ஞாயிறு, 30 டிசம்பர், 2012

எங்கள் மாமா


எங்கள் மாமா

ஸ்ரீரங்கம் என்றால் உடனே நினைவுக்கு வருவது எங்கள் பாட்டியின் வீடு மட்டுமல்ல; எங்கள் மாமாக்களின் நினைவும் தான்.
எங்கள் பெரிய மாமா சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தார். அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். அவரிடம் எங்களுக்கு சற்று பயம் அதிகம். எதிரில் நின்று பேச பயப்படுவோம்.
அடுத்த மூன்று மாமாக்களிடம் அதீத செல்லம். மாமா வா, போ என்று பேசும் அளவுக்கு சுதந்திரம். இந்த மூவரில் பெரிய மாமா திருமஞ்சனம் கண்ணன் என்கிற கண்ணப்பா மாமா. அவர்தான் இந்தப் பதிவின் நாயகன்.
நாங்கள் சிறுவயதினராக இருந்த போது  மாமா எங்களுடன் சில காலம் சென்னையில் தங்கி இருந்தார். அதனால் இந்த மாமா ரொம்பவும் நெருக்கமானவர் எங்களுக்கு.
மாமாவின் பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது. அவரது  புகைப்படங்களுக்கு பாத்திரங்கள் நாங்கள் – மாமாவின் மருமான்களும், மருமாக்களும் தான். அதுவும் நான் ரொம்பவும் ஸ்பெஷல்.
என் தோழி ஜெயந்தி எனக்கு photographic memory இருப்பதாக எழுதியிருந்தாள். என் மாமா நான் photogenic என்று அடிக்கடி சொல்லுவார். அதனால் மாமா எடுத்த படங்களின் முக்கிய கதாநாயகி நானாக இருந்தேன் – எனக்குத் திருமணம் ஆகி புக்ககம் போகும் வரை!
எங்களை சிறுவயதில் புகைப்படங்கள் எடுத்ததுடன் நிற்காமல் எங்களது திருமணங்களுக்கும் மாமாதான் புகைப்படக்காரர்.
தன்னிடமிருந்த கருப்பு வெள்ளை காமிராவில் மாமா காவியங்கள் படைத்திருக்கிறார். மாமாவின் புகைப்படங்களில் நாங்கள் எல்லோரும் உயிருடன் உலா வந்தோம். மாமா தன் புகைப்பட பரிசோதனைகளை எங்கள் மேல் நடத்துவார்.
மாமாவின் மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப நாங்கள் ‘போஸ்’ கொடுக்க வேண்டும். மாமா நினைத்தது புகைப்படத்தில் வரும் வரை எங்களை விட மாட்டார்.
இப்போது இருப்பது போல டிஜிட்டல் காமிராக்கள் இல்லாத நேரம் அது. ஒரு பிலிம் சுருள் முடியும் வரை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திருச்சி போய் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வருவார். கூடவே புதிய பிலிம் சுருளும் வரும், அடுத்த பரிசோதனைக்கு.
காவிரியில் ஆடிப்பெருக்கன்று சுழித்தோடும் வெள்ளத்திலிருந்து, மகாபலிபுரம் அர்ஜுனன் தபஸ் வரை மாமாவின் கருப்பு வெள்ளைக் காமிராவில் புகைப் படங்களாக சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும்.
எனக்கு நினைவு இருக்கும் மாமாவின்  புகைப்படப் பரிசோதனை ஒன்று. எனக்கு நானே புத்தகம் கொடுப்பது போல.
நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். காமிராவின் லென்ஸ் –ஐ பாதி மூடிவிட்டு உட்கார்ந்திருக்கும் படத்தை எடுப்பார். அடுத்தாற்போல அந்த நாற்காலி பக்கத்தில் நின்று கொண்டு காலி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். லென்ஸ்- இன் மறுபாதியை மூடிவிட்டு இந்தப் படத்தை எடுப்பார்.
திரும்பத் திரும்பத் திரும்பத் ……….
எத்தனை முறை இதனை எடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? எனக்கு இன்றுவரை நினைவு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அப்போதெல்லாம் செய்தி பரிமாற்றம் கடிதங்கள் மூலம்தான். நாங்களும் எங்கள் மாமாக்களுக்கு கடிதம் எழுதுவோம். கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது எங்கள் கண்ணப்பா மாமா தான்.
மாமாவுக்கு கணீரென்ற குரல். அகத்தில் இருக்கும் பெருமாளுக்கு அந்த கணீர் குரலில் பாசுரங்கள் சேவித்தபடியே மாமா திருமஞ்சனம் செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.
‘நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று மாமா நாத்தழுதழுக்க பெரிய திருமொழி சேவிக்கும்போது திருமங்கையாழ்வாரும், ‘எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்* எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’ என்று திருமாலை சேவிக்கும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் நம் கண் முன்னே தோன்றுவார்கள்.
கண்ணப்பா மாமாவுக்குத் திருமணம் ஆகி மாமி வந்தார். மாமா எங்களுக்கு எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ராஜம் மாமியும். திவ்யப்பிரபந்தம் மட்டுமே தெரிந்திருந்த எங்களுக்கு முமுக்ஷுப்படி, ஸ்ரீவசன பூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியவர் இந்த மாமிதான்.
‘பகவத்கீதையில் கிருஷ்ணனுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் ராஜத்தைத் தான் கேட்பார்’ என்று என் மாமா வேடிக்கையாகக் கூறுவார். அந்த அளவுக்குக் கீதையை கரைத்துக் குடித்தவர் மாமி.
பல திவ்ய தேசங்களுக்கும் சென்று அங்கிருக்கும் பெருமாள்களையும் தன் காமிராவில் சிறை எடுத்து வருவார் எங்கள் மாமா. மாமாவிற்கு தான் எடுத்த படங்களுள் மிகவும் பிடித்தமான படம் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார் தான். கூப்பிய கைகளுடன் நிற்கும் அவரது திரு முகத்தை மட்டும் க்ளோஸ்-அப் – பில் எடுத்து வீட்டுக் கூடத்தில் மாட்டியிருப்பார். ஆழ்வாரின்  கண்களின் வழியே அவரது கருணை நம்மை ஆட்கொள்ளும்.
இத்தனை திறமை இருந்தும் மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை. எத்தனையோ பேர்கள் சொல்லியும் தனது மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தார்.
எங்களது பாட்டியின் முதுமை காலத்தில் மாமாவும் மாமியும் மிகுந்த ஆதுரத்துடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டனர். மாமாவின் குழந்தைகளும் பாட்டியினிடத்தில் வாஞ்சையுடனும், மிகுந்த பாசத்துடனும் இருந்தனர். பாட்டியின்  கடைசிக் காலம் இவர்களது அரவணைப்பில் நல்லவிதமாக கழிந்தது. இதற்காக மாமாவுக்கும், மாமிக்கும் நாங்கள் எல்லோருமே நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.
கண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது. மார்கழித் திருவாதிரையில் பிறந்தவர் மாமா. எங்கள் அம்மா ஒவ்வொரு வருடமும் தனது தம்பியை நினைத்துக் கொண்டு திருவாதிரை களியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள்.
பழைய நினைவுகளுடன், மாமாவின் அன்பில் நனைந்த நாட்களை அசை போட்டபடியே இந்தப் பதிவை மாமாவுக்கு அர்ப்பணிக்கிறேன்.
மாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

முப்பதும் தப்பாமே.....!





இன்றைக்கு மார்கழி முதல் நாள்.

திருவாடிப் பூரத்து செகத்துதித்த, திருப்பாவை முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்றெடுத்த, பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான, ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த, உயரரங்கற்கு கண்ணி உகந்தளித்த, மருவாறும் திருமல்லி வளநாடி, வண்புதுவை நகர்கோதை அருளிச் செய்த திருப்பாவையால் சிறந்து விளங்கும் மாதம்.

தினமுமே திருப்பாவையை சேவித்த போதும் மார்கழியில் சேவிப்பது மன நிறைவைத் தரும். திருப்பாவையை நினைவு தெரிந்த நாளாக சேவித்து வருகிறேன்.

திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது விடியற்காலையில் மார்கழி மாதம் தினமும் பஜனை கோஷ்டி ஒன்று எங்கள் வீதி (நாகப்பா ஐயர் தெரு) வழியே போகும். அதுதான் எங்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி!

பள்ளியிலும் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுப்பார்கள். என் அக்கா, திருமதி எம்.எல்.வி. பாடிய ராகத்திலேயே எல்லாப் பாடல்களையும் அழகாகப் பாடுவாள். வாசலில் பெரிய கோலம் போடுவாள். நான்? ரசிப்பேன் அவ்வளவுதான்! நம்மால் முடிந்ததைத்தானே நாம் செய்ய முடியும்?

பிறகு புரசைவாக்கம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். லேடி எம்.சி.டி. முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.

திருப்பாவை என்றால் எனக்கு நினைவுக்கு வரும் – ஆண்டாளைத் தவிர – ஒருவர் திரு கேதாரேஸ்வர ஸர்மா. எங்கள் தமிழ் வாத்தியார், ஸர்மா ஸார்.

மார்கழி மாதம் முப்பது நாளும் பள்ளி முடிந்த பின் திருப்பாவை அன்றைய நாள் பாட்டை சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவரது மாணவிகளுள் ஒருவர் வீட்டிலிருந்து பிரசாதம் வரும்.

வெள்ளைவெளேரென்ற பஞ்சகச்சம். வெள்ளை நிற அங்கி அதன் மேலே வண்ண ஷால். கட்டு குடுமி. நெற்றியில் பளீரென்ற திருநீறு.
ஆண்டாளைப் பற்றி சொல்லுகையில் கண்களில் நீர் ததும்பும்!

தமிழ் வாத்தியார் என்றால் மனதில் தோன்றும் பிம்பத்துக்கு ஏற்றார்போல் எங்கள் ஸர்மா ஸாருக்கும் நிறைய பெண்கள் + ஏழ்மை.

திருப்பாவை உபன்யாசத்துக்கு நடுவே தன் ஏழ்மையையும், ஆண்டாளும் அவள் சாதித்த திருப்பாவையுமே தன் பெண்களை கரையேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்ணீருடன்  ஆண்டாளின் முன் வைப்பார்.
நாங்களும் கண்களில் கண்ணீருடன் அவருக்காக ஆண்டாளிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்து கொள்ளுவோம்.  

அவரது மாணவிகளைத் தவிர, சில தாய்மார்களும் அவரது உபன்யாசத்தைக் கேட்க வருவார்கள். பல தாய்மார்கள் நேரில் வராவிட்டாலும் பிரசாதம் செய்து அனுப்பி விடுவார்கள்.

கடைசி நாளன்று – வங்கக் கடல் கடைந்த  பாசுரத்தன்று ஆண்டாள் கல்யாணம் நடத்துவார். ரொம்பவும் அமர்க்களமாகப் பண்ணுவார். பூக்களும் நகைகளுமாக ஆண்டாளும் ரங்கமன்னாரும் மின்னுவார்கள். ஆண்டாள் பெருமாளுடன் கலந்து விட்டதை அவரால் சொல்லவே முடியாது. நா தழுதழுக்கும். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டும். உணர்ச்சிப் பெருக்கில் எல்லோரும் ஊமைகளாக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு நிறைய மாணவிகள், பெற்றோர்களுடன் வருவார்கள்.

நடுவில் ஒரு நாள் திருப்பாவைப் போட்டி நடக்கும்.

வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள் படம் பரிசு. வருடம் தவறாமல் கலந்து கொண்டு பரிசும் வாங்கி விடுவேன் நான்.

ஆண்டாள் சாதித்த திருப்பாவை முப்பதையும் தப்பாமல் சொன்னால் நல்ல வாழ்க்கை அமையும்  என்ற  விதையை ஒவ்வொரு மாணவியின் உள்ளத்திலும் விதைத்தவர் அவர்தான்.

அவரது பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. அவர் நம்பிய ஆண்டாள் அவரைக் கைவிடவில்லை.

நானும் அவர் சொல்லியதை அப்படியே நம்பினேன். என் பெண்ணின் உள்ளத்திலும் திருப்பாவை என்கிற வித்தை விதைத்தேன்.

எனக்கு ஒரு நாராயணனும், அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும்  கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது. 

'சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்....

என்பதற்கு  இதைவிட சாட்சி வேண்டுமா?




திங்கள், 10 டிசம்பர், 2012

பாத கமலங்கள் காணீரே!



1974 ஆகஸ்ட் 13 என் அக்காவின் குழந்தை சிரஞ்சீவி சம்பத்குமாரன் பிறந்தபோது நான் அடைந்த  சிலிர்ப்பு  1998 டிசெம்பர் மாதம் 10 ஆம் தேதி ரீப்ளே ஆயிற்று!

என் பேரன் சிரஞ்சீவி தேஜஸ் கிருஷ்ணா அன்று தான் சுப ஜனனம்.
வெளியில் நல்ல மழை. குளிரான குளிர். பெங்களூரு இந்த அளவிற்கு அசுத்தமடையாமல் இருந்த காலம்.

மருத்துவ மனையில் திரைப் படங்களில் காண்பிப்பார்களே அதைப் போல எங்கள் குடும்பமே உட்கார்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது என் மாப்பிள்ளை எழுந்து நடந்து விட்டு வருவார்.

‘குவா....குவா.... (நிஜமாகவே இப்படித்தான் குழந்தை அழுததா என்று நினைவில்லை!) அத்தனை பேரும் மூடியிருந்த பிரசவ அறையைப் ஒருவிதப் பரவசத்துடன் பார்த்தோம்.

கொஞ்ச நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து பச்சைத் துணியில் சுற்றிய ஒரு பஞ்சுப் பொதியை கொண்டு வந்து எங்களிடம் காண்பித்து ‘மம்மக (பேரன்) என்றாள். ஆக்ஷன் ரீப்ளே! நான் தான் வாங்கிக் கொண்டேன். உடனே சுதாரித்துக் கொண்டு மாப்பிள்ளை கையில் குழந்தையைக் கொடுத்தேன். அவர் பிள்ளை பிறந்த ஆனந்தத்தில் ‘பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

என் அம்மா, என் கணவர், என் பிள்ளை எல்லோரிடத்திலும் குழந்தையைக் காண்பித்து ‘நான் இப்போ proud பாட்டி! என்றேன். எனக்கு வயது 45.

என் பிள்ளை அப்போது பி.யு.சி. இரண்டாவது வருடம் தும்கூரில் படித்துக் கொண்டிருந்தான். என் பெண்ணின் புக்ககமும் தும்கூர் தான். பிள்ளைக்காக தும்கூரில் ஒரு வருடம் நான் தனிக் குடித்தனம். என் கணவர் இங்கே பெங்களூரில்.

குழந்தை பிறந்த கொஞ்ச நாளில் பெண்ணையும் குழந்தையையும் தும்கூர் கூட்டிப் போய் விட்டேன். என் பேரனின் ஒவ்வொரு அசைவையும், அவனது ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். மறக்க முடியாத நாட்கள் அவை.

அவனைக்  காலில் போட்டுக் கொண்டு தீர்த்தாமாட்டுவதில் இருந்து ஒவ்வொன்றும் அனுபவித்து அனுபவித்து செய்தேன்.

தலைப்பில் நான் சொல்லியிருக்கும் பெரியாழ்வாரின் பாசுரங்களை அன்றிலிருந்து நானும் அனுபவிக்க ஆரம்பித்தேன்.

‘பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே....!
‘முழந்தாளிருந்தவா காணீரே..!

நம் குழந்தைகளிடம் நாம் மிகவும் கண்டிப்பாக இருப்போம். நாம் நல்ல பெற்றோர்களாக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் நமது கண்டிப்பையும் கறார் தனத்தையும் காண்பிப்போம். அவர்களைக் கொஞ்சுவதைவிட கடிந்து கொள்வது அதிகம்.

அவர்களிடம் நம் எதிர்பார்ப்புகளும் விண்ணை முட்டும். அதி புத்திசாலியாக இருக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைகளை எல்லாம் நம் குழந்தைகள் ஈடு கட்ட வேண்டும். நம்மிடம் இல்லாத ‘perfection  -ஐ அவர்களிடம் எதிர்பார்ப்போம்!

அது மட்டுமல்ல; நமக்கு குழந்தைகள் பிறக்கும்போதுதான் நாமும் நம் உத்தியோகத்தில் உச்சகட்ட நிலையை அடைந்திருப்போம்; அல்லது அடையப் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருப்போம். குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவிட  முடியாமல் போகும்.

ஆனால் பேரன் பேத்திகள் என்றால் அதீத பாசம்! நமக்கு எந்தவிதப் பொறுப்போ பாரமோ கிடையாது. ஒரு சுகமான சுமை!

ஓரளவுக்கு நம் கடமைகளும் முடிந்திருக்கும். அவர்களுடன் கொஞ்சி மகிழ நிறைய நேரம் கிடைக்கும். நாமும் ஒய்வு பெற்றிருப்போம்; அல்லது ஓய்வு பெறும் நிலையில் இருப்போம்.  

அவனுக்கு நான் பாடிய தாலாட்டு பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே... பாட்டுதான்.

நான் பாடும்போது கண் கொட்டாமல் என்னையே பார்த்துக் கொண்டு படுத்திருக்கும். ‘ஒனக்கு ரொம்ப பிடிச்சுடுத்தா என் பாட்டு.. என்று நடு நடுவே அதனுடன் பேசிக் கொண்டே தூங்க வைப்பேன்.

என் கைதான் அவனை அளக்கும் கருவி. ‘முதலில் என் கையளவு தான் இருந்தது; இப்போ பார் வளர்ந்து விட்டது. கால் என் கையை தாண்டி போறது...

மூன்று மாதங்களில் ‘ராகி ஸரி கொடுங்கள் என்றார் என் மகளின்  மாமியார். ராகியை நனைத்து உலர்த்தி, முளை கட்டி, அதை சிறிது சிறிதாக வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்து வஸ்த்ர காயம் செய்ய, ராகி ஸரி கிடைக்கும். அதையும் அவரே செய்து கொடுத்தார். முதல் நாள் மிக மிக கொஞ்சம் ராகி ஸரியை எடுத்துக் கொண்டு நீரில் கரைத்து அடுப்பில் கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பாலை கலந்து குழந்தைக்குக் கொடுத்தேன். சாப்பிட்டு முடித்து ஒரு ராகம் இழுத்தது பாருங்கள், நான் அசந்தே போய் விட்டேன். ‘இப்போதான் அதுக்கு பிடிச்சதை குடுத்திருக்கோம் போலிருக்கு.. என்றேன் மகளிடம்.

ஏழு எட்டு மாதத்தில் ‘ஜொள்ளு விட ஆரம்பித்தது குழந்தை. உடனே அதற்கு விதவிதமாக பெயர்கள் சூட்டினேன் : ஜொள்ளேஷ், ஜொள்ளப்பா, ஜொள்ளண்ணா, ஜொள்ராஜ், ஜொள்குட்டி, ஜொள்கண்ணா என்று!

அப்படி நான் சீராட்டி, பாராட்டி வளர்த்த தேஜஸ் கிருஷ்ணாவிற்கு நாளை 14 வயது பூர்த்தி ஆகிறது.

அவன் மிக நன்றாகப் படித்து, சீரும் சிறப்புமாக இன்னும் பல பிறந்த நாட்களைக் கொண்டாட வேண்டும் என்பது இந்த பாட்டி, தாத்தா, மாமா, மாமி எல்லோருடைய ஆசீர்வாதங்களும்.

புதன், 5 டிசம்பர், 2012

அத்தையும் ராகி முத்தையும்!

002.jpg

(இது ‘மங்கையர் மலரில்’  2000 மாவது ஆண்டு வெளியான என் முதல் கதை.)
முன்குறிப்பு: ராகி முத்தை என்பது கர்நாடக மாநிலத்தின் முக்கிய உணவு. ‘ஹள்ளி’ (கிராமம்) யிலிருந்து தில்லிக்குச் சென்ற நமது மாஜி பிரதமர் திரு.ஹெச்.டி. தேவே கௌடாவை ‘முத்தே கௌடரு’ என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு அவரால் பிரபலப் படுத்தப்பட்ட உணவு.
“பன்னி, அத்தை, பன்னி மாவா,” என்று வாய் நிறைய வரவேற்றாள் எங்கள் மாட்டுப் பெண் ஷீதல். என் கணவர் அவரிடம், “பன்னியாச்சும்மா, சென்னகிதியா?” என்று கேட்டு வி.ட்டு பெருமை பொங்க என்னைத் திரும்பிப் பார்த்தார். அந்தப் பார்வைக்கு ‘என்னம்மா கன்னடம் பேசுகிறேன், பார்’ என்று அர்த்தம்.
நானும் என் பங்கிற்கு அவளை குசலம் விசாரித்து விட்டு, ஊரிலிருந்து நான் பண்ணிக் கொண்டு வந்திருந்த பட்சணங்களை அவளிடம் கொடுத்தேன்.
இதற்குள் என் அருமைப் புதல்வன் எங்களது பெட்டி படுக்கைகளை வீட்டினுள் வைத்துவிட்டு வந்தான்.
‘ஏம்மா! பிரயாணம் சௌகரியமாக இருந்ததா? அப்பா வழியெல்லாம் படுத்தினாரா?”
“இல்லடா, உன் அப்பாதான் பக்கத்து சீட்டில் இருந்த சீனியர் சிட்டிசனிடம் வசமாக அகப்பட்டுக் கொண்டார்,” என்றவள் அவரது முறைப்பை அலட்சியம் செய்தேன்.
குளித்து முடித்து டிபன் சாப்பிட உட்கார்ந்தோம்.
“இன்னிக்கு என்னம்மா டிபன்? சீக்கிரம் கொண்டா” என்ற என் கணவரை, “ஸ்..ஸ்.. பரக்காதீர்கள், வரும்” என்று அடக்கினேன்.
“இன்னிக்கு டிபன் அக்கி ரொட்டி” என்றபடி வந்தாள் ஷீதல்.
“என்னடாது அக்கி, படை என்று ஏதேதோ சொல்கிறாளே” என்று பதறிப்போய் மகனிடம் கேட்டேன்.
“அய்யோமா! அக்கி என்றால் அரிசி. அரிசி மாவில் ரொட்டி செய்திருக்கிறாள்.
சாப்பிட்டுப் பார். சூப்பரா இருக்கும்!”
“சரியான சாப்பாட்டு ராமன் ஆகி விட்டாய் நீ!” என்று அவனை செல்லமாகக் கடிந்து கொண்டு விட்டு சாப்பிட ஆரம்பித்தேன். நிஜமாகவே சூப்பராக இருந்தது. மாட்டுப் பெண்ணை மனதார பாராட்டிவிட்டு, ”அடுத்த முறை வருவதற்கு கன்னடம் கற்றுக் கொண்டு விட வேண்டும்,” என்றேன்.
“ஆமா, ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் சொல்லுகிறாய்!”
“அவளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தாயா?” என்றேன்.
மகன் கப்சிப்.
விஷயம் இதுதான்: எங்கள் பிள்ளை மாதவன் கன்னடப் பெண்ணை ப்ரீதி மாடி (காதலித்து) கல்யாணம் செய்து கொண்டு பெங்களூரில் இருந்தான். நாங்கள் வரும்போதெல்லாம் இந்தக் கூத்து தான்.
டிபன் சாப்பிட்டு முடிந்ததும், “சொல்ப காபி குடிக்கிறீங்களா மாவா?” என்றாள் ஷீதல். என் கணவர் அவசர அவசரமாக “சொல்ப போறாது. தும்ப (நிறைய) வேண்டும்,” என்றார். வேறொன்றுமில்லை. முதல் தடவை நாங்கள் வந்திருந்தபோது அவள் காபி கொண்டு வந்த டம்ளரைப் பார்த்து அசந்து விட்டோம். அதைவிட சின்ன சைஸ் டம்ளரை உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது. அந்த சின்னஸ்ட் டம்ளர் காப்பியை சூப்பி சூப்பி அவள் குடிக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். தண்ணீரைக் கூட இந்த ஊரில் எச்சில் பண்ணித்தான் குடிக்கிறார்கள்.
“என்ன இது! தண்ணீரையாவது தூக்கிக் குடிக்கக் கூடாதா?” என்றேன்.
“சின்ன விஷயம்மா, இதையெல்லாம் பெரிசு படுத்தாதே” என்று என் வாயை அடக்கி விட்டான் என் மகன்.
இது மட்டுமா? இதைப்போல பல சின்ன(!) விஷயங்களில் அவனது கல்யாணத்தின் போது வாயை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று. அவனது கல்யாணத்திற்கு முதல் நாள் பெங்களூர் வந்து இறங்கியவுடன் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். காரிலிருந்து பெண்ணின் வீட்டு முன் இறங்கியவுடன் ‘திக்’ கென்றது. இது முதல் ‘திக்’.
வீட்டு வாசலில் பச்சைத் தென்னை ஓலையில் பந்தல்! அவர்கள் வழக்கமாம் இது. பெண் வீட்டாரின் உபசரிப்பில் மயங்கிப் போயிருந்த என் உறவினர்களும் இதை கண்டு கொள்ளவில்லை. நானும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பேசாமல் இருந்து விட்டேன். அன்று மாலை வரபூஜை எனப்படும் மாப்பிள்ளை அழைப்பு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது.
மறுநாள் காலை கல்யாணம். கெளரி பூஜையுடன் ஆரம்பமாயிற்று. கௌரம்மனுக்கு பூஜையை முடித்துவிட்டு, எனக்குக் கைகளில் மஞ்சள் பொடியைக் கொடுத்து மணைமேல் அமரச் செய்தனர். என் கால்களுக்கு மஞ்சள் பூசினாள் என் மாட்டுப் பெண். பிறகு ‘மொறத பாகணா’ வை  (ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கண்ணாடி, சீப்பு, வளையல், ரவிக்கைத் துணி ஆகியவற்றை வைத்து இன்னொரு முறத்தால் மூடி) தன் மேல் புடவையால் மூடி என்னிடம் கொடுத்தாள். நானும் அவர்கள் சொன்னபடி என் புடவைத் தலைப்பால் மூடி வாங்கிக் கொண்டேன்.
என் கைகளில் அக்ஷதையைக் கொடுத்து நமஸ்கரித்து எழுந்தவளைப்  பார்க்கிறேன். மறுபடி ‘திக்’. இரண்டாவது ‘திக்’. அவள் கழுத்தில் தாலி! என் திகைப்பை மறைத்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புடன் அவள் முகத்தையும், அவள் கழுத்திலிருந்த தாலியையும் மாறி மாறிப் பார்த்தேன். நான் ‘திரு திரு’ வென முழிப்பதை பார்த்துவிட்டு, என் சம்மந்தி அம்மாள் “ஏன் பேக்கு? ஏன் பேக்கு?” என்றார். என்ன இவர் நம்மைப் பார்த்து பேக்கு, பேக்கு என்கிறாரே! (அதுவும் இரண்டு தடவை வேறு!) என்று நினைத்துக் கொண்டே தாலியைக் காட்டினேன்.
“ஓ! அதுவா? அது ‘தவருமனே’ தாலி (பிறந்தகத்துத் தாலி) கெளரி பூஜை பண்ணும்போது பெண்ணின் கழுத்தில் தாலி இருக்க வேண்டும். பெண்ணின் தாயார் இதைக் கட்டி விடுவார்” என்று விளக்கம் அளித்தார். ஓ! இந்த சம்பிரதாயத்தை வைத்துத்தான் ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ என்ற படம் எடுத்தார்களோ? என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன், “அப்படியா? சந்தோஷம். என் பிள்ளையும் தாலி கட்டுவான் இல்லையா?” என்று ஜோக் அடித்தேன். அவர்கள் யாரும் சிரிக்காததால் நானே ‘ஹஹ ஹஹ!’ என்று சிரித்து விட்டு நகர்ந்தேன்.
நல்லபடியாக மாங்கல்ய தாரணம் ஆயிற்று. எங்கள் பக்கத்து உறவினர்கள் சாப்பாட்டிற்கு உட்கார்ந்து இருந்தனர். பந்தி விசாரிக்க ஆரம்பித்தேன்.
“ஏண்டி கோமளி! ஒரு வாழைக்காய் கறியமுது இல்லை. ஒரு தயிர் வடை இல்லை. என்ன கல்யாண சாப்பாடு, போ!” என்று ஒரு குரல்! மூன்றாவது ‘திக்’. குரல் வந்த திசையைத் திரும்பியே பார்க்காமல் சம்மந்தி அம்மாவைத் தேடி விரைந்தேன். அவர் ரொம்பவும் ‘கூலா’க “ஓ! பாளேகாய் பல்யா? உத்தின் வடே! அதெல்லாம் கல்யாணத்திற்குப் போட மாட்டோம். ஆகாது” என்றார்.
‘வாழைக்காய் கறியமுதும் தயிர் வடையும் சாப்பிட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்ட நாங்கள் எல்லாம் பேக்கா?’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். (அட! எனக்கும் சாக்கா, பேக்கா என கன்னடம் பேச வந்து விட்டதே!)
ஒரு வழியாக எல்லா திக், திக், திக்குகளையும் சமாளித்துவிட்டு என் பிள்ளைக்கு பெங்களூரிலேயே வேலையானதால் குடித்தனத்தையும் வைத்து விட்டு சென்னைக்குத் திரும்பினோம்.
சும்மா சொல்லக் கூடாது. என் பிள்ளை எள் என்றால் எண்ணையாக வழிவான்; வெட்டிண்டு வா, என்றால் கட்டிண்டு வரும் சமத்து. காதலிக்க ஆரம்பித்த உடனேயே காஸ் புக் பண்ணிவிட்டான். கல்யாணம் நிச்சயம் ஆன உடன் வீடு பார்த்து அட்வான்ஸும் கொடுத்து விட்டான்.
என் ஸொசே (மாட்டுப் பெண்)  மிக மிக நல்ல மாதிரி. நாங்கள் பெங்களூர் போகும் போதெல்லாம் புதிய புதிய ஐட்டங்கள் சாப்பிடப் பண்ணித் தருவாள். மிகவும் ருசியாகப் பண்ணுவாள். நானும் அவளிடமிருந்து சக்லி, கோடுபளே, பிஸிபேளே பாத் எல்லாம் செய்யக் கற்றுக் கொண்டேன்.
முதலில் கொஞ்ச நாள் இருவரும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டோம். பிறகு கொஞ்சம் தமிழ், கொஞ்சம் கன்னடம், மீதி ஆங்கிலம் என்று கலந்து கட்டி பேச ஆரம்பித்தோம். என் கணவர் பாடு தேவலை. அவளுக்கு புரிகிறதா இல்லையா என்று கவலையே பட மாட்டார். தமிழிலேயே பிளந்து கட்டிவிட்டு கடைசியில் “கொத்தாயித்தா?” என்பார். அவளும் சிரித்துக் கொண்டே “ஆயித்து மாவா” என்பாள்.
பழைய நினைவுகளை அசை போட்டபடியே கண்ணயர்ந்து விட்டேன்.
“அத்தை, மாவா, மதிய சாப்பாடு தயார். உண்ண வாருங்கள்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.
“அட, என்னம்மா ஷீதல்! தமிழ் கற்றுக் கொண்டு விட்டாயா? பேஷ் பேஷ்!” என்ற என் கணவரின் குரலைக் கேட்டவுடன் தான் தமிழில் பேசியது ஷீதல் என்று புரிந்தது. ஒன்றும் புரியாமல் நான் என் மகனைப் பார்த்தேன். அவனோ முகமெல்லாம் பல்லாக “பாத்தியாம்மா! ஷீதல் ‘முப்பது நாட்களில் தமிழ்’ கற்று வருகிறாள். என்னமா பேசறா பார்! கார்த்தாலயே தமிழில் பேசுகிறேன் என்றாள். நான்தான் அம்மாவுக்கு ஹார்ட் வீக். காலங்கார்த்தல பயமுறுத்தாதே என்றேன்” என்றான்.
“நல்லதா போச்சு! நீயே எனக்கு கன்னடம் கற்றுக் கொடுத்து விடு” என்று அவளிடம் சொல்லிவிட்டு, அவளுக்கு நடைமுறை பேச்சுத் தமிழை விளக்கினேன்.
டைனிங் டேபிளில் எல்லோரும் உட்கார்ந்தோம். இந்த முறை புதிதாக என்ன செய்திருக்கிறாளோ என்று ஒருவித ஆவலுடன் உட்கார்ந்திருந்தேன். மகன் கையை அலம்பிக் கொண்டு வருகிறேன் என்று போனான்.
“இன்னிக்கு மத்தியான சாப்பாட்டிற்கு ராகி முத்தே பண்ணியிருக்கேன். தொட்டுக் கொள்ள பாகற்காய் கொஜ்ஜூ” என்ற சொல்லியபடியே வந்தவள் எங்கள் தட்டுகளில் பெரிய பிரவுன் கலர் உருண்டையை வைத்து விட்டு சுடச்சுட கொஜ்ஜையும் ஊற்றி விட்டு உள்ளே போனாள்.
மெதுவாக அந்த உருண்டையைத் தொட்டேன். ஒரு விரலால் மெள்ள அழுத்தினேன். அய்யயோ! விரல் உள்ளே போய்விட்டது. கையை ஆட்டி ஆட்டி விரலை எடுக்க நான் செய்த முயற்சியில் கை முழுவதும் ராகி ஒட்டிக்கொண்டு விட்டது. இது என்னடா கஷ்டகாலம் என்று நொந்த படியே என் கணவரைப் பார்த்தேன். அவர் நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்தது. வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கையை உதறியபடியே எழுந்து அவரருகில் வந்து, “என்னாச்சு, என்னாச்சு?” என்றேன்.
“ழ…ழ…ழ….” என்றார்.
“ழ..ழா ழி, ழீ சொல்ல இதுவா நேரம்? வாயில் என்ன கொழுக்கட்டையா?” என்றேன் கோபமாக.
“இழ்ழை, இழ்ழை, ழாழி முழ்ழை…” என்றார்.
அந்தச் சமயம் கையை அலம்பிக் கொண்டு வந்த என் பிள்ளை எங்களைப் பார்த்து ஒரு வினாடி திகைத்துப் போனவன், அடுத்த நொடி வயிற்றைப் படித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான். எனக்கோ பயங்கர டென்ஷன்.
“என்னடாது? எங்க அவஸ்தை உனக்கு சிரிப்பா இருக்கா?” என்றேன் எரிச்சலுடன்.
கண்களில் நீர் வரச் சிரித்தவன், “ஸாரிமா, ஸாரிபா!” என்று சொல்லிவிட்டு “ஷீது! ராகி முத்தையை எப்படி சாப்பிடறதுன்னு நீ சொல்லிக் குடுக்கலையா?” என்றான். நானும், என் கணவரும் பரிதாபமாக அவனைப் பார்த்தோம்.
அவன் நிதானமாக எங்களிடம் “அம்மா, இந்த ராகி முத்தையா சாப்பிடுவது ஒரு கலை. இப்போ பார், நான் சாப்பிட்டுக் காண்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “இந்த உருண்டையை கொஞ்சமாகக் கிள்ளி கொஜ்ஜில் இப்படிப் புரட்டிவிட்டு வாயில் போட்டுக் கொண்டு முழுங்கி விட வேண்டும்” என்று செய்முறை விளக்கமும் காட்டி விட்டு ஒரே நிமிடத்தில் தட்டைக் காலி செய்தான். “இதை சாதம் மாதிரி பிசையவோ, கடிக்கவோ கூடாது” என்றான்.
ஒரு வழியாக நானும் என் கணவரும் ராகி முத்தியை சாப்பிட்டு முடித்தோம்.
ஊருக்குத் திரும்பியதும், “பெங்களூர் எப்படி?” என்று கேட்டவர்களிடம் ராகி முத்தையை சாப்பிடக் கற்றுக் கொண்ட விதத்தைச் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.
“நல்ல கூத்து, சாப்பிடக் கற்றுக் கொண்டாளாம்” என்று முகவாய் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு போனார்கள்.
அவர்களுக்கு என்ன! எங்களுக்கல்லவா தெரியும் ராகி முத்தை சாப்பிடும் வித்தை!

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

கம்பளின்னு ஒண்ணு இருக்கா?


ஒவ்வொரு முறை சென்னை போய் விட்டு திரும்பியதும்  உடல் நலம் சரியில்லாமல் போய் விடுகிறது.

நிஜக் காரணம் அலைச்சல் தான். முதல் நாள் போய் விட்டு அடுத்த நாளே திரும்புதல்; அதற்குள் எத்தனை பேரை பார்க்க முடியுமோ பார்த்து விடுதல் என்று ஓய்வு இல்லாமல் போய்விடுகிறது.

சென்னை எல்லா பக்கங்களிலும் வளர்ந்து கொண்டே வருகிறது. நம் உறவினர்களும் அங்கங்கே பரந்து விரிந்து இருக்கிறார்கள். அக்கா சோளிங்க நல்லூர்; அண்ணா மேடவாக்கம். துணைவரின் ஒரு தம்பி வளசரவாக்கம்; இன்னொருவர் மடிப்பாக்கம் – எங்கு போவது? யாரைப் பார்ப்பது? யாரை விடுவது?

‘எப்போதோ வருகிறாய், காபியாவது குடி என்ற அன்புத் தொல்லைகளும் இன்னொரு காரணம்! வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு...! படைத்தவனுக்கே வெளிச்சம்!

சென்னை வெய்யிலில், வேளை இல்லா வேளையில் சுடசுட காப்பி! போதுமடா சாமி சென்னை விஜயம் என்று நொந்து போய் திரும்பி வருவோம். அடுத்தநாளே வேறு ஒரு விசேஷம் என்று சென்னையிலிருந்து அழைப்பு வரும்!

எங்கள் பெங்களூரு நண்பர்கள் சொல்லுவார்கள்: ‘நீங்கள் சென்னையில் இருந்து கொண்டு அவ்வப்போது பெங்களூரு வந்து போகலாமே! என்று.

இத்தனை சொன்னாலும் சென்னை என்றால் மனம் பரபரப்பது நிஜமோ நிஜம். நமக்கும் சென்னைக்கும் இருக்கும் பந்தம் அந்த மாதிரி! IPL–இல் பிடித்த டீம் சென்னை சூப்பர் கிங் தான்!

சென்ற ஞாயிறு சென்னை போய்விட்டு திங்கட்கிழமை இரவே திரும்பி ஆயிற்று. அடுத்தநாள் எழுந்திருக்கும்போதே உடம்பு கூடவே வந்தது. தலை நான் இருக்கிறேன் என்றது. பச்சை மிளகாய் இல்லாமலேயே கண்கள் எரிந்தன. பால் – இல்லையில்லை - காப்பி கசந்தது; படுக்கை நொந்த உடலுக்கு இதமாக இருந்தது.

நேற்று ஷதாப்தியில் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் – இல்லையில்லை ஐஸ்கட்டி தொண்டை கட்டிய வில்லன் போல தொண்டைக்குள் ‘கீச் கீச் என்றது.  மூக்கிலிருந்து, தமிழ் நாட்டுக்குக் கொடுக்க மறுத்த காவேரி – சொட்டுச் சொட்டாக இல்லை குடம் குடமாக கொட்டியது. இருமல், தும்மல் என்று விடாமல் எதோ சத்தம் போட்டுக் கொண்டே இருந்தேன். பேச வாயைத் திறந்தால் குரல் உடைந்த சிறுவன் போல என்னுடன் கூடவே யார் யாரோ பேசினார்கள்.

அவசரமாக வெந்நீர் வைத்து, அதில் மிளகு போட்டு குடிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் 100 கிராம் மிளகு தான் தீர்ந்தது.

‘டாக்டர் மதுகர் ஷெட்டிக்கு  நீ கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருக்கிறது. இரண்டு பேருமாகப் போய் கொடுத்து விட்டு வரலாம் வா என்றார் என்னில் பாதியான என் பர்த்தா.

‘காந்தி பஜார் போய் ஷால் வாங்கி வர வேண்டும் சொன்ன என்னை அதிசயமாகப் பார்த்தார்.

‘என்ன இப்படி ஒரு ஊதக் காற்று. ச்சே! என்ன ஊர் இது? கொஞ்சம் வெய்யிலில் நிற்கலாமா?

மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் கணவர் சொன்னார் மகனிடம்: ‘இன்னிக்கு அம்மா என்னவோ புதுசு புதுசா பேசறா. 27 வருடங்களா ஷால், ஸ்வெட்டர் இல்லாமல் பெங்களூரு குளிரை சமாளிச்சவளாக்கும் அப்படின்னு பெருமை பேசுவாளே, இன்னிக்கு சொல்றா, ஷால் வேணுமாம்; ஊதக் காற்றாம்; வெயில்ல நிக்கலாமான்னு வேற கேக்கறா! அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு...!

பழிக்குப் பழி வாங்கறார் என்று தெரிந்தும் ஒண்ணும் சொல்லாமல் ‘கொஞ்சம் வெந்நீர் குடுக்கறேளா, மருந்து சாப்பிடணும் என்று ஈன ஸ்வரத்தில் கேட்டு விட்டு கம்பளியை (அப்படின்னு ஒண்ணு இருக்கா?) இழுத்து மூடிக் கொண்டு படுத்துக் கொண்டேன்!



வெள்ளி, 30 நவம்பர், 2012

நலம் நலம் தானே நீயிருந்தால்



சென்ற வாரம் வாழ்க்கை துணைவருக்கு உடல் நலம் சரியில்லை. தலை சுற்றல்.
மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு, ‘அடுத்த வாரம் வாருங்கள், தேவைப் பட்டால் ப்ரைன் ஸ்கேன் செய்யலாம்,’ என்றார்.
‘ஏதாவது நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் சொல்லுங்கள். மறதி அதிகம் இருக்கிறதா?’
எப்போதுமே யாருடைய பெயரும் நினைவிருக்காது துணைவருக்கு. ஒரு முறை வழக்கமான தொலைக்காட்சி தொடரை ஒரு நாள் பார்க்க முடியாமல் போயிற்று. துணைவரிடம் ‘என்ன ஆச்சு?’ என்றேன்.
‘ஒண்ணும் ஆகலை. அவ இருக்கால்ல… இவளோட வீட்டுக்கு அவ வரா. இவளோட அம்மா அவளைப் பத்தி எதோ சொல்ல…இவளுக்கு கோவம் வந்து…இவளோட ஆம்படையான் அவளை திட்ட….’
அடுத்த வாரம் நானே பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி விட்டேன்!
மருத்துவரும் எங்களுடன் கூட சிரித்து விட்டு ‘உட்கார்ந்த இடத்திலேயே தூங்குகிறாரா?’ என்று அடுத்த கேள்வி கேட்டார்.
‘பின்ன? உட்கார்ந்த இடத்தில் தான் தூங்குவார்.  தொலைக்காட்சி சத்தம் தான் தாலாட்டு. தொலைக்காட்சியை நிறுத்தினால் அடுத்த நொடி எழுந்து விடுவார். அத்தனை மின் விளக்குகளும் எரிய…தூங்கினால் தான் உண்டு. படுத்தால் தூக்கம் போய் விடுமே…!’
மருத்துவர் வாய் விட்டு சிரித்தார். ‘நீங்கள் இப்படி பேசினால்…..’
‘உங்களுக்கு நோயாளிகள் குறைந்து விடுவார்கள்….’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.
அடுத்த வாரம். மருத்துவ மனை செல்ல லிப்ட் அருகே போனோம். வா.து. மூக்கை இழுத்து இழுத்துப் பார்த்து விட்டு, ‘ஏதோ பர்னிங் ஸ்மெல்….!’ என்றார்.
‘ப்ரைன் ஸ்கேன் தேவை இல்லை….யு ஆர் பர்பெக்ட்லி ஆல்ரைட்’ என்றேன் நான்.
மருத்துவர் நான் சொன்னதை ரசித்துவிட்டு ‘எதற்கும் ஈ.என்.டி – யை பாருங்கள்’ என்றார்.
ஈ.என்.டி நிபுணர் பல்வேறு நிலைகளில் துணைவரை படுக்க வைத்து, எழ வைத்து…..  ‘ஒன்றுமில்லை…. காதுக்குள் இருக்கும் திரவத்தில் ஏதேனும் குறை இருக்கலாம். காதுக்குள் சிறிது மெழுகு சேர்ந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு இந்த மருந்தைப் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் காதுகளை சுத்தம் செய்யலாம்’ என்று கூறி அனுப்பினார்.
வீட்டிற்கு வந்தோம். வா.து. சொன்னார்.
‘கண்ணிற்கு மருந்து காலை 8 மணிக்கு. கொஞ்ச நேரம் கழித்து காதிற்கு மருந்து போடு’ என்றார்.
நான் சிரித்தேன். ‘பழைய வண்டிகளுக்கு எண்ணெய் போட்டு ஓவர்ஹால் செய்வது போல  ஒரொரு உறுப்புக்கும் மருந்து போட்டு சரி செய்து கொள்ள வேண்டும் – வயதானால்….’ என்றேன்.
வாழ்க்கை துணைவரும் கூடவே சிரித்தார்
வயதுடன் கூட நகைச்சுவையும் கூடினால் நல்லதுதானே?
நலம் (நான்), நலம்(ஆகத்) தானே நீயிருந்தால்!

செவ்வாய், 27 நவம்பர், 2012

என்னுடைய இன்னமுதே....!


 இதுவும் திருக்கண்ணபுரம் பற்றிய பதிவு தான்.
‘நாங்கள் போனதில்லை’ என்று பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. அதனால் இந்த இரண்டாவது பாகம்.
மாயவரம் என்னும் மயிலாடுதுறைக்குப் போய் அங்கிருந்து நாகபட்டினம் போகும் பேருந்தில் போகலாம்.
இன்னொரு வழி. திருவாரூரிலிருந்தும் வரலாம். உங்கள் பக்கம் அதிருஷ்டம் இருந்தால் திருக்கண்ணபுரம் உள்ளேயே வரும் பேருந்தும் கிடைக்கலாம் திருவாரூரிலிருந்து!
திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இடது பக்கம் போனால் திருப்புகலூர். வலது பக்கம் திருக்கண்ணபுரம்.
எழுதிய அளவு அத்தனை சுலபமல்ல திருக்கண்ணபுரம் சென்று அடைவது.
பேருந்து செல்லும் முக்கிய பாதையிலிருந்து 3 அல்லது 4 கிலோமீட்டர் உள்ளே நடக்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உங்களை வரவேற்பது காவிரி ஆறு. நீரில்லாத ஆறு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் நிறைய நீர் ஓடியிருக்க வேண்டும். ஆற்றின் மேல் இருக்கும் பாலம் இதற்கு அத்தாட்சி!
‘எனக்கு கல்யாணம் ஆகி – அம்பது வருடம் முன்னால – திருக்கண்ணபுரம் வந்தேன். அப்போ ஆத்துல நிறைய தண்ணி. அப்போ பாலம் இருக்கல. மாட்டு வண்டில வந்து அந்தப் பக்கக் கரைல இறங்கினோம். மாடுங்க தண்ணிய பார்த்து மிரண்டுதுங்க. அப்பறம் எல்லோரும் இறங்கி சாமான் செட்டல்லாம் எடுத்துண்டு ஆத்த கடந்து வந்தோம்.’ என்று ஊருக்குள் நான் பார்த்த ஒரு பெண்மணி கூறினார்.
அவர் அப்போது பார்த்த திருக்கண்ணபுரம் ரொம்பவும் மாறவே இல்லை என்றே கூறலாம். பலர் ஊரை கிட்டத்தட்ட காலி பண்ணிக் கொண்டு பட்டணம் பார்க்கப் போய் விட்டார்கள். பல வீடுகள் விற்பனைக்குத் தயார்.
‘டீவி (கேபிள் தொடர்புடன்), ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, கெய்சர் எல்லாம் இருக்கு. கரண்ட்டு தான் இல்லை….’ சிரித்துக் கொண்டே நாங்கள் எப்போதும் தங்கும் வீட்டின் சொந்தக்காரர் திரு ரவியின் மனைவி திருமதி கீதா கூறினார்.
எப்படி இங்கு இருக்கிறார்கள் என்று தோன்றும்.
‘பெருமாள் இருக்கும்போது வேறென்ன வேண்டும்?’
யோசிக்க யோசிக்க இன்னும் நிறைய எழுத வேண்டும் போல இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்… கணபுரத்தென் கருமணியை…..

நானும் என் மொழிப் புலமையும்


தலைப்பை படித்தவுடன் நானும் நமது முன்னாள் பிரதமர் (17  மொழிகளில் மௌனம் சாதிப்பவர் என்று திரு மதன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்!) திரு நரசிம்மராவ் மாதிரி பன்மொழி புலமை உடையவள் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பாளி அல்ல!
திரு அப்பாதுரை சொன்னது போல ஆங்கிலத்தையும் தமிழில் கற்றவள் நான். அந்த காலத்து வழக்கப்படி என் அக்காவின் வழியில் SSLC முடித்தவுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
ஒரு அலுவலகத்தில் வேலையும் கிடைத்து, 1971 ஜூன் 2 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன். நேர்முக தேர்வில் எனது ஆங்கில அறிவு தடையாக இல்லை. ஆனால் போகப் போக,  வெறும் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் மட்டுமில்லாமல் தொலைபேசிக்கும் பதில் சொல்லவேண்டும் என்று வந்தபோது ரொம்பவும் தவித்தேன். ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது.
என் அப்போதைய பாஸ் கொஞ்சம் முரடன். அவனைப் பார்த்தாலே பயமாக இருக்கும். ‘sslc – வரைக்கும் ஆங்கிலம் படித்திருக்கிறாய் இல்லையா? பேசு!’ என்பான். கடிதங்கள் எழுதுவதிலேயோ, வரும் கடிதங்களுக்கு பதில் எழுதுவதிலேயோ எனக்கு எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை. பேசுவதற்குத் தயங்கினேன்.
இன்னொரு பிரச்சினை என் பாஸ்- களின் பெயர்கள்! நான் பொதுமேலாளருக்கு உதவியாளியாக இருந்துபோதும் சேர்மன், மானேஜிங் டைரக்டர் என்று எல்லோருக்கும் வரும் தொலைபேசி அழைப்புகளை பெற்று அவர்களுக்கு தொடர்பு கொடுக்கும் வேலையையும் செய்ய வேண்டி வந்தது.
எனது நேர் பாஸ் பெயர் நடராஜ். சேர்மன் எதிராஜ். மானேஜிங் டைரக்டர் (சேர்மனின் தம்பி) நாகராஜ். சேர்மனின் பிள்ளை ஹரிராஜ்!
முதலே ஆங்கிலம் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஒரேமாதிரியான பெயர்களும் சேர்ந்து என்னைபோட்டுக் குழப்பியதில் (நான் என் ஆங்கிலத்தில் கவனம் செலுத்துவேனா, பெயர்களை கவனிப்பேனா?) இந்த ராஜ்-க்கு வரும் அழைப்பை அந்த ராஜ்-க்கும், இளைய  ராஜ்-ஜின் பெண் தோழியின் அழைப்பை அவனது அப்பாவிற்கும் மாற்றி மாற்றிக் கொடுத்து……
இதெல்லாம் நடந்து சிறிது காலம் ஆயிற்று. ஒரு நாள் காலை எனது நேர் பாஸ் அலுவலகத்திற்கு வந்தவன் ஏதோ அவசர அழைப்பு வர தலைமை அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டான். தலைமை அலுவலகம் பாரி முனையில். நான் வேலை பார்த்தது தொழிற்சாலை – திருவேற்காடு பக்கத்தில். இனி இவன் எங்கே திரும்பி வரப் போகிறான் என்ற தைரியத்தில் தட்டச்சு இயந்திரத்திற்கு உறையைப் போட்டு மூடி, ஆனந்தமாக கையோடு எடுத்துப் போன ஆனந்த விகடனில் மூழ்கினேன்.
நிஜமாகவே மூழ்கிப் போனவள் பாஸ் வந்ததையே பார்க்கவில்லை. ஏதோ ஃபைலை எடுத்துப் போக திரும்பி வந்திருக்கிறான். எனது அறையில் தான் ஃபைல் ராக் இருக்கிறது.
‘ரஞ்ஜனி…!’ அவனது இடி முழக்கம் கேட்டு ஆ. வி. யில் மூழ்கி போனவள் திடுக்கிட்டு எழுந்தேன்.
கையில் ஆ.வி!
என் கையிலிருந்த ஆ.வி.யை ஒரே பிடுங்காகக் பிடுங்கி இரண்டாகக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டான்!
(அப்போதெல்லாம் ஆ.வி. குண்டு புத்தகமாகவே வரும். இவன் எப்படி ஒரே தடவையில் இரண்டாகக் கிழித்தான் என்று எனக்கு இன்னும் ஆச்சரியம் தான்!)
‘காச் மூச் என்று கத்த ஆரம்பித்தான். சாரம் இதுதான்: உன்னை ஆங்கிலம் கற்க சொன்னால் தமிழ் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்….. இன்னொரு தடவை நீ தமிழ் புத்தகம் படிப்பதைப் பார்த்தால்….என்ன நடக்கும் தெரியுமா?’
(என்ன நடக்கும் இதேபோல கிழித்துப் போடுவாய்!)
பதிலே பேசவில்லை நான்.
‘உனக்கு வேலையில்லை, ‘போர்’ அடிகிறது என்றால்…..’ என்று சொல்லியபடியே அவனது அறைக்குள் போய் அவனது மேஜை டிராயரில் இருந்து கேம்ப்ரிட்ஜ் அட்வான்ஸ்ட் டிக்ஷனரியை கொண்டு வந்து என் மேஜை மேல் போட்டான்.
‘இதைப் படி…வாழ்வில் உருப்படுவாய்….என்று சொல்லியபடியே திரும்ப காரில் ஏறிக் கொண்டு போய்விட்டான்.
வீட்டிற்குப் போய் என் அப்பாவிடம் இனி ஆபீசுக்குப் போகவே மாட்டேன் என்று நடந்ததை சொல்லி என் பாஸ்-ஐ கன்னாபின்னாவென்று (இடியட், ஸ்டுபிட்….என்று எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்!) திட்டித் தீர்த்தேன்.
‘சரி தூங்கு, காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்றார் அப்பா.
அடுத்த நாள் கலையில் வழக்கம்போல அப்பா என்ன சீக்கிரமே எழுப்பினார். எங்கள் வீட்டிலிருந்து பூந்தமல்லி ஹை ரோட் வரை நடராஜ சர்வீஸ். அங்கிருந்து அலுவலகத்திற்கு பேருந்து. அதனால் 8.30 மணி ஆபிசுக்கு சீக்கிரமே எழுந்து 7 மணிக்கு கிளம்ப வேண்டும்.
‘நான்தான் போகப் போவதில்லையே!’ என்றேன்.
‘யார் மேல தப்பு? நிதானமா யோசி. உன் மேல தப்பு என்றால் உடனே கிளம்பு. பாஸ் மேலே என்றால் போக வேண்டாம்’ என்றார் அப்பா.
அடுத்த அரை மணியில் கிளம்பி அலுவலகம் போய் சேர்ந்தேன். என் பாஸ்-க்கும் என்னைத் திட்டியது ஒரு மாதிரி இருந்திருக்க வேண்டும். மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை. என்னைக் கொஞ்சம் கருணையுடன் நடத்தத் தொடங்கினான்.
நானும் அன்றிலிருந்து அவன் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு டிக்ஷனரி படிக்க ஆரம்பித்தேன். பெரிய ஆங்கில அகராதியில் ஒரு வார்த்தைக்கு வெறும் அர்த்தம் மட்டும் கொடுத்திருக்க மாட்டார்கள். அதை வைத்து எப்படி வாக்கியம் பண்ணுவது என்றும் உதாரணங்கள் கொடுத்திருப்பார்கள். அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
இன்றும் எனக்கு டிக்ஷனரி படிப்பது மிகவும் விருப்பமான பொழுது போக்கு.
இன்றைக்கு என் மாணவர்கள் என் ஆங்கிலத்தை மதிக்கிறார்கள் என்றால் எனக்குப் பிடிக்காத அந்த பாஸ் தான் காரணம்.
நாளை நானும் கன்னடமும்……!