புதன், 4 நவம்பர், 2015

‘உன்னைக் கண் தேடுதே.....ஹிக்!



நன்றி: கூகுள்



உன்னைக் கண் தேடுதே.....ஹிக்!
உ...............ன் எழில் காணவே.......வே........ஏ......ஏ.......ஹிக்! உளம் நாடுதே.... ஹிக்!
உறங்காமலே என் .....ன்  ........  ன்   மனம் வாடுதே...ஏ...ஏ....
உன்னை.......ஹிக்! .......என்.....கண்........தேடுதே.........!

அந்த காலத்து கருப்பு வெள்ளை டாக்சியில் இந்த விக்கல்பாட்டை நான் பாடியபடியே அப்பா, அம்மா, சகோதர சகோதரிகளுடன் வந்து கொண்டிருந்தேன்.  டிரைவர் மாமா சொன்னார்: பாப்பா நல்லா பாடுது ...! பெரிசா ஆன பி. சுசீலா மாதிரியே வரும் போல....!
 நல்லகாலம், டிரைவர் மாமாவின் ஜோசியம் பலிக்கவில்லை! பி.சுசீலா தப்பிச்சார்!

இப்படிப் பாடிண்டே நாங்க வந்து சேர்ந்த இடம் சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீச்வரன் பேட்டைல இருக்கற நாகப்பையர் தெரு. வந்து சேர்ந்த இடத்தைப் பற்றிச் சொல்றதுக்கு முன்னால இந்த பாட்டைப் பற்றி சொல்லியாகணும். கணவனே கண்கண்ட தெய்வம்’ (இளம் வயது ஜெமினி அவருக்கு அக்கா போல அஞ்சலி தேவி!) படத்தில் வரும் இந்தப் பாட்டுல பாடல் வரிகளை விட விக்கல்பிரபலமானது. நான் மிகச் சரியாக விக்கி, எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருப்பேன். இந்தப் பாடலை ரொம்பவும் ரசிச்சு ரசிச்சு (விக்கி விக்கி!) பாடினதாலோ என்னவோ எனது இசைப்பயணம் விக்கித்து(நின்று)விட்டது!

திருவல்லிக்கேணில நாகப்பையர் தெருவுல (இப்போதைய பெயர் என்னவோ, அந்தத் தெருவுக்கு நாகப்பா தெரு?) நாங்க குடியிருந்த மாடிவீடும், முக்கியமா மாடிப்படிகளும் இன்னமும் நினைவில பசுமையாக இருக்கு. எனக்கு நினைவு தெரிய ஆரம்பிச்சது இங்கதான். அதுதான் முதல் நினைவு - எனது சிற்றறிவில அப்போது நடந்த சம்பவங்களில் இருந்துதான் நினைவு இருக்கிறது. இந்த வீட்டிற்கு வருவதற்கு முன் நாங்க புரசைவாக்கத்துல இருந்ததா அம்மா சொல்லுவா. அங்கு நடந்ததெல்லாம் அவ்வளவா, ஏன் துளிக்கூட நினைவில்ல எனக்கு. மாதம் ஒருமுறை மெரீனா பீச்சுக்கு எல்லோருமா போவோம்; ஓரணாவிற்கு(!) தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல் வாங்கி சாப்பிடுவோம் (எல்லாருக்குமா சேர்த்து ஓரணாவுக்கு சுண்டலா, ஒவ்வொருத்தருக்கும் ஓரணாவுக்கா? தெரியல) அப்படின்னு அம்மா எப்போதாவது அசைபோடுவா. நான் திறந்தவாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பேன் அப்போ சாப்பிட்ட சுண்டலை நினைச்சோ என்னவோ? அம்மா சொல்வதற்கு சாட்சியாக நானும் எங்க அக்காவும் மெரீனா பீச்ல விளையாடற கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒண்ணு இன்னும் எங்க வீட்ல இருக்கு.

திருவல்லிக்கேணி வீட்டில கீழே ஒரு குடும்பம். மேல நாங்க. எங்க போர்ஷனுக்கு போறதுக்கு குறுகலா மாடிப்படிகள், சிமென்ட் கைப்பிடி சுவருடன். படிகள் செங்குத்தாக ஏறும். பாதி ஏறினவுடனே ஒரு திருப்பம். அதாவது, ஒரு மிகக்குறுகலான வளைவு. மறுபடி செங்குத்தான படிகள். அந்த வீட்டில் எத்தனை வருடங்கள் இருந்தோம்னு நினைவுல இல்லை. ஆனா என் தம்பி கணக்கில்லாத தடவை அந்த மாடிப்படியில உருண்டு விழுந்தது நினைவுல இருக்கிறது. எனக்கு அப்போது 5 வயசு இருக்கலாம். ஒன்றாம் வகுப்பில் இருந்ததால் இந்தக் கணக்கு. அவன் என்னைவிட மூன்று வயது சிறியவன்.

நாகப்பய்யர் தெருவுல நாங்க இருந்தது ரொம்ப சின்ன(!?), 5 படுக்கை (அறை)  கொண்ட வீடு. மாடிப்படிகளை தாண்டினவுடன் ஒரு குட்டி ரேழி. அதை ஒட்டினாப்ல சின்ன ரூம். அதுதான் எங்க கிச்சன், டைனிங் ஹால், ஸ்டோர் ரூம் அதாவது த்ரீ இன் ஒன் ரூம். அதை ஒட்டி இன்னொரு சற்றுப் பெரிய அறை. அதுதான் நாங்க அஞ்சு பேரும் அம்மா ,அப்பா, என் அக்கா, நான், என் தம்பி - படுத்துக்கற 5 படுக்கை அறை! 

அம்மா எங்க வீட்டு - மாடிக் கதவை சாத்தியே வைச்சிருப்பா. அசந்து மறந்து நாங்க யாராவது திறந்துட்டு மறுபடி சாத்த மறந்துட்டா போச்சு!  அடுத்த நொடி ஓ!ன்னு ஒரு அலறல் கேட்கும். என்னோட ரெண்டு வயசு தம்பி தத்தக்கா பித்தக்கான்னு  மாடிப்படில எறங்க போயி, கால் தடுக்கி, அந்த படிகளில் உருண்டுண்டு  இருப்பான். ஓடி போய் அவனைப் பிடி!ன்னு அம்மா கத்துவா. நானும் என் அக்காவும் (என்னை விட 3 வயசு பெரியவ)  விழுந்தடிச்சுண்டு ஓடறதுகுள்ள அவன் கடைசிப் படியில் விழுந்து கிடப்பான்.  உதட்டுல அடிபட்டோ, பல்லில் அடிபட்டோ அழுதுண்டிருப்பான். அம்மா கிட்டேருந்து அவனுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் சேர்த்து திட்டு விழும் – ‘எந்த முட்டாள் கதவை சாத்த மறந்தது?’ ன்னு. ஒருநா இப்படி அடிபட்டுதே, இனிமே படில எறங்காம இருப்பானா? சின்னக் குழந்தைதானே? அடுத்த நாளும் இதே கதை தான்! மறுபடி மறுபடி  மாடிப்படியில உருளல் தான்! மறக்கவே முடியாத மாடிப்படிகள்!

இந்தக் காலம் போல அப்போல்லாம் குழந்தை பிறக்கறதுக்கு முன்னால ஸ்கூல் அட்மிஷன், பிறந்தவோடனே ப்ளே ஹோம்ல சேர்க்கறது எல்லாம் கிடையாது. அஞ்சு வயசுவரைக்கும் வீட்டுலேயே கொட்டம். கிண்ட(ல்)ர் கார்டன் எல்லாம் கிடையாது.  நேரா ஒண்ணாங்கிளாஸ். ஸ்லேட், பலப்பம் தான் ரெண்டாவது வரைக்கும். மூணாவதுலேருந்து பென்சில் நோட்புக். அஞ்சாவதுல தான் ஆங்கிலம். மத்த சப்ஜெக்ட் எல்லாம் தமிழ்ல தான்.

நாங்க படிச்சது கனகவல்லி எலி(மெண்டரி) ஸ்கூலில். பள்ளிகூட வாசல்ல கனகவல்லி எலி. பள்ளிக்கூடம்னு ஆங்கிலத்துல (Kanakavalli Ele. School) எழுதியிருக்கும் அந்த போர்டுல இடமில்லாததால!

எங்களை பள்ளிகூடத்துல சேர்த்த பெருமை எங்க மாமா திருமஞ்சனம் சுந்தரராஜனை சேர்ந்தது. என் அக்கா, நான், என் தம்பி மூணு பேருமே இந்த பள்ளிகூடத்துல தான் அஞ்சாவது வரை படிச்சோம். மாமாதான் எங்களை அழைச்சுண்டு போய் ஸ்கூல்ல சேர்த்தது. அதுவரை ரஜினி ஆக இருந்த நான் பள்ளிகூடத்தில் சேரும்போது ரஞ்சனியாக மாமாவின் கைங்கர்யம் மாறினேன்.


தொடரும்



அதீதம் இதழில் வெளிவரும் எனது தொடர் 

4 கருத்துகள்:

  1. // கிண்ட(ல்)ர் கார்டன், எலி(மெண்டரி) ஸ்கூல் // ஹா... ஹா...

    தொடர்கிறேன் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனபாலன்!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார்!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு