்களை அவ்வளவு எளிதில் யாரும் வைத்து விட முடியாது.



டிப்ளமோ இன் பார்மாசிஸ்ட் படித்த ஒருவரது மேற்பார்வையின் கீழ்தான் மெடிக்கல் ஷாப்கள் இயங்க வேண்டும். அந்த துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் ஷாப் வைக்க அனுமதி வழங்கப்படும்.ஆனால், வெறும் லாப நோக்கத்தை மட்டுமே குறியாக கொண்ட சில மெடிக்கல் ஷாப்கள், டி.பார்ம் படித்த உறவினர்களின் சான்றிதழை வைத்து கடையை திறந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட கடைகளில் பார்மாசிஸ்ட்டுகளே இருப்பதில்லை. மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்த அனுபவத்தின் அடிப்படையில் மருந்துகளை தருகின்றனர். அதையும் மக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.



இதனால், தவறான மருந்துகளை தர வாய்ப்புள்ளது, அப்படி தவறான மருந்தை நாம் சாப்பிடுவதால் பயங்கர எதிர்விளைவுகளை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்கின்றனர்.



இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ‘தமிழகத்தில் பார்மாசிஸ்ட்டுகளே இல்லாமல் இயங்கக் கூடிய மெடிக்கல் ஷாப்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய கடைகளில் வேலை பார்ப்பவர்கள், டாக்டர் சீட்டில் என்ன மருந்து எழுதியிருக்கிறார் என்பதே தெரியாமல் வேறு மருந்து மாத்திரைகளை தர வாய்ப்புள்ளது. படித்த சிலர் மட்டுமே இந்த விஷயத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். சாதாரண பாமர மக்களோ, மெடிக்கல் ஷாப்பில் தரும் மாத்திரையை அப்படியே வாங்கி செல்கிறார்கள். இதை தடுக்க நாங்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தி வருகிறோம்.



கடந்த 2009&10ம் ஆண்டில் 215 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 52 கடைகளில் பார்மாசிஸ்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. 2010, 11ம் ஆண்டில் 300 கடைகளில் சோதனை நடத்தி, 85 கடைகள் சிக்கின. 2011&12ல் 202 கடைகளில் சோதனை நடத்தி 86 கடைகளும், 2012&13ல் 228 கடைகளில் சோதனை நடத்தி 106 கடைகளும் பிடிபட்டுள்ளன. இந்தாண்டு நவம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட சோதனையில் 132 கடைகளில் 61ல் பார்மாசிஸ்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பார்மாசிஸ்ட் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கிறோம். அவர்களின் லைசன்சை ரத்து செய்வதற்கு கூட சட்டத்தில் இடமுண்டு. தமிழகம் முழுவதும் 38 சதவீத மெடிக்கல் ஷாப்களில் பார்மாசிஸ்ட்கள் இல்லை என்பது சோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அதனால், மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழகத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்களின் எண்ணிக்கைக்கு நாங்கள் நடத்தியிருக்கும் சோதனை மிக குறைவுதான்.



ஆனாலும், எங்கள் துறையில் போதிய அளவுக்கு மருந்து இன்ஸ்பெக்டர்கள் இல்லாததால் பெரிய அளவில் சோதனை நடத்த முடியவில்லை. இருந்த போதிலும், தொடர் சோதனையால் பெரும்பாலான கடைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, சென்னையின் பல முக்கிய இடங்களில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் காலாவதியான மருந்து, மாத்திரை விற்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’



பார்மாசிஸ்ட் எதற்கு தேவை?

ஒவ்வொரு மெடிக்கல் ஷாப்பிலும் பார்மாசிஸ்ட்  எதற்கு தேவை என்றால், அவர் வெறும் மருந்து, மாத்திரை எடுத்து தருவதற்கு மட்டுமல்ல, டாக்டர் தரும் மருந்து சீட்டையும் கவனிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. டாக்டர் தவறுதலாக தவறான மருந்தை எழுதி கொடுத்திருக்கிறாரா என பார்மாசிஸ்ட் பரிசோதிக்க வேண்டும்.



பெரிய நோய்களுக்கு மருந்து எழுதி கொடுத்த டாக்டர் அதற்கான ஸ்பெஷலிஸ்டா என்பதை பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்து வாங்குபவரிடம் விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.ஏஜென்சிகளிடமிருந்து மருந்தை வாங்கும் போது, அந்த கம்பெனி, மருந்துகளின் காலாவதி தேதி ஆகியவற்றையும் கவனித்து பார்க்க வேண்டும்.



மக்கள் கவனத்துக்கு...

·         மிகக்குறைந்த விலைக்கு மருந்து தருபவர்களிடம் வாங்க வேண்டாம்.

·         மருந்து, மாத்திரை வாங்கினால் அவற் றின் பெயரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

·         காலாவதி தேதியை பார்க்க வேண்டும்.

·         டாக்டர் மருந்து சீட்டுடன்தான் மருந்து வாங்க வேண்டும்.

·         அனுமதி பெற்ற மெடிக்கல் ஷாப்களில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்.

·         நடைபாதை கடைகளில் அழகு சாதன பொருட்களை வாங்கக்கூடாது.




உங்கள் ஏரியா மெடிக்கல் ஷாப்கள் தவறான மருந்தை தந்ததாலோ அல்லது அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டாலோ 044-24335201, 24335068 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தரலாம்.

வியாழன், 24 அக்டோபர், 2013

சாமியாரும் சர்ச்சையும்










ஆழம் அக்டோபர் இதழில் நான் எழுதி வெளியான கட்டுரை.

இந்தியாவில் சாமியார்களுக்கும் பஞ்சமில்லை,சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. சமீபத்திய உதாரணம் அஸ்ரம் பாபு. போன வருடம் டெல்லியில் 23 வயது மாணவி ஒரு குழுவினரால் வன்புணர்வுக்கு ஆளானபோது இவர் உதிர்த்த முத்துக்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம். ‘வெறும் ஐந்து, ஆறு பேர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல; அவர்களைப் போலவே அந்தப் பெண்ணும் குற்றவாளிதான். குற்றவாளிகளை அவள் ‘சகோதரர்களே என்னைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்’ என்று கெஞ்சியிருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தால் அவளது மானம் காப்பாற்றப்பட்டிருக்கும். இரு கை சேர்ந்தால்தானே சத்தம் வரும்?’
இத்துடன் விட்டாரா? இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கூடாது என்றார். எப்படி நம் நாட்டில் வரதட்சணைக்கு எதிரான சட்டம் தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களும் தவறான வழியில் பயன்படுத்த இது வழி வகுக்கும் என்றார்.
சர்ச்சை பலக்கவே, தான் சொன்னதை ஊடகங்கள் திரித்துக் கூறுவதாக சொல்லிப் பின் வாங்கியதுடன், தான் அப்படிச் சொல்லியதை நிரூபிப்பவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு கொடுப்பதாகவும் அறிவித்தார்.
அஸ்ரம் மாட்டிக்கொண்ட சில சர்ச்சைகள்:
  • முதன்முதலாக அஸ்ரம் பாபு சர்ச்சையில் மாட்டிக் கொண்டது 2008 ஆம் ஆண்டு. இரண்டு சிறுவர்கள் (அபிஷேக் மற்றும் தீபேஷ் வகேலா) இவரது மோடேரா ஆஸ்ரமத்தில் மரணமடைந்தனர். அவர்களுடைய அழுகிப்போன உடல்கள் நதிப்படுகையில் கண்டெடுக்கப்பட்டன.
  • 2013 பிப்ரவரியில் 24 வயது ராகுல் பச்சோரி இவரது ஜபல்பூர் ஆஸ்ரமத்தில் மர்மமான முறையில் இறந்தார். தன் மகன் விஷமிட்டுக் கொல்லப்பட்டதாக இவரது தந்தை குற்றம் சாட்டினார்.
  • அஸ்ரம் டிரஸ்ட்டின் முன்னாள் தலைவர் திரு ராஜூ சந்தக், அஸ்ரம் மற்றும் அவரது உதவியாட்கள் இருவர் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக 2009 ல் புகார் கொடுத்தார்.
  • ஆசிரமத்துக்கென்று கொடுக்கப்பட்ட நிலத்தை சுற்றியிருந்த உபரி அரசு நிலத்தை அபகரித்தார்.
  • சத்சங் நடத்த இடம் கொடுத்த மங்கல்ய கோயில் இடத்தை சத்சங் முடிந்த பின்னாலும் காலி செய்யவில்லை.
எல்லாவற்றையும் மீறி தற்போது எழுந்துள்ள புதிய சர்ச்சை, பாலியல் குற்றம் தொடர்பானது. இவரது ஜோத்பூர்  ஆஸ்ரமத்தில் இருக்கும் 16 வயதுப் பெண் அஸ்ரம் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல் துறையில் புகார் அளித்தார். வழக்கம்போல குருஜியின் தரப்பிலிருந்து ‘இதெல்லாம் புனையப்பட்டது’ என்ற பதில் முதலில் வந்தது. அந்தப் பெண்ணின் தரப்பிலிருந்து கமலா மார்க்கெட் காவல் நிலையத்தில் குருஜிக்கு எதிராக ஒரு புகார் கொடுக்கப்பட்டது.
‘அஸ்ரம் பாபு ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஜோத்பூரை விட்டுக் கிளம்பிவிட்டார். இந்தப் பெண் சொல்லும் சம்பவம் எப்படி ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடந்திருக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்புகிறார் ஆஸ்ரமத்தின் செய்தித் தொடர்பாளர் சுனில் வான்கடே. ‘ஜோத்பூரில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்துக்கு இந்தப் பெண் டெல்லியில் புகார் கொடுத்துள்ளார். ஏனெனில், அங்கு மட்டுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எந்தவிதமான  விசாரணையும் இல்லாமல் காவல் துறையினரால் முதல் ஆய்வு அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. நாங்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறோம்.’
‘அஸ்ரம் பாபுவுக்கு எதிராக வழக்கைப் பதிவு செய்து புலனாய்வை ஓர் உதவி பெண் காவல்துறை ஆணையரிடம் ஒப்படைத்துள்ளோம்’ என்கிறார் ஜோத்பூர் காவல்துறை ஆணையர் பிஜு ஜார்ஜ் ஜோசப். புகார் தந்துள்ள பெண்ணுக்கு உரிய பாதுகாப்பை அளித்துள்ளதாகவும், மானாய் என்ற இடத்திலுள்ள குருஜியின் ஆஸ்ரமத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்தப் பெண் மத்தியப் பிரதேசம் சின்த்வராவில் அமைந்திருக்கும் அஸ்ரம் பாபுவின் குருகுலத்தில் கடந்த நான்கு வருடங்களாகப் படித்து வருகிறாள். உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த இவள் தற்சமயம் 12 ஆம் வகுப்பில் படிக்கிறாள். கொஞ்ச நாள்களாகவே அவள் ஆரோக்கியம் சரியில்லை. இதை அவளது பெற்றோர் அஸ்ரம் பாபுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தபோது, அவளை ஜோத்பூருக்கு அழைத்து வருமாறு அவர்களிடம்  கூறியிருக்கிறார். ஏதோ சடங்குகள் செய்ய வேண்டும் என்று சொல்லி அன்றிரவே பெற்றோர் முன்னிலையில் சில சடங்குகள் செய்திருக்கிறார். அடுத்தநாள், இன்னும் ஒரு  சடங்கு செய்ய வேண்டும், அதற்கு அந்தப் பெண் மட்டுமே தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆகஸ்ட் 15 இரவு அவளைத் தனது குடிலுக்கு அழைத்துப் போய் பேயோட்டுவதாகச் சொல்லி அவளை இயற்கைக்கு விரோதமான பாலியல் தொடர்புக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பயந்துபோன அந்தப் பெண் முதலில் இந்த விஷயத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் அஸ்ரம் அவளை தன்னுடன் அகமதாபாத் வரச் சொன்னபோது, வீட்டுக்குச் சென்று, இரண்டு நாள்கள் கழித்து நடந்ததைக் கூறியிருக்கிறார்.
தனது புகாரில் ராம்லீலா மைதானத்தில் ஆகஸ்ட் 1820 தேதிகளில் நடக்கவிருந்த முகாமுக்குத் தன் தந்தை தன்னை கூட்டிக்கொண்டு குருஜியைப் பார்க்க வந்தபோது, குருஜி தங்களை சந்திக்காமலேயே போய்விட்டதாகவும் கூறியிருக்கிறாள். அதற்குப் பிறகுதான் அவளது தந்தை காவல் நிலையத்தை அணுகத் தீர்மானித்தார்.
ராஜஸ்தான் காவல்துறை இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை செய்யாது என்று கருதிய பெண்ணின் தந்தை டெல்லியில் வழக்கைப் பதிவு செய்திருக்கிறார். பிறகு ஜோத்பூருக்கு வழக்கு மாற்றப்பட்டது. டெல்லி காவல்துறை அந்தப் பெண்ணின் அறிக்கையை குற்றவியல் நடைமுறைக் குறியீடு பகுதி 164 இன் கீழ் பதிவு செய்திருக்கிறது. இந்திய சட்டக் குறியீடு 376 இன் கீழும், குழந்தைகள் பாலியல் குற்ற பாதுகாப்பு சட்டத்தில் பல்வேறு பகுதிகளின் கீழும்  வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
கைது செய்ய வந்த காவல் துறையினரைச் சுமார் எட்டு மணிநேரம் காக்க வைத்திருக்கிறார் அஸ்ரம். தனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாகவும், இப்போது தன்னால் வெளியில் வரமுடியாது என்றும் கூறியிருக்கிறார். ஒருவழியாக நடு இரவுக்குப் பின் கைது செய்தனர்.
தற்சமயம் சிறை வாசம் அனுபவித்து வரும் 72 வயதாகும் அஸ்ரம், 1960 களில் தன்னுடைய சமய போதனைகளை ஆரம்பித்தார். சுமார் 200 ஆஸ்ரமங்கள் இந்தியா முழுக்க இருக்கின்றன. ‘சந்த் ஸ்ரீ அச்ரம்ஜி ஆஸ்ரம்’ நடத்தும் இணையதளத்தில் காணப்படும் விவரங்களின்படி இந்த ஆன்மிக குரு 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தௌமல், மேகிபா சிருமலானி ஆகியோரின் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். ஆசுமல் என்பது பூர்வாசிரமப் பெயர்.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானிலுள்ள சிந்த் மாவட்டத்திலிருந்து குஜராத்திலுள்ள அகமதாபாத் அருகில் இருக்கும் மணி நகருக்கு இவரது குடும்பம் குடி பெயர்ந்தது. தந்தையின் மரணத்துக்குப் பிறகு வாழ்வின் பொருளை அறிவதிலும் அதன் பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிப்பதிலும் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. உலக வாழ்க்கையை வெறுத்து விடுவாரோ என்று பயந்து லக்ஷ்மி தேவி என்ற பெண்ணை இவருக்கு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்தனர். 1968 ஆம் ஆண்டு தனது குடும்பத்தை விட்டு விருந்தாவனத்துக்குச் சென்றார். அங்குள்ள ஆஸ்ரமத்தில் 70 நாள்கள் இருந்துவிட்டு, மவுண்ட் ஆபுவிலுள்ள குகைகளில் தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு அகமதாபாத் திரும்பி சபர்மதி நதிக்கரையில் ஆஸ்ரமம் நிறுவி, தன் உபதேசங்களை ஆரம்பித்தார். இவருக்கு நாராயண் பிரேம் சாய் என்று ஒரு பிள்ளையும், பாரதி தேவி என்றொரு பெண்ணும் இருக்கிறார்கள். இவரது பிள்ளையும் ஓர் ஆன்மிக குரு.
எல்லாச் சாமியார்களுக்கும் இருக்கும் எண்ணிலடங்கா பக்தர்களைப் போல இவருக்கும் உண்டு. இவரைக் கைது செய்தது தப்பு, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இவர்கள் கோஷம் போடுகிறார்கள்.
குரு பக்தி என்ற பெயரில் இத்தகையவர்கள் வளர்த்து வரும் குருட்டு நம்பிக்கையை முதலீடாகக் கொண்டுதான் அஸ்ரம் பாபுக்கள் தங்கள் வியாபாரத்தை நடத்துகிறார்கள்.

புதன், 9 அக்டோபர், 2013

புர்கா அவெஞ்சர் பராக் பராக்!


செப்டம்பர் மாத ஆழம் இதழில் வந்த எனது கட்டுரை 



‘பள்ளி ஆசிரியையான ஒரு பெண், அடக்குமுறையின் சின்னமான கறுப்பு புர்காவை அணிந்து கொண்டு  தனது கல்விக்கும், சுதந்திரத்திற்கும் தடையாக இருப்பவர்களை அழிக்க எடுக்கும் அவதாரமே ‘புர்கா அவெஞ்ஜர்’.


பாகிஸ்தான் ஜியோ தொலைக்காட்சி தொடராக ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து ஒளிபரப்பாகி வரும் ‘புர்கா அவெஞ்ஜெர்’ கதாநாயகி ஜியாவைப் பற்றிய அறிமுகத்தில் இப்படிக் கூறுகிறார் இந்தத் தொடரை எழுதி உருவாக்கியிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த  பாப் பாடகர் திரு ஆரோன் ஹரூன் ரஷித்.


‘புர்கா அவெஞ்ஜெர்’ என்பது வீர தீர செயல்கள் செய்யும் ஒரு பெண்ணைப் பற்றிய நகைச்சுவை கலந்த ஒரு உயிரூட்டப்பட்ட தொலைக்காட்சி தொடர். ஹல்வாபூர் என்ற கற்பனை நகரத்தின் ஊழல் மன்னனான அரசியல்வாதி வதேரோ பஜெரோ,  தீய மந்திரவாதி பாபா பண்டூக் மற்றும் இவர்களது  அடியாட்களுக்கு எதிராக போராடும் இந்த பெண்ணிற்கு மூன்று சிறுவர்கள் நண்பர்கள். உருது மொழியில் தயாரிக்கப்பட்ட,  பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட முதல் அனிமேட்டட் தொடர் இது. இதுவரை 22 நிமிடங்கள் ஓடும் 13 பகுதிகள் தயாராகி இருக்கின்றன.  


இந்த தொலைக்காட்சித் தொடரின் முக்கியக் குறிக்கோள் மக்களை சிரிக்க வைத்து, மகிழ்விப்பது மட்டுமல்ல; நேர்மறையான எண்ணங்களை இளைய தலைமுறையினரிடம் உருவாக்கவும் செய்வதும்தான்.


இதில் வரும் கதாபாத்திரங்கள்:

ஜியா என்னும் புர்கா அவெஞ்ஜெர்

சிறுவயதிலேயே பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட ஜியா, ஒரு வயதான, மிக நல்ல கபடி ஆசிரியராக இருக்கும் கபடி ஜன் என்பவரால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டு அவரது மகளாக வளர்ந்து வருகிறாள். கபடி ஜன், ஜியாவிற்கு தக்ட் கபடி என்னும் ஒரு புதிய சண்டையிடும் முறையை சொல்லித் தருகிறார். இந்த வீர விளையாட்டில் கராத்தே பயிற்சிக்குண்டான கை கால் அசைவுகளுடன் புத்தகங்களும் எழுதுகோல்களும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மலாலா நினைவு வருகிறதல்லவா?


உள்ளூர் வாசிகளுக்கு அமைதியான ஒரு பள்ளி ஆசிரியராக காட்சியளிக்கும் ஜியா, எப்போதெல்லாம் அநியாயம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் வீரப் பெண்மணியாக அவதாரமெடுக்கிறாள். அந்த அவதாரத்தில் அவள் கறுப்பு புர்காவை அணிந்து கொண்டு வருவதால் புர்கா அவென்ஜெர் என்று அறியப்படுகிறாள். அவள் அப்படி இன்னொரு அவதாரம் எடுப்பதை அவளது அப்பா கபடி ஜன் மட்டுமே அறிவார்.


இம்மு – ஆஷு

இம்மு என்கிற இம்ரான், அவனது சகோதரி ஆஷு இருவரும் இரட்டைப்பிறவிகள். இம்மு தனது சகோதரியை  பொத்தி பொத்தி காப்பவன். மிகவும் அமைதியாகவும், அடக்கமாகவும் ஆனால் யாருடனும் ஒட்டாமல் இருக்கும் இம்முவின் நண்பர்கள்  மூலி மற்றும்  கோலு (செல்ல ஆட்டுக்குட்டி). இம்மு சற்றும் பயமில்லாமல், தன் உள்ளுணர்வின்படி நடந்து தன்னையும் தன் நண்பர்களையும் இக்கட்டிலிருந்து காப்பாற்றுபவன்.


வதேரோ பஜெரோ

எல்லோரையும் தனது இரும்புக் கை கொண்டு அடக்கும் ஹல்வாபூரின் மேயர். அதிகார வெறியன். பண வெறியன். ஊழல் அரசியல்வாதியின் அசல் பிம்பம். பாபா பண்டூக் என்ற ஒரு தீய மந்திரவாதியுடன் இணைந்து எல்லாவிதமான கெட்ட செயல்களையும் செய்பவன். தனக்குக் காரியம் ஆக வேண்டுமென்றால் கழுதையின் காலையும் பிடிக்கத் தயங்காதவன்.


மூலி 

ஆஷு, இம்ரானின் நண்பன். கவர்ச்சியானவன் ஆனால் கொஞ்சம் அசடு. இரட்டையர்  பண்ணும் எல்லா சாகசத்திலும் கூட இருப்பவன். பயந்தாங்கொள்ளி ஆதலால் எப்போதும் ஆபத்தில் மாட்டிகொண்டு ஆஷு, இம்ரானால் காப்பாற்றப்படுபவன். எப்போதும் மூலி எனப்படும் முள்ளங்கியை தின்று கொண்டு தனது செல்ல ஆட்டுக் குட்டியை (கோலு) விட்டுப் பிரியாமல் இருப்பவன்.


கதை என்ன?

ஜியாவின் முக்கிய எதிரிகள் உள்ளூர் குண்டர்கள். ஜியா வேலை செய்யும் பள்ளியை மூடச் சொல்லும் இவர்களை எதிர்த்துப் போராட ஜியா புர்கா அவெஞ்ஜர் ஆக அவதாரம் எடுப்பதுதான் முக்கிய கதை. ‘ஒவ்வொரு பகுதியும் ஒரு அறநெறியை மையப்படுத்தி குழந்தைகளுக்கு ஒரு சமூக செய்தியை அழுத்தமாகச் சொல்லுகிறது’ என்கிறார் திரு ரஷித். ‘ஆனால் அது நகைச்சுவை, சாகசம், அதிரடி கலந்த கேளிக்கையாக இருக்கும்’.


பாகிஸ்தானியர்களுக்கு இது ஒன்றும் புதுக்கதை அல்ல. உள்ளூர் குண்டர்களுக்கும் புர்கா அவென்ஜருக்கும் இடையில் நடக்கும் இந்தப் போராட்டம் அவர்கள் அறிந்ததுதான். மிகவும் நகைச்சுவையுடன் புனையப்பட்டிருக்கும் இதில் வரும் வில்லன்களின் செயல்கள் பயத்தைவிட சிரிப்பையே வரவழைக்கிறது. இந்தத் தொடரை தெற்காசிய ‘நிஞ்ஜா’ தொடர் என்று சொல்லலாம். பெண்கல்வியின் அத்தியாவசியத்தை வலியுறுத்துவதுடன், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, மனிதர்களிடையே பாரபட்சமின்மை என்று பல விஷயங்களையும் சொல்லும் தொடராக இது உருவாகியிருக்கிறது.


இந்தத் தொடரின் கதாநாயகி அணியும் கறுப்பு வண்ண புர்கா பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் வாழும் பழமைவாத இஸ்லாமியப் பெண்கள் அணியும் இந்த உடை – அடக்குமுறையை குறிக்கும் உடையை, அதை எதிர்க்கப் போராடும் கதாநாயகி அணிந்திருப்பது ஏன்?


‘முதல் காரணம் ஒரு ‘தேசி’ உணர்வை பார்ப்பவர்களிடையே உருவாக்க. உண்மையான புர்கா மிகவும் பெரிதாக இருக்கும். ஆனால் இந்த வீராங்கனை அணிந்திருப்பது ‘நிஞ்ஜா’ அணிந்திருக்கும் உடையைப் போன்றது. இது உண்மையான புர்காவை விட வித்தியாசமானது. மற்ற சூப்பர் ஹீரோக்களைப் போல இந்த நாயகியும் தன் அடையாளத்தை மறைக்க இந்த உடையை அணிகிறாள்’ என்று விளக்குகிறார் ரஷித்.


செய்தித்தாள்களில் வந்த ஹரூன் ரஷித்தின் பேட்டியில் எதற்காக அவரது தொடரில் ஒரு பெண்ணை சூப்பர் ஹீரோவாக உருவாக்கினார் என்றும் எப்படி இந்தியர்களையும் இந்த தொடர் கவரும் என்றும், அவரது கதாநாயகி அணிந்திருக்கும் புர்கா எப்படி அவளைப் பறக்க வைக்க உதவுகிறது என்பது பற்றியும் கூறுகிறார்.


இந்தத் தொடர் எப்படி உருவானது?

‘2010 ஆம் ஆண்டு பல பெண்கள் பள்ளிகள் தீவிரவாதிகளால் மூடப்பட்டது எனக்கு எரிச்சலை மூட்டியது. அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். பாகிஸ்தானில் இது குறித்து ஒரு தொடர் எடுக்க வேண்டுமென்று எல்லோரும் பேசிக் கொண்டனர். நாமே எடுத்தால் என்ன என்று தோன்றியது. நானே சில வரைபடங்களை வரைந்தேன். பிறகு இஸ்லாமாபாதில் இருக்கும் திறமை வாய்ந்த உயிரூட்டப்பட்ட படங்களை வரையும் வரைகலையாளர்களை சந்தித்தேன். என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகப் புரிந்தது’.


‘எங்களது தொடரில் வன்முறை, துப்பாக்கி, குண்டு வெடித்தல் இருக்காது. அதற்கு பதில் எழுதுகோல்களும், புத்தகப்பைகளும் கெட்டவர்களின் மேல் எறியப்படும். பெண்கள் பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதும், புர்கா அவென்ஜெர் வந்து காப்பாற்றுவதும் ஆகிய பகுதிகள் மே 2012 இல் தயாராகின. அக்டோபர் 2012 இல் மலாலா சுடப்பட்டாள். நாங்கள் அதிர்ந்து போனோம். நிஜ வாழ்க்கையின் நிதர்சனம்  எங்கள் கலைப்படைப்பை கேலி செய்வதுபோல இருந்தது. இந்நிகழ்ச்சியை நிச்சயம் இதில் பிரதானமாகக் காட்ட வேண்டும் என்று நினைத்தோம். ஜனவரி 2013 இல் நாங்கள் தயாராகிவிட்டோம்.


இந்த தொடருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது?

இதுவரை வந்த கருத்துக்கள் எல்லாமே நேர்மறையானதாகவே இருக்கின்றன. மிகப் பெரிய தாக்கத்தை, ஒரு தொற்றுநோய் போல பாகிஸ்தான் முழுதும் ஏற்படுத்தியிருக்கிறது. பல நாடுகளிலிருந்தும் மக்கள் இதைப்பற்றிப் பேசி வருகிறார்கள்.


புர்கா என்ற ஆடையை நவ நாகரீக சின்னமாக நீங்கள் மாற்றி விட்டீர்கள் என்று சிலர் சொல்லுகிறார்களே?

எனது கதாநாயகி ஒரு பள்ளி ஆசிரியை. தினசரி அவள் புர்கா அணிவதில்லை. ஏன் தலையை மூடும் ஸ்கார்ப் கூட அணிவதில்லை. அவளது அடையாளத்தை மறைக்கவே – எல்லா சூப்பர் ஹீரோக்களைப் போல – புர்கா அணிகிறாள். அவள் அணியும் அந்த உடையே அவளுக்கு உயர உயர செல்லவும் உதவுகிறது. புர்கா அணிந்து போராடுவது பலவித சுதந்திரங்களை அவளுக்குக் கொடுக்கிறது’.


மேற்கத்திய நாடுகள் எப்படிப்பட்ட பெண் கதாநாயகிகளை உருவகப்படுத்தி இருக்கிறார்கள் என்று பாருங்கள் எல்லா கதாநாயகிகளுமே செக்ஸ் குறியீடாகவே, செக்ஸ் பொருளாகவே -பூனைப் பெண்ணிலிருந்து அபூர்வ பெண்மணி வரை - எல்லோருமே கவர்ச்சிகரமாக சித்தரிக்கப் படுகிறார்கள். அது தவறு. எனது கதாநாயகி உடுத்தும் உடை அவளது பாலியலைக் குறிப்பதில்லை மாறாக  அது அவளது பலத்தைக் குறிக்கிறது.


உங்கள் கதாநாயகி யாரை அல்லது எந்த தீய சக்தியை எதிர்த்துப் போராடுகிறாள்?

வதேரோ பஜெரோ என்கிற ஊழல் மன்னன் ஆன ஒரு அரசியல்வாதி, பாபா பாண்டூக் என்கிற தீய மந்திரவாதி, அவனது தோழன், சீன தேசத்தில் உருவாக்கப்பட்ட ஒரு ரோபாட் இவர்கள்தான் இந்தத் தொடரின் வில்லன்கள். ஒவ்வொரு பகுதியிலும் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சினை, மூட நம்பிக்கைகள், மின்சாரத் திருட்டு, வேற்றுமை பாராட்டுதல் என்று பலவற்றை சித்தரிக்கிறோம்.


நான் சிறுவனாக இருக்கும்போது என் அம்மா எனக்கு நிறைய அறநெறிக் கதைகள் படித்துக் காட்டுவார். ஆனால் இன்றைய பாகிஸ்தானில் கல்வியறிவு மிகவும் குறைந்திருக்கிறது. மொழிமாற்றம் செய்யப்பட கார்டூன் படங்கள் தவிர  குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மிகவும் குறைவு. இந்தியாவிலிருப்பவர்களும் இந்தத் தொடரை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் பிரச்சினைகள் இந்தியாவிலும் இருக்கின்றனவே!


என்ன மாதிரியான கலாச்சார தாக்கம் இந்த தொடரில் இருக்கிறது?

முழுக்க முழுக்க எங்கள் நாட்டுணர்வை கொண்டு வந்திருக்கிறோம். கதாபாத்திரங்கள் வேஷ்டி கட்டிக் கொண்டு பெஷாவரி செருப்புகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரோபோட் உடலில் பாகிஸ்தானின் புகழ் பெற்ற ‘ட்ரக் ஆர்ட்’ வரையப்பட்டு இருக்கும். எல்லா வீடுகளிலும் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான ஒரு ஆட்டுக்குட்டியும் இந்தக் கதையில் உண்டு.  ஹல்வாபூரின் பின்னணி லாகூர் நகரத்தை ஒத்திருக்கும். ஆனால் மிகவும் அழகான வடக்கு மலைப்பகுதியில் கதை நடக்கிறது.
இது வெறும் அனிமேட்டட் படம் மட்டுமல்ல. நான் ஒரு பாடகனாக இருப்பதால், அலி ஜாபர், அலி அஸ்மத், ஜோஷ் முதலியவர்களையும், சூஃபி, ஹிப்-ஹாப் டோல் முதலியவற்றையும் பயன்படுத்தியிருக்கிறேன். தெற்கு ஆசிய இசை நிகழ்ச்சிகளில் இடம் பெறும் பாடல்களும் இடம் பெறுகின்றன.


உங்களை தூண்டிய சக்தி எது?

எங்கள் பொறுப்புகளை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். நாட்டின் பிரச்னைகள் எங்கள் முகத்தில் அறையும்போது ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. எங்கள் நாட்டிற்காக நல்லது செய்வதில் பெருமைப்படுகிறோம்.



பாகிஸ்தானிய பாப் பாடகர்கள் வெறும் ஸ்டைலை மட்டும் காண்பிக்காமல் தங்கள் எண்ணங்களின் சாரத்தையும் கொடுக்க தயாராகி வருகிறார்கள். நல்ல விஷயம் யார் செய்தால் என்ன? வரவேற்போம்.