புதன், 22 ஜூன், 2016

செங்கமலமும் நானும்




 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx_B4jyHRd9cb1LTMRx5bWoYISw3lYsyvKnnJqmRYwFM9R7N2E7YLBV7fuL-UGPcGlNcgvGckEAFPaGooxeDBUtR_mB78a8veepTzPvccaXRwP32SodmVCpqiVZc23uAMPmINVJGPu-Es/s1600/little-indian-girls.jpg

என்னுடைய தையல்கலை ஆர்வம் இன்னும் என்னைவிடவில்லை! சரி, வாருங்கள் மறுபடி எங்கள் பள்ளி நாட்களுக்குத் திரும்பலாம்.


6ஆம் வகுப்பிலிருந்துதான் நாங்கள் பேனா பயன்படுத்த ஆரம்பித்தோம். பலவருடங்களாக பென்சிலில் அழுத்தி எழுதி எழுதி பேனாவையும் அழுத்தினால் நிப் உடையும். மசி தீர்ந்துவிடும். நோட்டுப் புத்தகத்தில் எழுதும்போது கீறல் கீறலாக விழும். சரியாக எழுதாது. நல்ல பேனா எடுத்துக்கொண்டு போனால் - முதலில் வாங்கியே கொடுக்க மாட்டார்கள். ஒருவேளை வாங்கிக் கொடுத்தாலும் - தொலைந்து போகும். ஒரு பேனா தான், இரண்டாவது பேனா வேண்டும் என்று பெற்றோர்களிடம் கேட்க முடியாது. இப்படி எத்தனையோ தொல்லைகள்.

இந்த நிலையில் தான் பக்கத்துச் செட்டியார் கடையில் மசி கிடைக்கும் என்பது எங்கள் எல்லோருக்கும் பெரிய விஷயமாக இருந்தது. அவரிடமே பேனாக்களும் விற்பனைக்கு இருந்தன.
செட்டியார் கடையில் ஒருமுறையாவது மசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அம்மாவிடம் கேட்டு காலணா காசும் வாங்கி வந்துவிட்டேன். மதிய இடைவெளியில் கடைக்குப் போனால் ஜன்னல் மூடியிருந்தது. ஆபத்பாந்தவி செங்கமலத்திடம் வழக்கம்போல மூன்று சொட்டு மசி வாங்கிக்கொண்டு அன்றைய பொழுதைக் கழித்தேன். இத்துடன் தான் இந்தத் தொடரின் 16 வது பகுதியை நிறுத்தியிருந்தேன். அதற்குள் சரித்திர நிகழ்வுகள் சிலவற்றை சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.

அன்றைக்கு சாயங்காலம் பள்ளிவிட்டு வீட்டிற்குப் போகும்போது செட்டியார் ஜன்னலைத் திறந்து வைத்திருந்தார். பேனாவிற்கு மசி போட்டுக் கொள்ளலாம் என்று ஓடினேன். ஆனால் செங்கமலம் இல்லையே! நாளைக்கு அவளுடன் வரலாம் என்று நினைத்துக்கொண்டு செட்டியாரிடம் கேட்டேன் ‘நாளைக்கு மதிய இடைவெளியில் கடையை திறந்திருப்பீங்களா?’ என்று. ‘ஏம்மா?’ என்றார். ‘இல்லை, இன்னைக்கு பேனாவிற்கு மசி போடலாம்ன்னு வந்தோம், ஜன்னல் மூடியிருந்தது....!’ என்றேன். ‘அடக் கடவுளே! ஜன்னல் மூடியிருந்தால் முன்பக்கமா வரவேண்டியதுதானே?’ என்றார். ‘ஐயையோ...அப்போ கடை திறந்திருந்ததா?’ என்றேன். ‘ஆமாம்மா, நான் என்னிக்குக் கடையை மூடியிருக்கேன்?’ என்றார் செட்டியார். கடையின் முன்பக்கம் என்பது எத்தனை முக்கியமானது என்று அன்றைக்குப் புரிந்தது!

தினமும் சாயங்காலம் பள்ளி விட்டவுடன், வாசலிலேயே நானும் செங்கமலமும் பிரியாவிடை பெற்றுக் கொள்வோம். அது ஒரு பெரிய ரிச்சுவல். என்னவோ பலநாட்கள் பிரிந்து இருந்ததை போலவும் இனிமேல் பார்க்கவே மாட்டோம் என்பது போலவும் இருவரும் ‘போயிட்டு வரேன்’, போயிட்டு வரேன்’ என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டு எதிர் எதிர் திசையில் நடப்போம். வீட்டிற்குப் போனாலும் ‘செங்கமலம் இதைச் சொன்னாள், அதைச் சொன்னாள் என்று அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பேன் நான். அவளும் அப்படித்தானாம். ‘நாமதாண்டி ரொம்ப நெருக்கமான தோழிகள்’ என்று என்று இருவரும் அடிக்கடி சொல்லிக்கொள்வோம்.

செங்கமலத்திற்கு நிறைய அக்காக்கள், அண்ணாக்கள், தம்பிகள், தங்கைகள்  ஒருநாள் என் அம்மாவிடம் அனுமதி வாங்கி நான் செங்கமலம் வீட்டிற்குப் போனேன். அவர்கள் வீட்டில் ஒரு பாப்பா பாயில் படுத்துக் கொண்டிருந்தது. செங்கமலத்தின் லேட்டஸ்ட் தம்பி அது. குச்சி குச்சியாகக் கையும் காலுமாக அந்தக் குழந்தையைப் பார்க்க எனக்கு ஒரு பக்கம் பயம்; இன்னொரு பக்கம் பாவம். ‘என்ன இப்படி இருக்கிறது?’ என்று அவளை கேட்டேன். ‘சீக்கிரமாகப் பிறந்துவிட்டதாம்’ என்றாள் அவள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அதனால் அதற்கு தினமும் காட்லிவர்ஆயில் மருந்து கொடுக்கிறோம்’ என்றாள் தொடர்ந்து. எனக்கு அதுவும் புரியவில்லை. ‘இப்போ பாரேன் ஒரு வேடிக்கையை’ என்று சொல்லியபடியே செங்கமலம் அந்த அறையின் ஒரு ஆணியில் மாட்டியிருந்த  ஒரு துணிப்பையைத் தொட்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தை ஈனஸ்வரத்தில் அழ ஆரம்பித்தது. எனக்கு புதிராக இருந்தது. ‘ஏன் நீ அந்தப் பையைத் தொட்டதும் குழந்தை அழுகிறது?’ என்று கேட்டேன். ‘அதில் தான் அந்த காட்லிவர்ஆயில் மருந்து இருக்கிறது. என் அம்மா தினமும் அதைப் பாலில் கலந்து அதற்குப் போட்டுவாள். அதற்கு அந்த வாசனையே பிடிக்காது. அதனால் தான் பையைத் தொட்டாலே அழுகிறது...’ என்று சொல்லி சிரித்தாள். ‘பாவம்டி, அப்படிச் செய்யாதே!’ நான் அவர்கள் வீட்டில் இருந்த நேரம் முழுவதும் அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தேன். செங்கமலம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள் மூச்சு விடாமல். ஆனால் எனது கவனம் அந்தக் குழந்தை மீதே இருந்தது. கொஞ்ச நேரத்தில் என் முகமும் அதற்குப் பழகிப் போய் என்னைப் பார்த்துச் சிரித்தது. சோனியாக இருந்ததே தவிர சிரிக்கும்போது அதன் கண்கள் பளிச்சென்று தெரிந்தன. என்னுடைய ஆரம்பப்பயம் போய் அதனுடன் சிரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.

வீட்டிற்கு வந்தும் என் நினைவு அதன் மேலேயே இருந்தது. என் அம்மாவிடமும் என் பயம், அப்புறம் அதனுடன் நான் பேசியது என்று எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனேன். ‘ஏன்மா அந்த பாப்பா அத்தனை ஒல்லியாக இருக்கு?’ ஏன் அதற்கு காட்லிவர்ஆயில் கொடுக்கிறார்கள்? அது எப்ப நடக்கும்?’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தேன்.

இத்தனை வருடங்கள் கழித்தும் எனக்கு இந்த நிகழ்ச்சி நன்றாக நினைவு இருக்கிறது என்றால் அந்தக் குழந்தை என்மீது ஏற்படுத்திய தாக்கம் தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் செங்கமலத்தின் வீட்டிற்குப் போகவும் இல்லை. அந்தக் குழந்தையைப் பார்க்கவும் இல்லை. எங்கோ ஓரிடத்தில் இப்போது அந்தப் பாப்பா பெரியவனாகி நன்றாக இருப்பான் என்று தான் தோன்றுகிறது.

இரண்டு வருடங்கள் தான் நானும் செங்கமலமும் ஒன்றாகப் படித்தது. பிறகு நாங்கள் புரசைவாக்கம் வந்துவிட்டோம். செங்கமலத்தின் நட்பும் அப்படியே முடிந்து போயிற்று.

அசை போடுதல் தொடரும்......
.

1 கருத்து:

  1. அன்பு ரஞ்சனி,படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.
    எங்களுக்கும் ஆறாம் வகுப்பில் தான் மை,பேனா கொடுக்கப் பட்டது.
    இதே அனுபவம் தான். தோழியும் பத்து என்கிற பத்மா.
    பேசுவோமோ பேசுவோமோ அப்படிப் பேசுவோம்.
    மிக நன்றி ரஞ்சனி.புரசவாக்கத்தில் நான் இருந்த போது நீங்கள் இருந்தீர்களோ தெரியவில்லை.
    நல்ல இடம் .இப்போது மாறி இருக்கிறது.

    பதிலளிநீக்கு