திங்கள், 31 மார்ச், 2014

யுகாதி தின வாழ்த்துகள்!




யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள். 
இப்பொழுது நடப்பது கலியுகம். அப்படியானால்  இது கலியுகம் ஆரம்பித்த தினத்தின் வருட ஆரம்பத்தைக் குறிக்கிறதா? கலியுகம் கிருஷ்ண அவதாரம் முடிந்ததிலிருந்து துவங்கியதாகக் கருதப்படுகிறது.  

இது, ஆங்கில வருடம் (சரியாகச் சொன்னால்  ரோம வருடங்கள்) கி.மு.3102-ல் க்ரெகேரிய நாட்காட்டியில் ஜனவரி 23-ம் தேதியிலும், ஜூலியன் நாட்காட்டியில் (தற்போது நடைமுறையில் உள்ளது)  ஃபெப்ரவரி 18-ம் தேதியிலும் - துவங்கியதாகக் கூறுவர். யுக ஆரம்பத்தில் அனைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் ஆரம்பம் ஆவதாகக் கொண்டு கணக்கிடுவர். 

இதை கருத்தில் கொண்டு ஆர்யபட்டர் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கணக்கிட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த தேதியைக் கூறுவர். 

பின்னர், பல்வேறு வானியல் நிபுணர்கள் கெப்லரின் முறையைக் கையாண்டும் தற்போதைய கருவிகளைக் கொண்டும் ஆர்யபட்டரின்  இந்தக் கணக்கை உறுதிப் படு்த்தியுள்ளனர். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 20.02.2012 அன்று கலி பிறந்த 5113-ஆண்டு  தினம் வந்து சென்று விட்டது.

பின் இப்பொழுது இன்று யுகாதி என்று ஏன் கொண்டாடுகிறார்கள்?
வட மொழியில் யுக்மம் என்றால் இரண்டு; இந்த வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தது தான் யோகம் என்ற சொல். 

யோகம் என்றால் இணைப்பு அல்லது இணைவது; யோக சாஸ்த்ரம் என்பது உடலும் உள்ளமும் இணைந்து கட்டுப்படுவது.  அதே வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது தான் யுகம்.  இதற்கும் சதுர் யுகம் என்பதற்கும் யுகம்என்ற வார்த்தையைத் தவிர வேறு சம்பந்தம் இல்லை. 
 அதனால் இந்த யுகாதியை சதுர்யுகங்களின் ஆதி (ஆரம்பம்) என்று கொள்ளக் கூடாது.

சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் இங்கு யுகம்என்று குறிக்கின்றனர்.  ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் அதே ஆரம்ப இடத்தில் இணையும். 

ஆனால் சூரிய, சந்திர சுழற்சி நாட்காட்டியை பயன்படுத்துபவர்கள்  முறையே சூரியன், சந்திரன் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் அந்த 0 டிகிரியைத் தொடும் தினங்களை அவரவர் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவர்.

பொதுவாக நாட்காட்டிகள் மூன்று வகைப்படும். 

அவை,

1.  சௌர (அ) சூரிய நாட்காட்டிகள் (Solar calendars);

2.  சந்திர நாட்காட்டிகள் (Lunar calendars) ;

3.  சந்த்ர-சௌர நாட்காட்டிகள் (luni-solar calendars)

சூரிய ஆண்டு என்பது பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் ஆண்டு. 

இதில் சந்திரன் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. 

உதாரணம்: 

க்ரெகாரிய ஜூலியன் நாட்காட்டிகள்; இந்தியாவில் தமிழக கேரள நாட்காட்டிகள் இவை, சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வதை (வடமொழியில் சங்கராந்தி என்பர்) மாதமாகக் கொள்வர்.  

இந்தியாவில் இந்த சௌர மாதத்தில் நான்கு வெவ்வேறு வகைகள் உள்ளன. (அவற்றைப் பற்றி வெறு ஒரு சமயத்தில் பார்க்கலாம்).

சந்திர ஆண்டு என்பது புதுச் சந்திரன் வளர்ந்து பின் தேய்ந்து மறைந்து பின் புதுச் சந்திரனாக ஆரம்பிக்கும் காலத்தை (அல்லது) பௌர்ணமி சந்திரன் தேய்ந்து பின் வளர்ந்து பின் பௌர்ணமியாக மாறும் காலமான, சுமார் 30 நாட்களை (மாதாமாதம் இது 29.45 முதல் 31.45 நாட்கள் வரை வேறுபடும்) ஒரு மாதமாகக் கணக்கிட்டு 12 மாதங்களை ஒரு ஆண்டாக (30 X 12 = சுமார் 360 நாட்கள்) கணக்கிடப்படும் நாட்காட்டி. 

இதில் சூரியனை பூமி சுற்றுவது கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. 

12 மாதங்கள் முடிந்தவுடன் அடுத்த ஆண்டு துவங்கிவிடும். 

உதாரணம் : 

இஸ்லாமிய நாட்காட்டி; இதில் அமாவாசை முடிந்து அடுத்து பிறைத் தெரியும் நாளிலிருந்து மாதம் ஆரம்பிக்கும். 

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது சந்திர மாதம் சராசரியாக 30 நாட்களைக் கொண்டது (சராசரி என்பதை கவனிக்கவும் அதாவது சில மாதங்கள் 30 தினத்திற்குக் குறைவாகவும் சில மாதங்களில் 30 தினத்திற்கு அதிகமாகவும் இருக்கலாம்).

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட சந்தர-சௌர நாட்காட்டி என்பது, சந்திர ஆண்டுபடி மாதங்களைக் கொண்டிருந்தாலும் சூரியனைச் சுற்ற பூமி எடுத்துக் கொள்ளும் 365.2564 நாட்களின் மீதமுள்ள சுமார் 5/6 நாட்களைச் சேர்த்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகமாதமாக கொள்வது ஆகும். 

இந்த  முறை இந்தியாவில் ஆரம்பி்க்கப்பட்டது (தற்போது நேபால், பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற பிற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது). 

சீன நாட்காட்டியும் சந்திர-சௌர நாட்காட்டியே.

இந்த சந்தர-சௌர நாட்காட்டிக் கணக்கிடுவதில் பலவித வழிமுறைகளும் பலவித நாட்காட்டிகளும் வழக்கத்தில் உள்ளன. 

பொதுவாக வழக்கத்தில் உள்ள முக்கிய இரண்டு வகைகளைப் பார்க்கலாம். அவை,

1.          அமந்த நாட்காட்டி (அ) முக்ய மன முறை;

2.          பூர்ணிமந்த நாட்காட்டி (அ) கௌன மன முறை

அமந்த நாட்காட்டி என்பது, அமாவாசைக்கு அடுத்து புது நிலவு வளரத் துவங்கி வளர்ந்து பின் முழுவதுமாகத் தேய்வதை ஒரு மாதமாகக் கொள்வது. 

யுகாதி என்று இன்று கொண்டாடப்படும் வருடமும் இந்த அமந்த நாட்காட்டியின் அடிப்படையில் அமைந்த ஆண்டின் துவக்கமே. 

இந்த வகை நாட்காட்டியில்  மாதங்களின் பெயர்கள் நடுவில் வரும் சூரியமாதங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். 

உதாரணத்திற்கு 23.3.2014-ல் துவங்கும் இந்த மாதம் அடுத்த அமாவாசை அதாவது 21.04.2014 வரை இருக்கும். 

இதன் நடுவில் 14.04.2014 அன்று துவங்கும் சூரியமாதம்  (தமிழ் புத்தாண்டு) சித்திரை மாதம். எனவே, இந்த அமந்த மாதமும் சித்திரை  என்றே அழைக்கப்படும். 

ஆனால், சில வேளைகளில் இது மாறவும் செய்யும். உதாரணத்திற்கு, இந்த வருட தமிழ் மாதமான புரட்டாசியில் இரண்டு அமாவாசைகள் (1, 30 தேதிகளில்) வருகின்றன. 

1-ம் தேதி முடியும் மாதம் பாத்ரபாதம் (இதன் தமிழ் மரூஉ தான் புரட்டாசி) என்றும் 30-தேதி முடியும் மாதம் ஆச்வினம் (அஸ்வினி அல்லது ஐப்பசி) என்றும் குறிப்பிடப்படுகின்றன. 

சில சந்திர மாதங்களி்ன் நடு்வில் சங்கராந்தி எதுவும் வராமல் இருந்துவிடும். 

அச்சமயங்களில்  முதலில் வரும் மாதம் பின் வரும்  மாதத்தின் அதிகமாதமாகக் கொள்ளப்படும்; 

பின்னால் வரும் மாதம் அந்த மாதத்தின் நிஜமாதம் என்று அழைக்கப்படும். 

பண்டிகைகள் நிஜமாதங்களை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படும்.

இதைத் தவிர க்ஷய’ (அதாவது குறை) மாதம் என்று ஒன்று உண்டு. இதில், ஒரு சந்திர மாதத்தில் இரண்டு சங்கராந்தி வரும். 

க்ஷய ஆண்டுகள் 19, 46, 65, 76, 122, 141 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு விதங்களில் வரும்.

 குறைமாதமும் அதிகமாதமும் அடுத்தடுது வருவது  மிகமிக அபூர்வம். இது கடைசியாக 1315-ல் அக்டோபர் 18 – நவம்பர் 15 வரை அதிககார்த்திகை மாதமாகவும்  நவம்பர் 16 – டிசம்பர் 15 வரை (விருச்சிக-தனுர் சங்கராந்திகள் நிகழ்ந்ததால்) கார்த்திகை-மார்கசீர்ஷ குறைமாதமாகவும் இருந்தன. டிசம்பர் 16 இலிருந்து (அடுத்த ஜனவரி 15க்குள் மகர சங்கராந்தி வந்துவிடுவதால்) புஷ்ய மாதம் ஆரம்பித்தது.

மற்ற நாட்காட்டிகளைப் பற்றி வேறு ஒரு சமயத்தில் பார்ப்போம்...

இந்த அமந்த நாட்காட்டிகளை ஆந்திரம், கர்நாடகம், மராட்டிய மாநில மக்கள் பின்பற்றுகின்றனர். 

அதை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இன்று இந்த நாளை யுகாதியாக அதாவது வருடப் பிறப்பாக்க் கொண்டாடுகின்றனர்.

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்.

தகவல், நன்றி: திரு அனந்தநாராயணன்


சனி, 29 மார்ச், 2014

காற்றை எப்படி வகைப்படுத்தலாம்...



Inline images 1

(1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று

(2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று

(3) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று

(4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

(1) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"

(2) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"

(3) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"

(4) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"

(5) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"

(6) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"

(7) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"

(8) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"


தகவல் நன்றி: திரு அனந்தநாராயணன்


...
-- 

சனி, 8 மார்ச், 2014

பாட (ல்) பெறாத தலைவிகள்

வல்லமை இதழில் (8 மார்ச், 2014) வெளியான மகளிர் தின சிறப்புக் கட்டுரை



ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் என்றால் பல பெண்கள் என் நினைவிற்கு வருவார்கள். முதலில் என் பாட்டி, பிறகு என் அம்மா, என் அக்கா. இவர்கள் எல்லோரையும் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறேன். இன்னும் பல பக்கங்கள் எழுதலாம். ஆனால் இந்த மகளிர் தினத்திற்கு எனது தோழிகள் மற்றும் எனது மாணவிகள் சிலரைப்பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.

மகளிர் நலம் பற்றிய கட்டுரையில் இவர்களின் பங்களிப்பு என்ன என்று தோன்றுகிறதா? தொடர்ந்து படியுங்கள் புரியும்.

முதல் அறிமுகம் சாந்தி. நாங்கள் பெங்களூரு வந்த புதிதில் இவளும் திருமணம் ஆகி இந்த ஊருக்கு வந்தவள். எனது தோழியின் உறவு. தோழியின் தொடர்பு விட்டுப்போய் பலவருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சாந்தியுடன் ஆன எனது நட்பு இன்றும் தொடருகிறது – கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக. வியப்பாக இருக்கிறது, இல்லையா?

எங்கள் நட்பு இத்தனை வருடங்கள் ஆனபின்னும் வலுவாக இருக்கக் காரணம் நிச்சயம் நானில்லை. இந்தப்பெருமை முழுக்க முழுக்க சாந்தியைத்தான் சேரும். முதலில் சாந்தியின் வீடு எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தது. சாந்தி வேலை செய்த பள்ளிக்கூடமும் அருகில் அதனால் ஏறக்குறைய தினமுமே சாந்தி என் வீட்டிற்கு வருவாள். என் குழந்தைகளுக்காக செய்யும் சிற்றுண்டியை சாந்திக்கும் கொடுத்து இருவருமாக காப்பி சாப்பிடுவோம். சில மாதங்களில் அவள் கருவுற்றாள். பிரசவத்திற்கு தாய்வீடு செல்லும்வரை மாலைவேளைகளில் எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். சில மாதங்களில் நாங்கள் வேறு வீட்டிற்கு மாறினோம். சாந்தியும் கணவரின் வேலை காரணமாக போபால் போய்விட  தொடர்பு விட்டுப் போயிற்று. வருடங்கள் கழிந்தன. ஒருநாள் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்-இல் நாங்கள் இருவரும் மீண்டும் சந்திக்க – நட்பு தொடர்ந்தது.

எனக்கு சாந்தியிடம் மிகவும் பிடித்த விஷயம் எதற்கும் துளிக்கூட அலுத்துக் கொள்ள மாட்டாள். எங்கள் வீட்டுப் பக்கம் வரும்போதெல்லாம் நிச்சயம் எங்கள் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாள். பல மாதங்கள், வருடங்கள் பார்க்கவில்லை என்றாலும் நேற்று பார்த்து பேசியதை இன்று தொடர்வது போல குற்றம் குறை கூறாமல் பேசுவாள். ஏன் எங்கள் வீட்டிற்கு வரவில்லை; ஃபோனாவது செய்யலாமே என்று கேட்கவே மாட்டாள்.

வாழ்க்கை அவளை நிறையவே புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசவே மாட்டாள். என்ன ஒரு அதிசயமான குணம்! குணக்கோளாறான கணவர்; பிறந்தவீடு புகுந்த வீடு இரண்டு பக்கமும் எந்தவித ஆதரவும் கிடையாது. சின்னசின்ன பள்ளிகளில் வேலை; கொடுக்கும் சம்பளத்திற்கு மேல் பிழிந்து எடுக்கும் வேலை. ஆனால் இவற்றைப்பற்றி பேசவே மாட்டாள். எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? எனது தோழி சொல்வாள் கதை கதையாக. ஒருவழியாக இப்போது ஒரு பெரிய பள்ளியில் நல்ல சம்பளத்தில் வேலை. பவித்ராவும் படித்து முடித்துவிட்டாள். இனியாவது அவளது வாழ்க்கை நல்லவிதமாக அமைய வேண்டும் என்பதுதான் எனது தினசரிப் பிரார்த்தனை.

இரண்டாவது அறிமுகம் நிர்மலா. ஒருமுறை நானும் என் கணவரும் வெளியே போய்விட்டு திரும்பும்போது மழை கொட்டு கொட்டென்று கொட்ட, நாங்கள் அடைக்கலம் புகுந்தது நிர்மலாவின் கடையில். நாங்கள் இருவரும் தமிழில் பேசுவதைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குள் கூப்பிட்டு, தலை துடைக்க துண்டு கொடுத்து சுடச்சுட பாதாம் பால் கொடுத்தாள். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. நிர்மலாவும் தமிழ் நாட்டில் பிறந்தவள். திருமணம் ஆகி பெங்களூருக்கு வந்தவள். ஊறுகாய், அப்பளம் விற்கும் கடையை நடத்தி வந்தார்கள் கணவனும் மனைவியும். அத்துடன் பால் விநியோகம். கூடவே காப்பி, டீ, பாதாமி பால் தயாரித்துக் கொடுப்பார்கள். ‘காதலொருவனைக் கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து’ என்ற பாரதியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டியவள் நிர்மலா. விடியற்காலையில் வரும் பால் வண்டியிலிருந்து பால் பொட்டலங்களை எண்ணி வாங்கி இறக்குவதிலிருந்து, மணிக்கணக்கில் கடையில் நின்று கொண்டு வியாபாரத்தை மேற்பார்வையிடுவதும், காப்பி, டீ, பாதம் பால் போன்றவற்றை தானே தயாரிப்பதும் ஆக அலுக்காமல் சலிக்காமல் உழைப்பவள். எப்போது போனாலும் சிரித்த முகத்துடன், கடும் உழைப்பின் அயர்ச்சி முகத்தில் தெரியவே தெரியாமல் வரவேற்கும் பக்குவம் எப்படி வந்தது இந்தப் பெண்ணிடம் என்று நான் வியப்பேன். இவளும் தனது குடும்பக் கஷ்டங்களை வாய்விட்டுச் சொல்லவே மாட்டாள். இன்று இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்து சொந்த வீடும் வாங்கி தனது நிலைமையை முற்றிலும் மாற்றிக் கொண்டு விட்டாள் நிர்மலா.

மூன்றாவதாக எனது மாணவி வெங்கட்லக்ஷ்மி. அருமையான பெண். எனது வகுப்பில் சேர்ந்தபோது திருமணம் ஆகியிருக்கவில்லை. முதல் நாள் வகுப்பில் மாணவர்களை ‘அவர்களை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்’ பற்றிப் பேசச் சொன்னேன். லக்ஷ்மி சொன்னாள்: ‘நான் வேலையில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. இந்த மாதம் எல்லோருக்கும் சம்பள உயர்வு கொடுத்திருந்தார்கள். எனக்குத் தெரியும் எனக்கு சம்பள உயர்வு கிடைக்காது என்று. எல்லோருடைய சம்பள உயர்வையும் அறிவித்த எனது நிறுவன முதலாளி எனக்கு நாலாயிரம் ரூபாய் உயர்வு என்று சொன்னாவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. ‘உன்னுடைய திறமைக்கு நான் கொடுக்கும் பரிசு இது’ என்றார் அவர். இதுதான் மேடம் என்னை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்’ என்றாள். அலுவலக வேலையில் மட்டுமல்ல; எல்லாவற்றிலும் அவள் திறமையானவள் என்பதற்கு இன்னொரு சம்பவம்:

லக்ஷ்மி சேர்ந்திருந்த எனது வகுப்பு முடிவடையும் நாள். (வகுப்பு என்று நான் சொல்வது 24 நாட்கள் கொண்டது) கடைசி நாளன்று எங்கேயாவது போகலாம் என்று மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். காலையில் போய்விட்டு இரவுக்குள் திரும்பிவிட வேண்டும். பலரும் பல யோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். லக்ஷ்மி வந்தவுடன் எல்லோரும் அவளிடத்தில் யோசனை கேட்டனர். அவள் சொன்னாள்: ‘சிவன சமுத்திரம் போகலாம். மழை பெய்து அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலையில் போய்விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடலாம். சிற்றுண்டி, மதியம் உணவு, எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்துவிட்டீர்களா? போவதற்கு வண்டி? எத்தனை பேர் போகிறோம்? ஒவ்வொருவரும் எத்தனை பணம் கொடுக்க வேண்டும்?’ கிடுகிடுவென்று திட்டம் போட்டு, தொலைபேச வேண்டியவர்களுக்கு பேசி, வண்டி, சிற்றுண்டி, மதிய உணவு, நீர் என்று எல்லா ஏற்பாடுகளும் விரல் சொடுக்கும் வினாடியில் செய்து முடித்தாள். சின்ன பெண் என்ன ஒரு சாமர்த்தியத்துடன்  நிலைமையை கையாளுகிறாள்!

லக்ஷ்மியின் அப்பா அம்மா இருவரும் கிராமத்திருப்பவர்கள். தனது தங்கைகளையும் தன்னுடன் பெங்களூருக்குக் கூட்டி வந்து அவர்களைப் படிக்க வைத்தவள் லக்ஷ்மி. தனக்குத் திருமணம் ஆனவுடன் தங்கைகளுக்கும் திருமணம் செய்து சொந்தமாக வீடு கட்டி அலுவலகம், குடும்பம் இரண்டையும் சிறப்பாக நிர்வகித்து வரும் லக்ஷ்மி என்னை வியக்க வைத்ததை என்னவென்று சொல்ல?


நான் சொன்ன இவர்கள் எல்லோருமே என்னைவிட சிறியவர்கள். ஆனால் நான் இவர்களிடம் கற்றது ஏராளம். சாதிப்பதற்கு என்று எந்தக் களனும் வேண்டாம்; சொந்த வாழ்வில் வெற்றி பெறுவதுதான் நிஜமான சாதனை என்று நிரூபித்த பாட(ல்) பெறாத இந்த தலைவிகளைப் பற்றிய இனிய நினைவுகளுடன் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!