செவ்வாய், 22 டிசம்பர், 2015

ஓங்கி உலகளந்த உத்தமன்


திருப்பாவையின் மூன்றாவது பாசுரம் வல்லபதேவனின் நினைவில் வந்து போனது. தானே அதை சேவிக்கலாமா என்று நினைத்தவன், பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையின் பாடல் அவர் திருவாயிலிருந்தே வரட்டும் என்று காத்திருந்தான். அவரோ கோதையின் குணானுபவங்களில் ஈடுபட்டு அதிலிருந்து வெளி வர முடியாமல் கண்களில் நீர் மல்க உட்கார்ந்திருந்தார்.
இவரை இந்த உலகிற்கு மறுபடியும் அழைத்து வர வேண்டுமெனில் தான் செய்யவேண்டியது என்ன என்று உணர்ந்த வல்லபதேவன் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்:

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயல் உகளப
பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம் பாவாய்!

‘மிகச் சிறப்பாகப் பாடுகிறாய், வல்லபா...!’ என்று அவன் பாடியவிதத்தை சிலாகித்த பெரியாழ்வார் தொடர்ந்தார்:
‘கண்ணன் எம்பெருமானின் அவதாரங்களில் கோதைக்கு மிகவும் பிடித்த அவதாரம் இந்த ஓங்கி உலகளந்த அவதாரம். தனது நாச்சியார் திருமொழியில் காமதேவனிடம் ‘தேசமுன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்’ செய்’ என்கிறாள்.

நான் அவளிடம் ‘அப்படி என்ன ஒரு ஈர்ப்பு உனக்கு இந்தத் திரிவிக்கிரமன் மேல்’ என்று கேட்டதற்கு அவள் கூறிய பதில் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது!’
‘என் தலைமேல் உனது திருவடியை வைக்க வேணும் என்று யாரும் கேட்காமலேயே அனைவர் தலையிலும் தன் திருவடியை வைத்தான் இவன். இவன் அப்படி உலகத்தை அளந்த அன்று சிலர் நாம் இழந்த மண் நமக்குக் கிடைத்தது என்று மகிழ்ந்தனர்; சிலரோ நமக்குச் சொந்தமான மண் நம் கைவிட்டுப் போனதே என்று வருந்தினர். ஆனால் யாருமே அந்தத் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடவில்லை, அப்பா! அந்தக் குறை தீர நாங்கள் அந்த உத்தமனின் பேர் பாடுகிறோம்’ என்றாள்.

ஓங்கி: இந்த பதத்தாலே அவன் வாமனனாயிருந்து சட்டென்று வளர்ந்த விதம் சொல்லப்படுகிறது. எப்படி என்றால் சத்யலோகம் வரை சென்ற திருவடியை விளக்க நான்முகன் வார்த்த கமண்டல நீரும், மகாபலி வார்த்த தான நீரும் ஒன்றாகச் சேர்ந்து விழுந்தனவாம்!

உலகளந்த: ஜீவாத்மாக்களுக்கும், பரமாத்மாவான தனக்கும் உள்ள சம்மந்தம் ஒன்று மட்டுமே காரணமாக இந்தப் பூவுலகில் உள்ள அனைவரின் தலை மேலும் தனது திருவடி படும்படியாக அளந்தான். அழகிலும், அற்புதமான செய்கைகளிலும் வாமனனுக்கும், கண்ணனுக்கும் ஒற்றுமை இருப்பதால் இங்கு வாமனாவதாரத்தைப் பாடுகிறார்கள்.

உத்தமன்: மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பரமன் இந்திரன் முதலான தேவர்களுக்காக தன்னைக் குறுக்கிக் கொண்டு வாமனன் ஆனான். அவர்களுக்காக யாசித்தான். இவனல்லவோ உத்தமன்!

பேர்பாடி: முதல் பாட்டில் நாராயணன் என்று சொல்லி, இரண்டாம் பாட்டில் அவனது குணபூர்த்தியை சொல்லும் பரமன் என்ற பெயரைச் சொல்லிப் பாடியவர்கள் அந்த நாராயணனே இன்று திரிவிக்கிரமன் ஆகி உலகளந்தான் என்று பாடுகிறார்கள். உலகமெல்லாம் அளந்ததினால் அந்த நாராயணனின் எங்கும் நிறைந்த தன்மை பேசப்படுகிறது. திருமந்திரத்தின் பெருமை இங்கு பேசப்படுகிறது.
நாங்கள்: அவனுடைய திருநாமங்களைச் சொல்லிப் பாடும் நாங்கள். திருநாமங்களைச் சொல்லாவிட்டால் வாழாத நாங்கள்.
நம் பாவைக்கு: இப்படிப்பட்ட நாங்கள் செய்யும் இந்த நோன்பிற்கு. இது உபாயரூபம் அல்லாமல், பயனாக இருக்கும்.
பாவைக்குச் சாற்றி நீராடினால்: நோன்பு என்று ஓர் பெயரை வைத்துக் கொண்டு கண்ணனுடன் கூடுவது. தமிழ் அகத்துறையில் கலவியை நீராடலாகக் கூறுவார்கள்.
தீங்கின்றி: வியாதி, பஞ்சம், திருட்டு போன்ற கேடுகள் இல்லாமல்
நாடெல்லாம்: இந்த ஊரில் மட்டுமல்லாமல் இந்த நாடெல்லாம்
திங்கள் மும்மாரி பெய்து: ஒரு நாள் மழை, ஒன்பது நாள் வெயில் என்பது போல. மழையே இல்லாமலும் இருக்கக்கூடாது. அதிக மழையும் கூடாது. அளவாக மாதம் மூன்று முறை மழை.
ஒங்குபெரும் செந்நெல் ஊடு கயலுகள: ஓங்கி உலகளந்தவனைப் போலவே இங்கு செந்நெல் பயிரும் ஓங்கி வளர்ந்திருக்கிறது. உயர்ந்து பெருத்து வளர்ந்திருக்கும் செந்நெல் பயிர்களினூடே போக முடியாமல் கயல் மீன்கள் துள்ளுகின்றன. மாரீசன் மரங்கள்தோறும் ராமனைக் கண்டது போல இவர்கள் நெற்பயிரிலும் திரிவிக்கிரமனை காண்கிறார்கள்.
பூங்குவளைப்போதில்: பூத்திருக்கும் குவளை மலர்களில்
பொறிவண்டு கண்படுப்ப: அழகான வண்டுகள் படுத்துறங்க
இதுவரை வயல்வளம் சொல்லப்பட்டது. இனி, ஊர் வளம் சொல்லுகிறாள்.
தேங்காதே புக்கிருந்து:  பால் நிற்காது சுரந்துகொண்டே இருக்கும் ஆதலால், அசையாத பொருட்களைப் போல இருந்து பால் கறக்க வேண்டும்.
சீர்த்தமுலை: இரண்டு கைகளாலும் அணைத்துக் கறக்க வேண்டிய பருத்த முலைகள்.
பற்றி வாங்க குடம் நிறைக்கும்: அப்படி கறக்கக் கறக்க குடங்கள் நிறையும் படி.
வள்ளல்: குடம் குடமாகப் பாலைக் கொடுக்கும் வள்ளல்கள் இந்தப் பசுக்கள். தன்னை நம்பியவர்களுக்கு பூரணமாக கொடுக்கும் பகவான் போல இந்தப் பசுக்கள்.
பெரும் பசுக்கள்: கண்ணனுடைய திருக்கைகள் பட்டதாலேயே பெருத்திருக்கும் பசுக்கள்.
நீங்காத செல்வம் நிறைந்து: செல்வம் என்பது நீங்காமல் இருக்குமோ எனில், நமது பாவ புண்ணியமடியாக வந்த செல்வம் நீங்கும். ‘பாவம் செய்தவர்கள், புண்ணியம் செய்தவர்கள் யாரானாலும் அருள வேண்டும்’ என்னும் பிராட்டி அருளால் வந்த செல்வம் நீங்காது என்கை.
இப்பாட்டால் விபவ வைபவத்தைப் பாடினார்கள். தங்களுக்கு நோன்பு செய்ய அனுமதி அளித்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய பலத்தைச் சொல்லுகிறார்கள்.  முதல் பாட்டிலிருந்தே தாயாருடன் கூடிய எம்பெருமானை சொல்லுகிறார்கள். பிராட்டியின் அருள் பெற்ற பரிசனங்கள் இவர்கள். பிராட்டியின் அருள் பெற்றவர்களால் நாம் பெறும் செல்வம் நீங்காத செல்வமாகும், இல்லையோ? இப்படிப்பட்டவர்கள் வாழும் நாடு வியாதி,பஞ்சம், திருட்டு முதலிய தீங்குகள் இன்றி வளம் கொழிக்கும்.






வெள்ளி, 18 டிசம்பர், 2015

வையத்து வாழ்வீர்காள்!


‘என்ன ஒரு தீர்க்கமான எண்ணங்கள் இந்தக் கோதைக்கு.....!’

‘தங்களின் திருக்குமாரத்தி இல்லையா அவள்? அன்று நீங்கள் பரதத்துவ நிர்ணயம் செய்தபோது பார்த்தவர்கள், கேட்டவர்கள் எல்லோரும் மெய்மறந்து போனார்களே! பொற்கிழி தானாகவே தாழ்ந்ததே!’

ஒருநிமிடம் பெரியாழ்வாரின் கண்முன் அந்த நிகழ்வு வந்து போனது. குருமுகமாகத் தான் யாரிடமும் கல்வி பயிலாத போதும், எம்பெருமானின் இன்னருளால் பரத்துவ நிர்ணயம் செய்த நிகழ்வு. கூடியிருந்த எல்லோரும் இவரது வாதத்தை ஏற்றுக் கொள்ள, பொற்கிழி தானாகவே தாழ்ந்தது. விஷ்ணுசித்தரை யானையின் மேல் அமரச் செய்தான் பாண்டிய அரசன். திடீரென வானில் ஒரு மின்னல்! யானையின் மேல் அமர்ந்த நிலையில் தலையை நிமிர்த்திப் பார்த்தவருக்கு அதிர்ச்சி! நாம் காண்பது கனவா, நினைவா? நம் கண் முன் கருடாரூடனாக நாச்சியார் சமேதனாக நிற்பது அந்த பரமபுருஷன் இல்லையோ? இவன் எங்கு இங்கு வந்தான்? அதுவும் திருமாலுக்குரிய அடையாளங்களுடன்? ஐயோ! யாராவது பார்த்து கண்ணேறு பட்டுவிட்டால்? என்ன இப்படி ‘பப்பர’ என்று வந்திருக்கிறான்? சட்டென்று யானையின் மீதிருந்த வெள்ளி மணிகளை எடுத்தார். தாளம் தட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தார்:

‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் – மல்லாண்ட
திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருகாப்பு.....’

அவரது மனஓட்டத்தை அறிந்தவன் போல வல்லபதேவன் வாளாவிருந்தான். பெரியாழ்வாரும் அரசனின் இருப்பை அப்போதுதான் உணர்ந்தவர் போல சட்டென்று இயல்பு நிலைக்குத் திரும்பி தழுதழுத்த குரலில் கூறினார்:
‘உன்னைப் போல ஒரு அரசன் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த மிகப்பெரிய பேறு, வல்லபா! குடிமக்களின் நலம் பேணுவதை உன் வாழ்நாளின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறாய். இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல் மேலுலகத்திலும் அவர்கள் நல்லகதியை அடைய வேண்டும் என்றல்லாவா நீ பண்டிதர்களை அழைத்து பரத்துவ நிர்ணயம் செய்ய சொன்னது? அதனால் தான் எனது மகள் கோதை இரண்டாவது பாசுரத்தில் வையத்து வாழ்வீர்காள்! என்று இந்த உலகில் இருக்கும் அத்துணை மனிதர்களையும் உய்யலாம் வாருங்கோள் என்று கூப்பிடுகிறாள், போலிருக்கிறது’ என்றவாறே இரண்டாவது பாசுரத்தைப் பாட ஆரம்பித்தார்:

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!


முதல் பாசுரத்தில் நோன்பைப் பற்றிச் சொல்லியவள் அடுத்த பாட்டில் நோன்பு செய்யும்போது அனுசரிக்க வேண்டியவை என்ன, செய்யக் கூடாதவை என்ன என்று சொல்லுகிறாள், தோழிகள் முகாந்திரமாக வையத்தில் வாழும் நம் போன்றவர்களுக்கு.

வையத்து வாழ்வீர்காள்: இந்த மண்ணுலகில் வாழும் பாக்கியம் பெற்றவர்களே!
மண்ணுலகில் வாழ்வதில் என்ன பாக்கியம் என்றால், அந்த பரம புருஷனே பரமபத வாழ்வை வெறுத்து இங்கு வந்து பிறந்தானே!  அவன் பிறந்ததால் இந்த ஆயர்பாடி திருவாயர்பாடி என்று பெயர் பெற்றதே! அவன் இங்கு வந்து பிறக்கும் காலத்தில் அவனுடனேயே பிறந்து, வளர்ந்து பழகும் பாக்கியம் பெற்றவர்களாகிய பாக்கியசாலிகளான கோபியர்களையே ‘வையத்து வாழ்வீர்காள்!’ என்று ஆண்டாள் இங்கு அழைக்கிறாள்.
வாழ்வீர்காள்: வெறுமனே உண்டு உறங்குதல் வாழ்வாகாது. இங்கு வாழ்வு என்பது பெருவாழ்வு என்ற பொருளில் சொல்லப்படுகிறது. இறைவனுடைய கருணை, எளிமை, எல்லோருடனும் உயர்வு தாழ்வு பாராமல் கலந்து பழகுதல், குற்றங்களையும் குணமாகக் கொள்ளுதல் முதலிய நீர்மை குணங்கள் பிரகாசிப்பது இந்தப் பூவுலகில் தான். அதனாலேயே இந்த வாழ்வு பெருவாழ்வு என்று சொல்லப்படுகிறது. இறைவனின் இந்தக் குணங்களை அனுபவிக்க பரமபத வாசிகளான அனந்தன், கருடன் முதலிய அமரர்களும் இங்கு வசிக்க ஆசைப்படுகிறார்களாம்.
கோதையும் இங்கு வசிப்பவள் தானே? வாழ்வீர்காள் என்று பிறரை அழைப்பானேன் என்றால், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, கூடியிருந்து அனுபவிக்க வேண்டும். பகவதனுபவம் தனியே அனுபவிக்கலாகாது. ரசிக்கவும் செய்யாது.
நாமும்: அவனைப் பெற வேண்டும் என்று துடிப்புள்ள நாமும். அவனாலேயே அவனைப் பெற வேண்டும் என்ற துடிப்புடன் கூடிய நாமும்.
நம்பாவை: இது பிறர் செய்யும் பாவை அல்ல; நாம் கண்ணனை வேண்டி செய்யும் பாவை. அவனை அழிக்க வேண்டிச் செய்த யாகம் போன்றதல்ல இது. அவனையும், அவனடியாரையும் வாழப் பண்ணும் யாகம் அதாவது நோன்பு இது.
செய்யும் கிரிசைகள்: நோன்பு முடியும் அளவும் செய்தே தீர வேண்டிய  முழுமையாக கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள்.
கேளீரோ: வையத்து வாழ்வீர்காள் என்று அழைத்த பின் எதற்கு கேளீரோ என்று திரும்ப அவர்களின் கவனத்தை ஈர்ப்பது எனில், ஆண்டாள் கூப்பிட்டதும் வந்தவர்கள் பகவத் விஷயத்திற்கு விரோதமான இவ்வுலகிலே, கண்ணனையும் பெண்களையும் சேரவிடாத இவ்வூரிலே கிருஷ்ணானுபவத்திற்கு இத்தனை மகத்துவமா என்று வியப்புற்றுப் பேசாமல் இருந்தார்களாம். அதனால் கேளீரோ என்று மறுபடியும் அவர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுகிறாள்.
பாற்கடலுள்: பரமபதத்தினின்றும் அசுரர்களின் துன்பத்திற்கு ஆளாகும் தேவர்களைக் காக்க பாற்கடலில் வந்து படுத்துக் கிடக்கும் படி.
பையத்துயின்ற: படுத்துக் கிடக்கிறானே தவிர தூங்கவில்லை. உலகை காக்க வேண்டியவன் தூங்கலாமா? அதனால் கூப்பிட்டவரின் குரலுக்கு செவி சாய்த்துக் கொண்டு பொய்யுறக்கம் கொண்டிருக்கிறான்.
பரமன்: தனக்கு நிகராக ஒருவரும் இல்லாதவன்; தனக்கு மேலானவரும் இல்லாதவன். இப்பூவுலகைக் காக்க அறிதுயில் கொண்டிருக்கிறான் திருவனந்தாழ்வான் மேல். எப்படி என்றால் பொன்தகட்டில் அழுத்தின நீல ரத்தினம் போலே ஒளி நிறைந்து இருக்கிறான். எல்லாவகையிலும் மேலானவன் என்பதால் பரமன்.
அடிபாடி : அவன் மிகவும் மேலானவன் ஆனால் நாமோ தாழ்ந்தவர்கள் அதனாலே அவனது திருவடிகளைப் பாடுவோம். இன்னொரு காரணம் பரமன் என்று சொல்வதற்கு. இடையர்களுக்கு ஏற்கனவே ஆயர்பாடி சிறுமிகள் மீதும், கண்ணன் மீதும் சந்தேகம். கண்ணனைத்தான் பாடுகிறோம் என்று சொன்னால் என்ன ஆகுமோ என்று அச்சம். அதனால் தாங்கள் வேறு யாரோ ஒரு தெய்வத்தைப் பாடுவதாக சொல்ல விரும்பி, கிருஷ்ணாவதாரத்திற்கும் மூலமான  பாற்கடல்நாதனை பாடுகிறார்கள்.

நெய்யுண்ணோம், பாலுண்ணோம்:
இவர்களுக்கு உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே ஆதலால் வேறு போகப்பொருட்களை உண்ணமாட்டோம் என்கிறார்கள்.
பாலைக் குடிப்பார்கள் இல்லையோ, உண்ணோம் என்கிறார்களே என்றால், குடிப்பதற்கும், உண்பதற்கும் வித்தியாசம் தெரியாத இடைப் பெண்கள் இவர்கள்.
இன்னொரு சுவாரஸ்யமான விளக்கம் பாலுண்ணோம் என்பதற்கு நமது பூர்வாச்சாரியர்கள் காட்டுகிறார்கள்.
கண்ணன் பிறந்த பிறகு நெய் பால் எதையும் கண்ணன் மிச்சம் வைப்பதில்லையாம். அதனால் பால் என்பது குடிக்கப்படும் பொருள் என்பதே மறந்து விட்டதாம்! அதனால் பால் உண்ணோம் என்கிறார்களாம்!

நாட்காலே நீராடி
கண்ணன் வருவதற்கு முன் நீராடி விடவேண்டும். ஸ்ரீ பரதாழ்வான் ராமனைப் பிரிந்த தாபம் ஆறும்படி பின்னிரவிலே சென்று சரயூவில் நீராடுவாராம். அது போலே இவர்கள் நோன்பு என்று ஒரு சாக்கை வைத்துக் கொண்டு கண்ணனைப் பிரிந்த தாபம் ஆறும்படி அதிகாலையில் நீராடத் தலைப்படுகிறார்கள்.

மையிட்டு எழுதோம்:
இவர்கள் இயற்கையாகவே மைக்கண் மடந்தையர்கள். மை தீட்டிக் கொள்ளும் அவசியம் இல்லாத போதும், மங்களத்தின் பொருட்டு எழுதிக் கொள்ளும் மை கூட தீட்டிக்கொள்ள மாட்டோம்.

மலரிட்டு நாம் முடியோம்
பூச்சூடிக் கொள்வதும் அப்படியே. பூவிற்கு வாசம் கொடுப்பதற்காக பூச்சூட்டிக் கொள்வார்கள். இப்போது அதனையும் செய்யோம். அவனே பூத்தொடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால் சூட்டிக் கொள்ளுவோம். நாமாக முடியமாட்டோம்.
செய்யாதன செய்யோம்:
நமது முன்னோர்கள் அனுஷ்டிக்காத ஒன்றை அனுஷ்டிக்க மாட்டோம். கண்ணன் எம்பெருமான் எல்லோருக்கும் நன்மை செய்பவன். எல்லா உயிர்களுக்கும் பொதுவான சம்மந்தம் உடையவன். இருந்தாலும் அடியார்களை முன்னிட்டுக் கொண்டே அவனைப் பற்றுவோம்.தோழிகள் எல்லோரையும் எழுப்பிக் கொண்டு அனைவரும் கூடியே அவனை பற்றுவோம்.
தீக்குறளை சென்றோதோம்:
அசோக வனத்திலே தன்னை நலிந்து பேசிய அரக்கிகளை பிராட்டி பெருமாளிடம் காட்டிக் கொடுக்கவில்லையே. அதேபோல நாங்களும் தீமை விளைவிக்க கூடிய பொய்களைச் சொல்லமாட்டோம்.
ஐயமும் பிச்சையும்: ஐயமாவது தகுதி இருக்கும் சான்றோர்களுக்கு மிகுதியாகக் கொடுத்துக் கௌரவித்தல்; பிரம்மச்சாரிகளுக்கும், துறவிகளுக்கும் அன்னமிடுதல் பிச்சை ஆகும்.
ஐயம் என்பது பரமாத்மா விஷயமான ஞானம். பிச்சை என்பது ஜீவாத்ம ஸ்வரூப ஞானம். இரண்டையும் உபதேசிப்போம்.
ஆந்தனையும்: எத்தனை பேர்கள் வந்தாலும் அத்துணை பேர்களுக்கும், வந்திருந்தவர்கள் எவ்வளவு கேட்டாலும் அவ்வளவும், எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் கொடுப்போம். உபதேசிப்போம்.
கைகாட்டி: இத்தனை செய்தாலும், உபதேசித்தாலும், நாங்கள் என்ன செய்துவிட்டோம் என்று கை விரிக்கும்படி.
உய்யும் ஆறு எண்ணி: இப்படியெல்லாம் செய்து உயிர் வாழும் படி. என்றைக்கு இதுபோல பகவத் விஷயத்தில் உள் புகுந்தானோ அன்று  தான் இவன் உயர்ந்த வாழ்ச்சி பெற்றவனாவான். அல்லாத போது இல்லாதவனே ஆவான்.
எண்ணி உகந்து: இதுபோல பகவத் விஷயத்தை நினைப்பதே இனிமையாகும்; உகப்பாகும்.

முதற்பாட்டில் பரமபத நாதனை (பரத்வம்) பாடினார்கள். இந்த இரண்டாம் பாட்டில் பாற்கடல் (வ்யூகம்) நாதனைப் பாடுகிறார்கள்.



வியாழன், 17 டிசம்பர், 2015

மார்கழி திங்கள்

 

ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால் தான்  கொண்டுபோனான்...

நகர்வலம் வந்துகொண்டிருந்த வல்லபதேவன் ஒரு நிமிடம் இந்தப் பாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்து சிலையாக நின்றான். பொழுது புலர்ந்தும் புலராத வேளை. கண்ணைச் சுருக்கி உற்றுப் பார்த்தான். பெரியாழ்வாரின் திருமாளிகையிலிருந்துதான் அந்தப் பாடல் வந்துகொண்டிருந்தது. இதழ் கடையில் புன்னகையுடன் யோசனையும் உண்டாயிற்று. ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டு வந்ததிலிருந்தே பெரியாழ்வார் இப்படித்தான் மகள் நினைவாகவே இருக்கிறார். பெண் குழந்தையின் மீதான பாசம்! எல்லா தந்தைமார்களும் அனுபவிக்கும் பிரிவாற்றாமை தான் இவருக்கும்.
வீட்டினுள்ளே போய் அவரிடம் சற்றுநேரம் பேசிவிட்டுப் போகலாம் என்று நுழைந்தான்.
அடியேன்....!
திருத்துழாய் பறித்தபடியே மகளின் நினைவில் கண்கள் பனிக்கப் பாடிக்கொண்டிருந்த பெரியாழ்வார் திரும்பிப் பார்த்தார்.
யாரது?’
அடியேன், வல்லபதேவன்...இந்தப் பாண்டிய நாட்டு அரசன்.....
அடடா! வரவேணும், வரவேணும்.... தங்களை இந்த வேளையில் எதிர்பார்க்கவில்லை...!
தேவரீரின் பாடல் கேட்டது. கோதையைப் பிரிந்ததும், கண்ணனை மறந்து விட்டீரோ? ‘கண்ணன் கேசவன் நம்பிபிறந்தது முதல் அவனது பிள்ளை விளையாட்டுக்களை வாயாரப் பாடி அவனை நீராட்டி, அவனுக்கு பூச்சூட்டி, காப்பிட்டு, அம்மம் உண்ணக் கூப்பிட்டு இனிக்க இனிக்க பாடியவர் இன்று மகளின் பிரிவை நினைத்து ஏங்குகிறீர்களே...! அந்தத் துயரம் தணிய சற்றுப் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்....!
வறியவனுக்கு நிதி கிடைத்ததைப் போல அல்லவா. எனக்குக் கோதை கிடைத்ததும்? இப்போது நினைத்துப் பார்த்தால் கூட வியப்பாக இருக்கிறது. அவள் எனக்கு திருத்துழாய்ச் செடி அருகே கிடைத்ததும், அவளை என் குழந்தையாகவே பாவித்து வளர்த்ததும், அவள் வாரணமாயிரம்பாடி முடித்ததும் விளையாட்டாக உனக்கு யாரம்மா மணாளன்?’ என்று கேட்க, ‘‘வேங்கடவற்கு என்னை விதிஎன்று முதல் பாசுரத்திலேயே காமதேவனிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேனே, அப்பா!என்று அவள் கூறியதும்.....
கண்களை துடைத்துக் கொண்டு திருநந்தவனத்திலிருந்து வீட்டினுள்ளே வந்தார் பெரியாழ்வார்.
அடியேனும் இதை அறிவேன், ஸ்வாமின்!என்று கூறியபடியே வல்லப தேவனும் உள்ளே நுழைந்தான்.
ஆனாலும், தேவரீரின் திருவாக்கால் ஆண்டாளின் கதையைக் கேட்பது பெரிய பாக்கியம், அல்லவா?’
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் .....
பெரியாழ்வார் மகளின் நினைவில் தோய்ந்தபடியே பாட ஆரம்பித்தார். வல்லபதேவனும் அந்த பாவை பாட்டில் கரைய ஆரம்பித்தான்.
                      **************
மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்தகண்ணி யசோதையிளம்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய்.

திருப்பாவை முதற்பாட்டில், அதன் முழு தாத்பர்யத்தை கூறுகிறாள் ஆண்டாள். இந்த நோன்பைச் செய்ய யாருக்கெல்லாம் அதிகாரம் (தகுதி) இருக்கிறது, இந்த நோன்பு செய்து அதன் பலத்தை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய உபாயம் (வழி) என்ன, நோன்பின் பலன் என்ன, பலத்தை தருபவன் யார் என்பதை சுருக்கமாகக் கூறுகிறாள். கூடவே இந்நோன்பு செய்யவதற்கு வாய்த்த காலத்தையும் கொண்டாடுகிறாள்.

மார்கழித் திங்கள் மார்கழிக்கு என்ன சிறப்பு? பிரம்மமுஹூர்த்தம் என்பது நாளின் சிறப்பு போல, வருடத்திற்கு சிறப்பு மார்கழி மாதம். சாத்வீகக் குணம் தலையெடுக்கும் காலம். தேவர்களுக்கு தை தொடங்கி ஆனி முடிய பகல் காலம். அந்தப் பகலுக்கு விடியற்காலம் போன்றது மார்கழி மாதம். மாதங்களில் நான் மார்கழிஎன்கிறான் கண்ணன், கீதையில். அதனால்  வைஷ்ணவமான மாதம் இது. இடைக்கிழவர்கள் குளிருக்கு அஞ்சி வெளியே வரமாட்டார்கள், தங்கள் விருப்பப்படி கண்ணனோடு கலந்து பரிமாறலாம் என்பதால் கோபியர்களுக்கு உற்சாகமான காலம். பயிர்கள் விளைந்து பலன் கொடுக்கும் காலம். அதனாலே நம் நோன்பும் கண்ணனை பலனான அடைய உதவும் காலம்.

மதி நிறைந்த: மார்கழி மாதத்தில் இன்று நிறை பக்ஷம் தன்னடையே வாய்த்திருக்கிறது. இந்தப் பௌர்ணமி கிருஷ்ணனுடைய திருமுகம் கண்டு களிக்கும்படியான பிரகாசமான நாள் அன்றோ!
நல்நாள்
மதிநிறைந்த நாள் என்பதே நல்நாள். சேரக்கூடாது என்று பிரித்து வைத்தவர்களே சேர்த்து வைத்தபடியால் இது நல்லநாள். கிருஷ்ணனுடைய அருளுக்குப் பாத்திரமாகும் நன்னாள்; அவனைக் காணப்பெறும் நன்னாள்; ஜீவாத்மா பரமாத்மாவுடன் சம்மந்தம் கொள்ளும் நன்னாள்; மற்றைய நாள் போல அல்லாதபடி மாதம், பக்ஷம் எல்லாம் வாய்த்தது போல இரத்தினம் போல நக்ஷத்திரமும் அமைந்ததே! நன்னாளால் ஆல் என்பது வியப்பைக் காட்டும் சொல். மாதம், பக்ஷம், நாள் (நக்ஷத்திரம்) எல்லாம் இத்தனை நன்றாக அமைந்ததே எனும் வியப்பைக் காட்டும் ஆல்
நீராட
நோன்பு ஆரம்பிக்கும் முன் குளிக்க என்று மேம்போக்காக ஒரு பொருள் சொல்லப்படுகிறது. கிருஷ்ணன் என்னும் தடாகத்தில் தோய்ந்து என்று உள்ளுறைப் பொருள். கண்ணனோடு கலத்தல் விரஹதாபம் தீர என்பது உண்மைப் பொருள். ஜீவாத்மா பரமாத்மாவை அடைந்து ஒன்றாவதை நீராடஎன்கிறார்கள். கோடை உஷ்ணத்திலே அவதிப்படுபவன் தடாகத்தைக் கண்ட அளவில் அதில் அமிழ்ந்து மூழ்குவது போல நாமும் கண்ணன் என்னும் குளிர்ந்த தடாகத்தில் நீராடலாம் வாருங்கோள்!

போதுவீர் போதுமினோ:
கண்ணனாகிய தடாகத்திலே நீராடுவதற்கு வர விருப்பம் உடையவர்கள் எல்லோரும் வாருங்கோள். இதற்கு வேறு ஒரு தகுதியும் தேவையில்லை. பகவானை ஆஸ்ரியிப்பதற்கு இச்சை மாத்திரம் போதுமோ? போதும். ஏனெனில், நாம் அவனை அடைய ஆசைப்படுவதே அதற்குண்டான தகுதிதானே? அதனால் ஆசை மட்டும் போதும்.
நேரிழையீர்:
தகுதி வாய்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களே!
சீர்மல்கும் ஆய்ப்பாடி
ஆயப்பாடிக்குச் சீர்மையாவது கண்ணன் அங்கு பிறந்தமை; அவனது கல்யாண குணங்கள் என்னும் செல்வம் நிறைந்து கூடவே கறவைச் செல்வங்களும் நிறைந்திருக்கிறது. பரமபதத்தில் இருக்கும் கண்ணன் இங்கு ஆயப்பாடிக்கு வந்துவிட்டமையால் பரமபதத்தில் சீர்மை பிரகாசிக்கவில்லையாம். பரமபதத்தில் கண்ணனைவிட தாழ்ந்தவரில்லை; அதனால் அவனது நீர்மைக் குணங்கள் அங்கு பிரகாசிப்பதில்லை. அதாவது எல்லோருடனும் சமமாகக் கலத்தல், பெறுதற்கரியவன் சுலபமாக அடையக்கூடியவனாய் இருத்தல் முதலிய குணங்கள் ஆய்ப்பாடியில் பிரகாசிப்பதால் இது சீர்மல்கும் ஆய்ப்பாடி ஆயிற்று.
செல்வச் சிறுமீர்காள்
ஆய்ப்பாடிச் சிறுமியருக்கு கிடைத்த செல்வம்  கிருஷ்ண சம்மந்தம் என்னும் நிலையான செல்வம். யாரைபோலேஇலங்கை செல்வத்தை விட்டு பெருமாளை சரணடையக் கிளம்பியதால்  அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்’ (பெருமாள் என்னும் செல்வத்தை அடைய புறப்பட்டதால் ஸ்ரீமாந் ஆனவன் மேலே எழும்பினான்) என்று வால்மீகியால் கொண்டாடப்பட்ட விபீஷணனைப் போல. பெருமாள் காட்டுக்கு ஏகியபோது கூடையும் குந்தாலியுமாகப் பின்தொடர்ந்ததால் லக்ஷ்மி சம்பந்நன் என்று கொண்டாடப்படும் இலக்குவன் போல. பெருமாளுக்கென்று அன்றலர்ந்த தாமரையைக் கையில் ஏந்தியபடி முதலையின் வாயில் அகப்பட்டு துதிக்கை மூழ்கும் அளவில் ஆதிமூலமே!என்றழைத்த நாகவரச் ஸ்ரீமாந்’ (யானையரசனான ஸ்ரீமான்) கஜேந்திரன் போல இவர்களும் செல்வ நிறைந்தவர்கள்.
சிறுமிகள் என்றதால் கண்ணனை ஒத்த பருவமுடையவர்கள். அவனது கடாக்ஷத்தாலும், அவனது தொடுகையாலும் என்றென்றும் இளம் பருவத்தினராகவே இருப்பவர்கள். அவனுக்கே அற்றுத் தீர்ந்த அநந்யார்ஹர்கள் (பிறர்க்காகாமல் அவனுக்கு மட்டுமே என்று இருப்பவர்கள்) அவனுக்குப் பிரியமானவர்கள்.
கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன்:
நந்தகோபன் பரமசாது. பசும்புல்லை மிதிக்கவும் கூசுவாராம். அவர் எப்படி கொடுந்தொழிலன் ஆனார் அதுவும் கையில் எப்போதும் கூரிய வேலை வைத்துக் கொண்டு? கண்ணன் பிறந்தபின் அவனைக் கொல்ல ஏதேதோ உருவில் வந்தபடி இருக்கும் அரக்கர்களைக் கண்டபின் நந்தகோபன் எப்போதும் வேலும் கையுமாகவே நிற்கிறாராம். கண்ணனின் தொட்டிலடியில் ஒரு சிறு எறும்பு ஊர்ந்தால் கூட சிம்மத்தின் மேல் பாய்வது போலப் பாய்கிறாராம். அப்போது அவர் பாவம் செய்தவரா என்றால், தனக்கெனச் செய்தால் பாவம் வரும். ஆனால் அவர் கண்ணன் மேல் உள்ள பாசத்தால் செய்வதால் அவரைப் பாபம் தீண்டாது.

நந்தகோபன் குமரன்:
ஊரார்கள் இவன் செய்யும் தீம்புகளை வந்து சொல்லும்போது கோபம் வந்து அவன் வரட்டும், என்ன செய்கிறோம், பாருங்கள்என்று சொல்வார்களாம், நந்தகோபனும், யசோதையும். ஆனால் கண்ணன் இவர்கள் முன் வரும்போது அடக்கமான, பணிவான பிள்ளையாக வருவானாம். அவன் முகத்தைப் பார்த்தவுடன், ‘பாவிகளே! இவனைப் பற்றியா குறை சொன்னீர்கள்?’ என்று குறை சொன்னவர்களைத் திட்டி அனுப்பிவிடுவார்களாம். அத்தனை சாதுவான பிள்ளை அதனால் குமரன்ஆகிறான். நந்தகோபன் குமரன் யசோதையிடம் எப்படி இருக்கிறான்?
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை:
அழகிய கண்களையுடைய யசோதை. அவளுக்கு எங்கிருந்து இத்தனை அழகு வந்தது என்ற கேள்விக்கு பிள்ளையின் அழகை எந்நேரமும் பார்த்துக் கொண்டிருந்ததால் அவனது அழகெல்லாம் இவள் கண்களில் குடி புகுந்தனவாம்.
இளஞ்சிங்கம்:
தந்தை ஆதலால் அவனது எதிர்கால நன்மையைக் கருதி நந்தகோபன் கண்ணனை கோபித்துக் கொள்வார்; கண்டிப்பார். ஆனால் யசோதை அன்பை மட்டுமே அவனிடத்தில் காட்டுவாள். அவன் செய்யும் தீம்புகளை கண்டு உகப்பாள். அதனால் தந்தையிடம் பணிவான மகனாக வருபவன், தாயிடத்தில் வரும்போது ஒரு சிங்கக்குட்டி போல செருக்குத் தோன்ற வருவானாம். அன்றியும், இவர்கள் சிறுமிகள் என்றதாலே, இவன் அவர்களுக்கு நிகரான இளஞ்சிங்கம்.

கார்மேனி
கார்மேகம் எப்படி வெய்யில் காலத்தில் தாகத்தால் தவித்தவர்களுக்கு தண்ணீர் தருகிறதோ, அதுபோல நம்முடைய அனைத்துவித தாபங்களையும் ஆற்றக்கூடிய வடிவு இவனது திருமேனி. தாய்தந்தையர்கள் இவர்களை (கோபியர்களை) அடைத்து வைத்தாலும் இவனை மறக்க முடியாதபடி இருக்கும் வடிவழகு இந்த கார்மேனி.

செங்கண்:
இவனது திருமேனிக்கு மாற்று நிறமான சிவப்பு நிறக் கண்கள் கொண்டவன். செங்கண் என்றது இவனது வாத்சல்யத்தைக் காட்டும். கன்றினிடத்தில் தாய்ப் பசுவிற்கு இருக்கும் குணம் இந்த வாத்சல்யம். அதாவது குற்றத்தையும் குணமாகக் கொள்ளுவது. குளிர நோக்கும் கண்கள்.

கதிர் மதியம் போல் முகத்தான்:
கதிர் என்பது சூரியனையும், மதி என்பது சந்திரனையும் குறிக்கும் சொற்கள்.  சந்திரனுடைய குளிர்ந்த கதிர்களாலே குளிர்ச்சி ஊட்டப்பட்ட சூரியனைப் போல ஒளி படைத்த கோவிந்தன் என்று மகாபாரதம் சொல்லவதைப் போல விரோத பாவம் கொண்டவர்களுக்கு அணுக முடியாதவனாகவும், தன்னிடத்தில் பிரேமை கொண்டவர்களுக்கு சந்திரனைப் போல குளிர்ச்சி உடையவனாகவும் இருப்பவன்.

நாராயணனே
கார்மேனியும், சிவந்த திருக்கண்களை உடையவனும் ஆன இவனே குன்றமேந்திக் குளிர் மழை காத்தது போன்ற அமானுஷ்யமான செயலைச் செய்ததால் இவனே நாராயணன். சர்வ ஸ்வாமி, சர்வ ரக்ஷகன் இவனே என்றபடியால் இந்த ஏவகாரம்.
நமக்கே:
நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காமல் நமக்குக் காரியம் செய்பவன் என்றதால் நமக்கே. நம்மால் ஒரு முயற்சியும் செய்யாமல், அவனாலேயே பேறு என்று தீர்மானித்து, அவன் கையையே எதிர்பார்த்திருக்கும் நமக்கே.
பறை தருவான்:
பறை என்றது ஒரு வாத்தியம். ஆனால் இவர்கள் குறிப்பிடுவது பகவத் கைங்கர்யம். பறை என்ற சொல் கைங்கர்யத்தைக் காட்டுமோ எனில், திருப்பாவையின் இறுதியில் இற்றைப் பறை கொள்வான் அன்று காண்என்கிறார்கள். நாங்கள் கேட்பது இந்தப் பறை அல்ல; எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உந்தன்னோடு உற்றோமே ஆவோம், உனக்கே நாமாட் செய்வோம் என்கிற கைங்கர்யமாகிய பறைஎன்றபடியே.
பாரோர் புகழ:
ஆய்ப்பாடிச் சிறுமிகள் நோன்பு நோற்றதால் மழை பெய்து நாடு செழித்தது; பயிர் வளங்கள் பெருகின. அதனால் கண்ணனைப் பார்க்கக்கூடாது; அவனுடன் சேரக்கூடாது என்று தடுத்து நிறுத்திய இடையர்கள் உட்பட உலகத்தினர் அனைவரும் இவர்களைப் புகழும்படி ஆயிற்று.
படிந்து ஏலோர் எம்பாவாய்:
எங்களது நோன்பில் நுழைந்து திளைத்து நீராட வாருங்கோள். இது எங்கள் பாவை நோன்பு ஆகும் என்றபடி.